
யாரையேனும் எதிர்பார்க்கிறது மனசு ...
காதுகள் பிளக்கும் தனிமையின்
பேரிரைச்சல்களுக்கு நடுவில்
கதவு தட்டப்படும் சத்தம்
உள்ளறைகளுக்கு எட்டாதுபோகுமோவென்று
குருவிசத்தமெழுப்புகிற அழைப்புமணி வாங்கி
மாட்டியாயிற்று வாசற்நிலைப்படியில் ...
கிட்டிபுள்ளிலிருந்து கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டிருந்த
தெருவாச சிறுவர்கள் கூட விளையாட்டுக்காய்
அழுத்தவில்லை அழைப்புமணியை ...
உச்சகட்ட உறக்கத்தை தொலைத்துவிட்டு
உள்ளறைகளில் உலவிக் கொண்டிருக்கையில்
யாரோ அழைப்பதைப் போன்றதோர் உணர்வு .
யாருமில்லையென்றறிந்து ஏமாந்து கொள்கிறேன்.
இனி என்ன செய்வது ... ?
யாரும் தேடி வருவதில்லையென்றாலும்
யாரையேனும் எதிர்பார்க்கத் தான் செய்கிறது
மனசும் ... உடம்பும் ...
- தர்மசம்வர்த்தினி (