கனவுகள் கலைதல்
இரவின் போர்வைக்குள்
சத்தமின்றி
மெல்ல
ஊடுருவுகிறான்
காலைக் கதிரவன்
பல கனவுகளை
கலைத்தபடி...
புனைவு கவிஞன்
புனைவுகளில்
கவிதைகள்
எழுதி
என் சுயத்தை
மறை(ற)க்கிறேன்.
ஒரு நாள்
நான் யாரென்று
எனக்கே மறந்து போகலாம்.
அப்போதும் தினம் தினம்
ஒரு கவிதையாக
வாழ்ந்துவிட்டு போவேன்.
யாழ் - நிலா
ஓர் நள்ளிரவில்
ஆற்றங்கரையில்
கை கோர்த்து
அமர்ந்திருந்தனர்
அவனும் அவளும்.
சத்தமின்றி
அவர்களுக்காக
யாழ் மீட்டியது
ஆற்றில் படர்ந்த
நிலா…
வண்ணத்துப்பூச்சி
தினம் தினம்
அவள்
கல்லறையில்
ஓர் வண்ணத்துப்பூச்சி
வந்தமர்ந்து அழுதது.
விம்மி விம்மி
அழுதது.
இனி அதனுடன்
விளையாட
யாரும் இல்லையென்பதால்.