
உழவு செயபவர்கள்
நதிப்புனலில்
சவப்பெட்டி தயாரித்தே
பழக்கப்பட்டவர்கள்
சம்சாரிகளின்
கால் வெடிப்பாய்
ஆறுகிடந்தபோது
உங்களில் ஒருவனையும்
காணவில்லை
பச்சை ஆட்டுப்புழுக்கை
இரும்பாய்க் காய்ந்த கோடையில்
துளி நீரில்லை எமக்கு
முழுதாய் குடல் நனைய
வழியின்றி அலறும்
பசுவின் குரல் கேட்டதில்லை
உம் காதுகள்
எம் ஆத்தாக்கள்
அலற அலற
சொசைட்டிக் கடன்கேட்டு
கதவு உடைத்த
நீங்கள் கூப்பிட்டா
புறப்பட்டது நதி
உம் உள்ளங்கையில்
ஒரு போதுமில்லை
மேக அயனிகள்
நதி திரட்டி வந்தது
மழைத்தாய் மட்டும்
பின்னொரு நாளில்
கசியாமல் நீர்த்தேக்க
பெருந்தன்மையுடன்
திறந்து கொள்ளும்
மதகுகள் மேவி
புரளும் வெள்ளத்தில்
தீருவதில்லை எம்
நூற்றாண்டுத் தாகம்.
- வே. ராமசாமி