கீற்றில் தேட...

என்ன.... பரமி மாறி இருக்கு...- தோட்டத்து பக்கம் எட்டிப்பார்த்த பெருந்தோப்பு பெரியம்மா முனகியது.

கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்க பார்க்கவே பரமி அருகே வந்து விட்டிருந்தாள்.

பரமி தான்... - வாய்க்குள் சொல்லிக் கொண்டே வாய் விட்டு பேசியது.

"இதே என்னடி நோம்பி நாளும் அதுமா காலங்காத்தாலயே இப்பிடி உலாத்திட்டு திரியற..."

இடுங்கிய கண்களை வெளியே விட்டிருந்தது பெரியம்மா.

"எங்கப்பன காணம்... அதா அம்மா தேடிட்டு வர சொல்லுச்சு..." - ஒத்த சடையில் சுருண்டிருந்த வறண்ட கூந்தல் அந்தக் காலை நேர காற்றுக்குப் பிசிறாடியது.

"தீவாவளின்னைக்கு வீட்டோட இருந்தா என்னவாம் உங்கப்பனுக்கு..." - முனங்கிய பெரியம்மா.. "ஏய் மணியா... தங்கராசு இந்தப் பக்கம் வந்தானா..?" என்று ஒரு இழுவை இழுத்தது. வீட்டுக்குள் இருந்து வந்த குரலில் ஆசுவாசம். எதையோ முழுங்கிக் கொண்டே "இல்லம்மா.. நான் பாக்கல" என்றது.

"இங்க வல்லியாம் பரமி... கெளப்பு கடைக்குகீற போயிருப்பன்... இல்லனா மேக்க உங்க சித்தப்பனூட்டுக்குப் போயிருக்கானோ என்னவோ.. நோம்பி நாளுமா இப்டி லாவிக்கிட்டுருக்காத. போயி குளிச்சுட்டு புது துணி போடு புள்ள.. பாரு காஞ்சு போயிருக்கு மூஞ்சி... ஆமா புது துணி வாங்கி குடுத்தானா உங்கப்பன்..." என்றது பெரியம்மா.

கேட்டும் கேட்காமல் "எங்க போயிருக்கும்...?" தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு நகர்ந்தாள்.

அடுத்த அரைமணியில் மீண்டும் அந்தத் தோட்டத்தையே சுற்றிக் கொண்டிருந்தாள். இந்த முறை வீட்டுக்கு பின்புறம் தேடிக் கொண்டிருந்தாள்.

பெரியம்மா கண்ணில் மீண்டும் விழுந்து விட்டாள்.

என்ன இவ இப்பிடி சுத்திகிட்டு திரியறா. கேட்டது. "ஏய் பரமி... என்ன வெயில்ல உலாத்துறதுனு வேண்டுதலா..." வெற்றிலையை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டது.

"இல்ல பெரிம்மா.. மாடு அத்துக்கிட்டு வந்திருச்சு.. புடிச்சுட்டு வர சொல்லுச்சு எங்கம்மா" என்றாள். அவள் கண்களில் சூரியக் குமிழ். உள்ளொடுங்கிய கன்னங்களில் உறுத்து இல்லை. ஒல்லி உடம்பில் ஒவ்வாமையை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

"மாடா.." - வாய்க்குள்ளாகவே மென்று கொண்ட பெரியம்மா... யோசனையோடே "இந்தப் பக்கம் வல்லியே... ஆமா உங்கப்பன் வந்துட்டானா...?" என்றது. வெற்றிலை மெல்லும் சத்தமும் கூட சேர்ந்து கேட்டது.

அதற்குள் அவள் நகர்ந்து விட்டிருந்தாள். பெரியப்பா குடையை மடக்கிக் கொண்டே வீட்டுக்குள் நுழைய... பெரியம்மா.. விஷயத்தைச் சொல்ல...

"என்ன சொல்ற.. இத்தன நேரம் அவன் கூடதா பேசிட்டு வரேன். கத்திரிக்காய் பாத்திக்கு தண்ணி விட்டுட்டுருந்தான். மாடா.. அது அங்கதான கட்டிருக்கு..." - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பசிக்குது என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

பெரியம்மா கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தது. தூரத்தில் கிழக்கு நோக்கி நடப்பது போல போய்க்கொண்டிருந்த பரமியின் கண்கள் முழுக்க வீட்டைச் சுற்றியே இருந்தது. அப்படியே மீண்டும் வீட்டு பக்கமாகவே நடந்து கொண்டிருந்தாள்.

"ஏய் இவளே.. இப்ப என்னவாம்..." என்றது பெரியம்மா. மனதுக்குள் கணக்கு போட்டு விட்டது.

"எங்கப்பனை தேடிட்டு வந்தன்ல... பாக்கட்டுலருந்த ஒரு ரூவாயத் தொலைச்சிட்டேன். அதான் தேடிட்டுருக்கன்" என்றாள். பாவாடை பாக்கெட்டின் உள் புறத்தை வெளியே இழுத்துக் காட்டினாள். கை போகும் அளவுக்கு ஓட்டை.

"ம்ஹும் மாட்டையும் காணோம். அப்பனையும் காணோம். இதுல இந்த ஒத்தை ரூவா வேற..." - சொன்னவளின் தொண்டைக் குழியில் எச்சில் இறங்கிக் கொண்டே இருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது. மூச்சை இழுத்து இழுத்து உள் நிறுத்திக் கொள்வதையும் பார்க்க முடிந்தது. நெற்றி சுருக்கி சிந்தை நிறுத்தி ஆழமாய் பார்த்த பெரியம்மாவுக்கு விஷயம் புலப்பட்டு விட்டது.

"அப்புறம் தேடலாம்...சித்த உள்ள வா... வந்து காத்தாடிக்கு கீல சித்த நேரம் உக்காந்துட்டு போ" என்றழைக்க... தயக்கத்தோடே வந்து வாசலில் நின்றாள்.

"அட வானா.... என்ன யோசனை. நம்மூடுதான..." என்று இழுக்காதே குறையாக உள்ளே இழுத்து திண்ணையில் அமர வைத்தது பெரியம்மா. அமர்ந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் சட்டை நுனியை இழுத்து விட்டுக்கொண்டே இருந்தாள். அவள் காது வீட்டுக்குள் எதையோ தேடுவதை உணர முடிந்தது. அவள் வாசம் பிடித்துக் கொண்டே இருந்தாள்.

அவளையே பார்த்த பெரியம்மா "இரு வரேன்" என்று உள்ளே சென்று தட்டில் ரெண்டு தோசையை வைத்து எடுத்து வந்தது.

"இதே இத தின்னு... அப்புறம் தேடலாம். காசு இங்கதான் எங்கயாச்சும் கிடக்கும். நானே தேடித் தர்றேன்.." என்று அழுத்தமாக சொல்லி விட்டு வேகமாய் உள்ளே சென்றது.

இத்தனை நேரம் வாசத்தில் மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்த தோசையை ஆசை ஆசையாக வேக வேகமாக பிய்த்து பிய்த்து வாயில் போட்டாள். பாதி குழம்பில் தொட்டும்... பாதி வெறுமனேவும் வாயில் போட்டு குதப்பினாள். அதற்குள் உள்ளே இன்னொரு தோசை ஊற்றும் சொய்ங் சத்தம் கேட்க... முகம் பூரித்து விட்டாள். படபடவென வெளியேறிய வெந்து கொண்டிருக்கும் தோசையின் வாசம் அவளை மலர்த்தி எடுத்தது. உள்ளொடுங்கிருந்த கன்னங்களில் பூரிப்பு. நெற்றியில் சிரிப்பு. கண்களில் பரபர. வேர்த்து கசங்கி இருந்த பூ போட்ட சட்டையில் இப்போது ஆசுவாசம். மூச்சே இப்போதுதான் வந்தது போல அப்படி ஒரு ஆனந்தம்.

வெந்து கொண்டிருக்கும் தோசை மீது ஒரு துளி கண்ணீர் சொட்டென விழுந்தது.

விழுந்த சத்தம் சுர்ரென பரவ... வேகும் தோசையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் பரமி. இல்லாத ஒரு ரூவாயை பாக்கெட் ஓட்டை தொலைத்துக் கொண்டே இருக்க... காலம்தான் எத்தனை வேகமாய் சுழல்கிறது.

"என்னம்மா திவாளி அன்னைக்கும் தோசையா... எப்ப பாரு தோசையேதான் சுடற..." என கோபித்துக் கொண்ட பரமியின் மகள் வேண்டா வெறுப்பாக ஒரு தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

எந்த தீபாவளிக்கும் தோசைதான் பலகாரம் என்பதில் உறுதியாக இருக்கும் பரமிக்கு தோசையின் ஆசை எப்போதோ அடங்கி விட்டது. ஆசையாய் பெரியம்மா வீட்டு வாசலில் தோசைக்கு சுற்றித்திரிந்த சிறு வயதின் வாசம்தான் தீர்வேனா என்கிறது.

பனித்த கண்களில் சிறு புன்னகை.

- கவிஜி