கீற்றில் தேட...

வேளச்சேரி பாரதிநகரில்

கொலை நிகழ்வுகள்

அரங்கேறியிருக்கின்றன


கடந்த வாரத்தில்

நான் ஊரில் இல்லாத

சனி ஞாயிறு அன்று

தெரியாதவர்கள் உள்ளிட்ட

எனக்குப் பரிட்சயமான

நண்பர்களும்

சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்


ரகுவின் கழுத்து

கைகால்களை அறுத்து

அப்படியே போட்டிருந்தார்கள்


பிரியங்காவை ஒரேயடியாகச்

சாய்த்திருந்தார்கள்


சிவாவின் உயிர் வாசனை

இன்னும் அடங்கியபாடில்லை


திவ்யாவின் சடலத்தை

ஒரு பழைய ஊர்தியில்

இன்று காலையில்தான்

ஏற்றினார்கள்...


குறிப்பு ஒன்று

மேலே சொன்ன

பெயர்கள் யாவும்

அவர்களின் இயற்பெயர் அல்ல

நான் அவர்களுக்குச்

சூட்டிய செல்லப்பெயர்கள்


குறிப்பு இரண்டு

இவர்கள்

மனிதன் என்பவருக்கு

மனிதன்

மரம் என்பவருக்கு

மரம்.

 

- நாவிஷ் செந்தில்குமார் (navishsenthilkumar@gmail.com)