புகைப்பது தற்கொலைக்குச் சமம். புகைப்பது நாமே மரணத்தை விரைந்து அழைத்தது போலாகும். புகைத்தபின் வாயில் உள்ள திசுக்களை ஆராய்ந்ததில், திசுக்கள் சுறுசுறுப்பின்றி இருந்ததாகவும் காணப்பட்டது. புகை பிடிப்பதால் நம் வாயிலிருந்து மூச்சு குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் நச்சுப் பொருள் ' நிக்கோடின்' அங்குள்ள உறிஞ்சும் திசுக்களைப் பாதிக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் சிக்கல் உருவாகலாம் என்றும், இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்கி மாரடைப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் ஒரு கணக்குப் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் புகைத்தபின் காலியான பாக்கெட்டை ஓரிடத்தில் சேர்த்து வையுங்கள். ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் எவ்வளவு பாக்கெட் சிகரெட் புகைத்திருப்பீர்கள், எவ்வளவு நீங்கள் சம்பாதித்த பணம் செலவு செய்தீர்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அவ்வளவு பணம் செலவு செய்து, உங்கள் உடல் நலத்தைக் கெடுப்பானேன்? அந்தளவு பணத்தில் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு பொருட்கள் வாங்கி இருக்கலாம்? உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எவ்வளவு செலவு செய்து திருப்திப்படுத்தியிருக்கலாம்? சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவர் தானாக புகைப்பதை விட, பிறர் விடும் புகையை சுவாசிப்பது அதிக கெடுதலைத் தரும். எனவே புகைப்பதை மன உறுதியுடன் நிறுத்துங்கள்.புகைப்பவர் அருகில் நிற்காதீர்கள். புகை உடலுக்குப் பகை. புகைப்பதனால் ஏற்படும் வாய் நாற்றம் உறவினர்களையும், நண்பர்களையும் நம்மை விட்டு விலகியிருக்கச் செய்யும். பணம் செலவு செய்து நம் உடல் நலத்தைக் கெடுக்கும் புகைப் பழக்கத்தை நிறுத்துவோம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவத்தையும் பெறுவோம். நோயற்ற - இருமல் மற்றும் காச நோய், மாரடைப்பு, நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வைப் அடைவோம்.

- வ.க.கன்னியப்பன். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It