கீற்றில் தேட...

பாஷோவின் குளத்திற்குள்
குதிக்கிறது தவளை
க்ளக் .....

போன ஜென்மத்திலிருந்து
கண் விழிக்கிறேன்

முல்லையாற்றின் மீது
வாசல் தெளித்துக்
கொண்டிருக்கின்றன
இராத்தூறல்கள்

வெள்ளி வளையல்கள்
ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி
எழுகின்றன தோரணங்களாக

உயிர்களைப் படைக்கும்
கட்டற்ற புனைவு
திசை தோறும்
விரிந்து செல்கிறது இரவாக

இவ்வளவு கூர்மையான நிலவை
இதற்கு முன்பு
நான் கண்டதேயில்லை

நீர்க்குமிழ் போல்
முளைத்தெழும் மீனொன்று
நதிப் படுகையில்
சற்றே கண்ணசந்திருக்கும்
கடவுளைக் கடித்து விட்டு
நீரோட்டத்தில் பாய்கிறது

இப்போது என் குவிந்த
கரங்களுக்குள் தளும்பிக் கொண்டிருக்கும்
நதிக்குள்ளிருந்து
பளிச் பளிச்சென அயிரை மீனாக
குதித்துக் கொண்டிருக்கின்றன
முற்றுப் பெறாத காலங்கள்

- தங்கேஸ்