
கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது.
துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப்போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது
அலைகளில் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்துகொண்டிருக்கிறது
- மாலதி மைத்ரி