காலமோடும் சப்தம் கூட
காதுக்குள் அதிர்ந்தறைந்தது...!
ஒரு அசாத்தியமான மௌனத்தின்,
அமைதியின் உலகை
பேரிரைச்சலின் கை
அறைந்து சாத்தியதும்,
எனதான தேசம்
பற்றியெரிய தொடங்கியதுமான
அன்றிலிருந்துதான்...
இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !
இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை.