பெரிய நகரங்களில் இன்று பகலிலேயே படுகொலை நடைபெறுகிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதிய பெண்மணியைக் கொடியவன் ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி அடிக் கடி நாளிதழில் வெளிவருகிறது. திட்டமிட்டு நடை பெறும் இந்தப் படுகொலைச் செய்தியைப் படிப்ப வர் நெஞ்சில் பரிதாப உணர்வு படர்கிறது. இந்தக் கொலைகாரர்களைக் காவலர் தேடுகின்றனர். பிடிபட்டவரைச் சிறையில் அடைக்கின்றனர். அவர்களுக்குத் தண்டனை கிடைக்கின்றது.

இன்று கண்ணுக்குத் தெரியாத கொலை காரர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் பல வீடுகளின் சமையல் அறையில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பணம் தந்து விரும்பி வாங்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் தரப்படுகின்றது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி மகிழ்கின்றனர். இந்தக் கொலைகாரர்கள் மெதுவாகக் கொல்கின்றனர். இரத்தம் வெளிப் படாமல் கொலை செய்கின்றனர். இந்தக் கொலை காரர்கள் பரவலாகி வருகின்றனர். உயிரில்லாத இந்தக் கொலைகாரர்கள் மனித உயிர்களை மென்மை நிலையில் மாய்க்கின்றனர். இவர்கள் அஃறிணைப் பொருள் வடிவத்தில் இருக்கின் றனர்.

வசதி படைத்தவர்கள் வீட்டில் இன்று பிளாஸ்டிக் புட்டிகள் அலமாரிகளில் அலங்கார மாக அமர்ந்திருக்கும். அவை, தமக்குள் சில உணவுப் பொருள்களைக் கொண்டிருக்கும்.  இந்தப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தர வரிசை எண் உள்ளது. இந்த எண் 1 முதல் 7 வரை இருக்கின்றது. இந்த எண்கள் பிளாஸ்டிக் பொருளின் நச்சுத் தன்மையின் அளவைக் குறிக்கின்றன. மூன்று என்ற தரவரிசை எண்ணுக்குரிய பிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கினால் டையாக்சின் ஹைட்ரஜன் குளோரைடு ஆகிய நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருள்கள் வெளிப்படும். இவை உடல் நலத்தைக் கெடுக்கக்கூடியவை. டையாக்சின் புற்று நோயைத் தரக்கூடியது. இது இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கும் தன்மை கொண்டது. பொதுவாகப் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் உடல் நலத்தைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தோசை சுடுவதற்குக் கடாய் எனப்படும் பாத்திரம் பயன்படுகிறது. தற்போது எண்ணெய் தடவப்படாமல் - தோசை மாவு ஒட்டாத - புதுமையான கடாய் கடைகளில் விற்கப்படுகிறது. இது மிகப் பலரால் விரும்பப் படுகிறது. இதனால் எண்ணெய் மிச்சமாகிறது. எண்ணெய் தடவும் நேரம் மிச்சமாகிறது. இந்தக் கடாயின் மேல் வேதியியல் பூச்சு படிந்துள்ளது. அடுப்பின் மேல் வைத்துக் கடாயைச் சூடாக்கும்போது, அந்த வேதியியல் பூச்சு டாக்சின் (நச்சுப்பொருளை) வெளிப்படுத்துகிறது. இது, மனிதனின் கணையம், கல்லீரல் முதலியவற்றைப் பாதிக்கிறது. இது உடல் நலத்தைக் கெடுக்கிறது. மெல்ல மரணத்தை அழைக்கிறது.

பீங்கான் கோப்பைகள் நாகரிகத்தின் சின்னமாகப் போற்றப்படுகின்றன. இவை பள பளப்புடன் காணப்படுகின்றன. பார்ப்பவரின் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. இவற்றின் தயாரிப்பில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரீயக் கலப்பு, முறைப்படி நடை பெறாவிட்டால், உடல் நலம் கெடும் நிலை அமையும். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பையில் சூடான பானம் ஊற்றப் பட்டால் இளகும். காரீயம், மெதுவாகப் பானத்துடன் கலக்கும். குடிப்பவர் உடலைக் கெடுக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாக்கும்.

அலுமினியப் பாத்திரங்கள் இன்று குடிசையிலும் குடியேறிவிட்டன. முறையான அழுத்தம் பெறாத (Anodized Aluminium)  ஆகாத அலுமினியப் பாத்திரம் உடம்பைக் கெடுத்துவிடும். அல்ஹிமர் (Alzhemer)  நோய்க்கு வரவேற்பு மாலை போடும்.

வசதியற்றவர்களின் வீட்டில் போதிய இடப்பரப்பு இல்லாதவர் வீட்டில் சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வீற்றிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்து அடி தூரத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். குடிசைக்குள் அல்லது மிகச் சிறிய வீட்டில் இது நடைபெறுவதில்லை. இதனால், முதல் நிலையில் கண்பார்வை கெடுகிறது. உடல் பயிற்சி செய்யமுடியாத நிலை ஏற்படுவதால், உடல் நலமும் பாதிக்கிறது.

புகை பிடிப்பதால், (பீடி, சுருட்டு, சிகரெட் பிடிப்பதால் வரும்) தீமைகளுக்கு இணையான உடல்நலக் கேடுகள் வருகின்றன என்று ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. மூன்று மணி நேரத்திற்கு அதிகமாகத் தினந்தோறும் தொலைக்காட்சி பார்த்தால் மாரடைப்பு நோய் வரும் என்று ஆய்வு அறிவிக்கிறது. மிக அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் இளம் வயதினருக்கு இறப்பு நேரும் என்று ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (ஹார்வர்டு மக்கள் உடல்நலக் கல்வியகம்) அறிவித்துள்ளது.

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It