அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள் அன்னபூரணி. அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பழனி இவ்வாறு எல்லாம் பேசுவான் என அவள் நினைக்கவும் கூட இல்லை. அவன் கூறிய சொற்கள் இன்னும் அவளுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. தனது கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன எனக் கூறி, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மருத்துவர் முதன்முதலில் விளக்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சிக்குச் சற்றும் குறைந்தது அல்ல பழனியின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சி.

அன்னபூரணியின் கணவர் சின்னசாமிக் கவுண்டருக்கு இரண்டு பாதங்களிலும் திடீரென வீக்கம் ஏற்பட்டு, நடந்தால் மூச்சிரைப்பும் ஏற்பட்டது. பசி எடுப்பதும் படிப்படியாகக் குறைந்து வந்தது. தன்னுடைய உடல் நலத்தைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளாத அவரை அன்னபூரணிதான் வற்புறுத்திக் கோவையில் உள்ள ஒரு மருத்துவரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றாள்.

இரத்தப் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஸ்கேனிங் எனப் பல சோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் அன்னபூரணியை மட்டும் அவருடைய அறைக்கு அழைத்தார்.

மருத்துவர் என்ன சொல்லுவாரோ எனப் பயந்து கொண்டே அறைக்குள் நுழைந்த அன்னபூரணியிடம்,

“உட்காருங்க… அம்மா!” என இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார் மருத்துவர்.

“எங்க... வூட்டுக்காரருக்கு என்ன கோளாறுங்கோ?”-அன்னபூரணியின் குரல் பலகீனமாக ஒலித்தது.

“உங்க வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் இருப்பது தெரியுமா அம்மா?”

ஆமாங்க... ஏழெட்டு வருசமா மாத்திரை சாப்புட்டு வராருங்க....”

“டாக்டர் கூறியபடி தவறாமல் மாத்திரை சாப்பிட்டு வந்தாரா? அப்பப்போ மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வாரா?”

“இல்லைங்க... அப்பப்போ மாத்திரை சாப்புடுவாருங்க...பெறகு கண்டுக்க மாட்டாருங்க..சண்டை கட்டுனாத்தான் டாக்டருகிட்டே போவாருங்க.”

“அதுதாம்மா தப்பாப்போச்சு.தொடர்ந்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிலேயே வச்சிருக்கணும். அப்படிச் செய்யாமே போயிட்டார். அதனாலே இப்போ கிட்னி... அதுதான் சிறுநீரகம்னு சொல்லுவம்ல... அது செயலிழந்து போயிருச்சு.”

“அப்படினாங்க?...”

தொடர்ந்து மருத்துவர் சிறுநீரகங்களின் செயல் இழப்பு பற்றியும், டயாலிசிஸ் செய்வதன் அவசியம் பற்றியும், சிறுநீரகத்தை மாற்றுவது பற்றியும் கூறக் கூற அன்னபூரணிக்குத் தரை பிளந்து தான் அமர்ந்து இருந்த இருக்கையோடு பூமிக்கு உள்ளே படுபாதாளத்துக்குள் வேகமாகச் சரிவது போலத் தோன்றியது.

“தைரியமா இருங்கம்மா... சரி செய்துவிடலாம்” என மருத்துவர் கூறி முடித்தபோது அன்னபூரணி தன்உணர்வோடு இருந்தாள் எனக் கூற முடியாது.

பிறகு கணவருடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து, பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தது எதுவும் அவளுக்கு நினைவில்லை. விடிய விடிய அழுதாள். தனது மனச்சுமையைக் கண்ணீரால் கரைத்து வெளியேற்ற நினைத்தும் முடியவில்லை.

அன்னபூரணியின் கணவர் பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். கிணற்றுப் பாசனம் கொண்ட பூமி. நெல்லும், கரும்பும், வாழையும் விளையும் வளமான பூமி. திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் அத்தம்பதியினருக்குக் குழந்தை எதுவும் இதுவரை இல்லை.அது பற்றி அவர்களுக்கு உள்ளூர வருத்தம் உண்டுதான். இருப்பினும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு மனம் ஒத்து வாழும் கணவன்-மனைவியாய் இருந்து வந்ததால் அவர்களுக்குள் பிரச்சினைகள் எதுவும் எழாமல் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் பலரும் குழந்தைக்காக இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவருக்கு ஆலோசனை கூறியும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்களுடைய சந்தோச வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கோளாறு பேரிடியாய் வீழ்ந்தது.

தொடர்ந்து அவருக்கு வாரம் ஒருமுறை, சில சமயங்களில் இருமுறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. சிகிச்சைக்காகப் பணம் தண்ணீராகக் கரைந்தது.

தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது நல்லது என்றும் மருத்துவர் கூறினார்.

அன்னபூரணி தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தனது கணவருக்கு வழங்கத் தயாராக இருந்தும் அவளுடைய இரத்தப் பிரிவு அவளுடைய கணவனின் இரத்தப்பிரிவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதனால் அது பொருந்தாது என மருத்துவர் கூறிவிட்டார்.

பிறரிடம் இருந்துதான் சிறுநீரகத்தைப் பெற்று அவருக்குப் பொருத்தியாக வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் எழுந்தது. நெருங்கிய உறவினர்கள் இருந்தாலும் யாரிடம் சென்று கேட்பது? சிறுநீரகத்தை வழங்க அவ்வளவு எளிதில் முன்வருவார்களா? ஒப்புக்கொள்வார்களா?

எதிர்பார்த்தவாறே பல்வேறு காரணங்களைக் கூறி நெருங்கிய உறவினர்கள் தங்களுடைய விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்கள்.

பணம் கொடுத்து வெளியில் யாரிடமிருந்தாவது சிறுநீரகம் வாங்குவது நடைமுறையில் இருந்தாலும் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயலா? வாழ்வா சாவா என்ற கேள்விக் குறியுடன் வேதனையில் புதைந்திருந்த அன்னபூரணி தன் வீட்டின் நிலைப்படியில் சோர்ந்து உட்கார்ந்து இருந்தபோதுதான் அவர்கள் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் சின்னானின் மகன் பழனி வந்தான்.

பழனியின் கொள்ளுத்தாத்தா, சின்னசாமிக் கவுண்டரின் தாத்தா காலத்தில் அவருடைய தோட்டத்தில் பண்ணை ஆளாகச் சேர்ந்தார். தொடர்ந்து பழனியின் தாத்தா, தந்தை என அங்கேயே பண்ணை ஆள் பணி தொடர்ந்தது. அவர்களுடைய பரம்பரையில் பழனிதான் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்தவன்.

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் அவனுடைய தந்தைக்குத் துணையாக அவ்வப்போது தோட்ட வேலைக்கு வருவான். பள்ளிப்படிப்பை விட்டாலும் தொடர்ந்து எதையாவது படித்துக்கொண்டிருப்பான். எப்பொழுதும் அருகிலிருப்பவரிடம் எதாவது ஒரு பொருள் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பான். அவனுடன் இருப்பவர்களுக்கு அவன் பேசும் சில விசயங்கள் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருக்கும். சில சமயங்களில் எதுவும் புரியாது.அதனால் அவனுக்கு கிறுக்கன் என்ற பட்டப் பெயரும் அவர்கள் மத்தியில் புழங்கி வந்தது.

பழனியைக் கண்டதும் அன்னபூரணி,

“ஏண்டா... பழனி, ஒங்க அப்ப.. இன்னைக்கு வேலைக்கு வரலியா?” எனக் கேட்டாள்.

“இல்லிங்க... அவருக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல்லிங்க...அதான் நா..வந்தேன்” என்ற பழனி,

“ஏங்க... கவுண்டருக்கு ஆபரேசன் எப்பங்க?” என்றான்.

அதைக் கேட்ட அன்னபூரணி,

“என்னத்தே சொல்ல?...சாவறதா இல்லே... பொழைக்கிறதான்னே தெரியலே. டாக்டரும் சீக்கிரமே ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாரு. கிட்னி என்ன கடைச் சரக்கா... ஒடனே வாங்கிட்டு வரதுக்கு. நாங்களும் யாரு யாருகிட்டயோ வெசாரிச்சுப் பாத்துப்புட்டோம். தேடாத இடமில்லே. கிட்னிதா... கெடைக்கவே மாட்டேங்குது.” எனக் கூறிக் கண்ணீர் விட்டாள்.

சிறிது நேரம் மவுனமாயிருந்த பழனியிடமிருந்து,

“கவுண்டருக்கு ...நா... தறேன்க..கிட்னி...” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன.

அன்னபூரணிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. உண்மையில் பழனிதான் அந்த வார்த்தைகளைக் கூறினானா? இல்லை, வெறும் கனவா? அல்லது பிரமையா? தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். பழனியைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. அப்படியானால் பழனிதான் அந்த வார்த்தைகளைக் கூறியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட அன்னபூரணி அதை உறுதிப்படுத்திக் கொள்ள,

“என்ன பழனி, நீயா பேசினே?” என்று கேட்டாள்.

“ஆமாங்க...நாந்தான். கவுண்டருக்கு என் கிட்னி பொருந்தினா... நா... தரத் தயாருங்க” என்றான்.

அன்னபூரணிக்கு பழனியின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை.நம்பாமலும் இருக்க முடியவில்லை. சிறுநீரகத்தை வழங்கினால் எங்கு எதிர் காலத்தில் தமது உயிருக்கு ஆபத்தாகிவிடுமோ என அஞ்சி நெருங்கிய உறவினர்கள் கூடத் தர மறுத்துவிட்டநிலையில் இந்த இளம் வயதுப் பையன் தான் தருகிறேன் எனக் கூறுகிறானே! இளங்கன்று பயம் அறியாது போல அதைக் கூறுகிறானா? அன்னபூரணி குழம்பினாள். எதற்கும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் அவனுடைய அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றியது போல ஆகிவிடுமே என அவள் அஞ்சினாள்.

“ஒரு கிட்னியைத் தந்துட்டா பின்னாலே ஏதாவது உசுருக்கு ஆபத்தாயிருமோனு பயப்படறாங்க...ஒனக்கு அந்த பயமில்லையா?...பழனி...”

“இல்லேங்க... உசுரு வாழ ஒரு கிட்னியே போதுமுனு நா படிச்சிருக்கேங்க... அதனாலேதா...நா...பயப்படலிங்க... ரண்டு கிட்னி இருந்தாலும் ஒரே சமயத்திலே ரண்டும் பழுதாவாதுன்னு கூற முடியுமுங்களா?...கவுண்டருக்கு இப்போ எப்படி ரண்டும ஒரே சமயத்திலே பழுதாச்சுங்கோ?” என்று பழனி தெளிவாகப் பதில் கூறினான்.

இந்த ஜென்மத்தில் கூட இது சாத்தியமா? சென்ற நிமிடம்வரை தாழ்த்தப்பட்டவனாக, தீண்டத்தகாதவனாகத் தோன்றிய பழனி இப்பொழுது அவளுக்குத் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் அவதாரமாகத் தோன்றினான்.

தொடர்ந்து பழனிக்குப் பல மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அவனது சிறுநீரகம் சின்னசாமிக் கவுண்டருக்குப் பொருந்தும் என உறுதி செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருந்த பிறகு சின்னசாமிக் கவுண்டரும், பழனியும் வீடு வந்து சேர்ந்தனர். அன்னபூரணியும் மருத்துவமனையில் அவர்களுடன் கூடவே இருந்து உதவி செய்து வந்தாள்.

இப்பொழுதுதான் அன்னபூரணியின் முகத்தில் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் காண முடிந்தது.கணவனைக் காப்பாற்றிவிட்டோம் என்ற தெம்பில் வந்த மகிழ்ச்சி அது.

தனக்கு மறுவாழ்வு தந்த பழனிக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என நினைத்தார் சின்னசாமிக் கவுண்டர். அன்னபூரணியிடமும் அதைத் தெரிவித்தார்.அவள் எண்ணமும் அதுவாகவே இருந்தது. பழனிக்கு ஒரு கணிசமான தொகை வழங்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தார்கள். அதைப் பழனியிடம் கூற அவனது வீட்டிற்கு அன்னபூரணி மகிழ்ச்சியோடு சென்றாள்.

அன்னபூரணி வந்தபோது பழனி தனது கூரை வீட்டிற்கு அருகில் இருக்கும் வேப்பமரத்தின் நிழலில் ஒரு கயிற்றுக் கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்தான். அவளைக் கண்டதும் வழக்கம்போல பழனி கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். அவள் எவ்வளவோ கூறியும் அவன் கட்டிலில் உட்கார மறுத்துவிட்டான்.

“ இவ்ளோ தூரம் ஏன் வந்தீங்க...? சொல்லி உட்ருந்தா நானே வந்திருப்பேனே!” என்றான்.

“அது சரி இல்லேப்பா. நீ ஓய்வு எடுத்துக்கோணும். நீ இல்லாட்டி எங்களுக்கு இப்போது உள்ள வாழ்வே இல்லை. அதுக்கு நாங்க ஏதாவது கைமாறு செய்தாவனும். இல்லாட்டி எங்க மனசு ஒத்துக்காது. எங்களாலே முடிந்த ஒரு தொவை கொடுக்கலாம்னு நெனைக்கிறோம். மறுக்காம நீ அதை வாங்கிக்கணும்.” என்றாள் அன்னபூரணி.

அதைக் கேட்டதும் பழனியிடமிருந்து சன்னமான ஒரு சிரிப்புச் சத்தம் வெளிப்பட்டது.

“என்னப்பா... சிரிக்கிறே...” என்றாள்.

“இல்லேங்க... நீங்க கைமாறுன்னு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துட்டதுங்க. நா... கைமாறு கருதி கவுண்டருக்கு என்னோட கிட்னியைத் தரலீங்க. ஒரு சக மனுசனோட உசுரைக் காப்பாத்த நம்மாலே முடியும்னா அதைச் செய்யனும்கிற எண்ணத்திலேதா... நா... கிட்னி தந்தேன். கைமாறு கருதி இல்லே. அப்படி நீங்க கைமாறு செய்ய நெனைச்சீங்கனா... எதெதுக்குத்தான் கைமாறு செய்வீங்க? ஆண்டாண்டு காலமா, பரம்பரை பரம்பரையா நாங்க ஒங்களுக்கு ஒழைச்சு வந்துருக்கிறோமே... அதுக்கு ஒங்களாலே என்ன கைமாறு செய்ய முடியும்? நீங்க குடியிருக்கும் வூடு வெறும் கல்லாலும் சுண்ணாம்பலும் மட்டும் ஆனதுன்னு நெனைக்காதிங்க.... அதுலே எந்தாத்தாவோட ஒழைப்பும், வேர்வையும், ரத்தமும் இருக்குது. ஒங்களோட தோட்டத்து நெல்லுக்கும், கரும்புக்கும், வாழைக்கும், ஒங்களோட வாழ்வுக்கும் ஆதாரமா இருக்குதே அந்தக் கெணத்தை வெட்டுனது என்னோட கொள்ளுத்தாத்தா. நீங்க சாப்புடறிங்களே...அரிசிச்சோறு...அது எங்களோட வேர்வையிலே வெளைஞ்சது. ஒங்களோட வூடு, ஒங்களுடைய நிலபுலன்கள், சொத்து, சொகம் எல்லாத்திலும் எங்க ரத்தம் ஓடுதே... அதுக்கு கைமாறு செய்ய முடியுமா? உங்க ஒடம்பிலே ஓடுற ரத்தத்திலும் நீங்க உடுற மூச்சுக் காத்திலும் எங்க உதிரம் இருக்குதே! அதுக்குக் கைமாறு செய்ய முடியுமா? எதெதுக்குத்தான் நீங்க கைமாறு செய்வீங்க? எல்லாத்துக்கும் ஒங்களாலே கைமாறு செய்ய முடியும்னு நெனைக்கிறீங்களா?.................”

பழனி தொடர்ந்து கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக்கொண்டே சென்றான். அவனுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் அன்னபூரணியின் காதுகளில் குத்தீட்டிகளாகப் பாய்ந்தன. அவளுடைய உணர்வுகள் அனைத்தும் மெல்ல மெல்ல அடங்கி மறுத்துப் போக அதிர்ச்சியில் உறைந்தாள். பழனியின் வீட்டிலிருந்து அவள் எப்பொழுது, எப்படி வீடு திரும்பினாள் என்றே அவளுக்கு நினைவில்லை. இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

Pin It