உங்கள் ஒவ்வொருவரிடமும்
பேச விழையும்
இந்தத் தெருவைவிடவும்
வேதனையுற்ற ஜீவன்
வேறொன்று இருக்க முடியுமா?
மரணித்தும் போகாமல்
விழிகளையும் மூடாமல்
இதயம் பிளந்து பொய்யர்களை
விழுங்கி விடவும் இயலாமல்
எத்தனை அபத்தமான
கேள்வியாய்ப் போய்விடுகிறது
கடைசியில் இந்த வாழ்க்கை
விக்கித்துப் போன
கடவுள்களின் விசும்பல்கள் தான்
பதில்களாகிப் போகுமா ?
ஈசனே ஈசனே
எலும்புக்கூடுகளுக்குள்ளிருந்து
தோண்டி எடுக்கப்படும் முகங்களை
கைநிறைய அள்ளுகிறேன்
வெளிச்சத்தின் வெப்பம் தாளாமல்
புன்னகைக்க முயற்சித்து
உள்ளங்கைகளிலேயே
நொறுங்குகின்றன அத்தனையும்
உங்கள் பேரருளாலே
ஒரு சிறு புன்னகையை மட்டும்
உயிர்பிக்க முடிந்தால் போதும்
கருணையற்ற வாழ்வை
ஒரு மரக்கன்று போல
தோல் போர்த்திய எலும்புக்கூடுகளுக்குள்
நட்டு வைத்து விடலாம்
- தங்கேஸ்