எம் பேரு ஊமச்சி

Deaf girlபேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது

குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்டதில்ல

சின்னபுள்ளைக சிரிப்ப
பாத்திருக்கேன்
எச்சிவாயி மழலை
பேச்சி கேட்டதில்ல

பள்ளிக்கூடம் போனதில்ல?
என் சைக மொழி
புரியாம வேலைவெட்டி
கிடைச்சபாடில்ல

கஞ்சித்தண்ணி குடிக்க
வழியுமில்ல
வயுத்துக்கு வயசாகல
ஒடம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட முப்பது

கஞ்சிக்கே வழியில்ல
கல்யாணத்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெளவி

ஊமச்சிய கட்டிக்க
உள்ளூருல ஆளில்ல
செவிட்டுபுள்ளன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்கம்பட்டி சின்னராசு

ஊமச்சிய கட்டிக்கிட்டா
பொறக்குற புள்ளக்குட்டிக்கும்
பேச்சுவராதுன்னு ஜோசியம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி

கட்டிக்கிட்டா என்ன
வெச்சுக்கிட்டா என்ன
ஊமச்சிக்கு ஏது மனசுன்னு
நெனச்சு நடுவூட்டுல
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைனரு

ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது

மெதுவா தலைய
உசத்தி என்ன
பார்த்து ஏதோ
கேட்டா என்ன
பெத்த ஆத்தா.

பெட்டி படுக்கைய
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில
ஏறிபுட்டேன்.

இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது

ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
மட்டுந்தான்
தெரியும்.

ஒத்த வேள
கஞ்சிக்கு
பத்துவேள
பாய விரிக்கறது
தப்பா ரைட்டான்னு
தெரியல...

இடி விழுந்தா
கூட கேட்காத
காதுக்கு
பொல பொல ன்னு
எங்க ஆத்தா
சிந்தற கண்ணீருசத்தம்
மட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!


நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It