
காற்றிடறிய வட்ட குமிழ்களுக்கிடையே
கரைந்தோடுகின்றன அந்த நாட்கள்
இலையுதிர் காலங்கழிந்து மரங்களீன்ற
பச்சிளம் பசுமிலைகளாய்
நிறை வயிறில் நின்று நிதானித்து எட்டிடும்
மழைக் காலத்து மாலை மேகங்களாய்
பல காலன் நீரை பதுசாய் அள்ளியேந்தி
கரை தேடி கொட்டிச் செல்லும்
ஊர் தூங்கிய இரவு நேரத்தலைகளாய்
ரம்மியமும் சுவையுங் கூடியதது
ஆடியடங்கியொடுங்கத் தேடும் ஊத இரவுகளில்
மெல்லிய படர் பனிகளினூடே
கம்மாயும் கட்டபொம்மன் கதையுமாய்
களைத்துத் தீர்த்த கனிய காலமது
எச்சிலூறும் எள்ளு ரொட்டிக்கும்
எகிறிச் செல்லும் வண்ணாத்திக்கும்
உயிர் தொலைத்த உன்னத மாலையது
பெருகிக் கிடக்கும் சோளங்காடுகளில்
கீறிக் கிழிக்கும் கருவேலந்தோப்புகளில்
அறிவியலும் கணக்கும் மறந்து
விவசாயமும் விலங்கியலுமறிந்த
விடுமுறை காலப் படலமது
சட்டியில் கொதிக்கும் அயிரைக்கும்
வட்டியில் ஓய்ந்த வள்ளியப்பனுக்கும்
பாவப்பட்ட பத்தாம்பசலிப் பருவமது
கலங்கிய குட்டை தெளிந்து தேர்கையில்
தெள்ளிய மனமிருக்கும் கலங்கியபடி!
உருண்டு திரண்ட ஊளைச் சதையும்
கிறுக்கியலைந்த சில கவிதைகளுமன்றி
பெரிதாய் மிஞ்சியதெதுவென்று
மெனக்கெட்டமர்ந்து யோசித்தபடி.
-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )