சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டு வயிற்றைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறிக் கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை.

முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.

சமைக்காத இயற்கை உணவுகள் : சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள், மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.

இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள். வயதானவர்களுக்கும்,பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் செரிமானமாகும் எளிய உணவுகள். நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை.

எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாறத் தயங்க வேண்டாம்.

முளைக் கோதுமை தேங்காய்ப்பால்:

விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடுக. இதைக் காயவைத்து வறுத்து அரைத்துக்கொள்க. அரைத்த மாவைச் சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்துக. தேவையானபோது ஒரு குவளை நீரில் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்தும் பருகலாம். நல்ல சுவையுடன் இருக்கும்.

பலன்கள் : புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும். உடல் பலம் பெருகும். உயர் இரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், தொப்பை, இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.

காரட் கீர் :

500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும். 2 மூடி தேங்காய்த்துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.

பலன்கள் : கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலையில் கொடுக்கலாம். தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும் குடல் புண் சரியாகும்.

முளை தானியப் பயறு வகைகள் :

எட்டு மணிநேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாள்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளைச் சாப்பிடுவதால் குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெறமுடியும். சமைக்காமல் அப்படியே சாப்பிடும்போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது. முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும் கூடிய வரை ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.

பச்சைப்பயறு :

நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிட வேண்டும். காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும். பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலைச் சிற்றுண்டிக்குப் பதிலாகச் சாப்பிடலாம்.

பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

முளை கட்டிய வெந்தயம் :

சிறிது நேரம் ஊறவைத்து ஈரப் பருத்தித் துணியில் முளை கட்டிச் சாப்பிடலாம்.

பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கிண்ணம் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட குடல் புண்ணையும் குணப்படுத்தும்.

நன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2015

Pin It