
பெரிது
பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது
இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறது நிலம்
வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்
நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம் அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி
தகிக்கும் கதிரொளியில்
உன் நீர்மைத் துளிகளைக் கண்ணுற்று
கழுத்தை நெரித்து பெய்யச் சொல்ல
இயலாத நான் -
வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய் என்னை
கசக்கிப் பிழியுமுன்
நீ
பொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!
- வே. ராமசாமி