கொலைக்காடு ஒன்று
வெவ்வேறு மர்மங்களால் ஆனது
முட்களால்
வாள்களால்
துளைக்கும் ரவைகளால்
விடமேறிய சொற்களாலும் கூட.
அவரவர் மனங்களின்
எடைகளைப் பொறுத்தது
சாவுக்கு சாவு மாறுபட்ட
வெகு நீண்ட நாளொன்றில்
நான் வரைபடத்தோடு
கொலைக்காட்டுக்குச் சென்றேன்
எட்ட நின்று அமிழ்தம்
கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன்
பருத்திச்சுளை தின்று
பாற்பற்கள் கொழுத்திருந்தன
ஆயிரம் நீர்ச்சுனைகள்
பருகிய கணங்களில்
பாலைச்சுரந்தன
வெவ்வேறு காலம் அக்காட்டை
கொலைத்தபடி எரிந்தது
கொலைக்காடு எப்போதும்
காடுகளுக்கு அப்பாற்பட்டது
வெவ்வேறு மர்ம மரங்களால் ஆனது

00

கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து கொண்டிருக்கும்
எஞ்சிய பனிப்பொதி
பலதிசைககளின் பரிமாணம் என்கிறேன்
குழலுக்குள் சஞ்சரித்து
விம்மும் குரலலைகளை
குமிழிகளில் அவ்வப்போது
உடைக்கிறது என்கிறாய்
ஒருவருக்கு ஒருவர்
முகம் திறக்கும் தருணம்
எப்போதும் ஓய்வதில்லை
இன்னும் ஒரு நாளுக்கு அல்லது
இன்னும் ஒரு கணத்திற்கு
அப்புறம் எப்படி
கிளைகளில் மாறி மாறி
தன்னை வரைகிறது பறவை
நெருப்பை எடையிட்டாலென்ன
நீரை அளந்தாலென்ன
பூத்தலும் உதிர்தலும்
மரத்தின் முகவரி
பறவை எச்சத்தில்
பரம்பியிருக்கும் மரத்திற்கு
முகவரி எதற்கு
முகம் மட்டும் போதும் தானே

00

கடல் மொழியின் கிளையில்
சிறகுகளை விரிக்கும் பறவையானேன்,
அருவியின் பரணில்
காட்டை கூட்டி வரும் இரவுச் சூரியனாகிறாய்,
நெய்தலா மருதமா
இரண்டுங்கெட்டான் நெருஞ்சி முட்பாதம்,
ஊதிப்பெருத்த கனவுள்ளும்
இன்னும் காயாத இரத்தப் பிசுபிசுப்பு,
பூச்சொரிய கிளம்பியது
கிளை பிரிந்த மரத்தின் துயர வாசம்,
ஆதிக்காட்டின் அன்பின் சுனை
ததும்பத் ததும்ப வசீகரித்த
ஆகாசத்தூறலில் ஈரமில்லை
பூமி துளிர்க்கவுமில்லை.

00

மனமுகட்டில்
ஆதூரமாய் தேங்கியிருக்கும்
சாம்பல் மௌனத்தை
பிழிந்து ஊற்றுகிறேன்.
தடாகத்தின் ஆழ்ந்த
பனிசூழ் பரப்பில் அலைகின்ற
வழிப்போக்கனாய் இருக்கலாம்
ஆயினும்
பறவையின் சிறகசைப்பாய்
செறிந்தெழும் பேரோசையோடு
வெளிச்சமாய் இருக்கிறேன்
பெருகிய மனித ஆற்றில்
குரலற்ற பாறைகள்
நாநுனியில் பதுங்கி இருந்தன
அந்த மகா விருட்சத்தில்
அர்த்தங்கள் விரியாத
ஊமைப் படபடப்புடன்
இன்னும் மொட்டுச்சொற்கள்
மோனத்தவமிருந்து உயிர்சனித்த
என் கடற்பாசி முத்துக்களையும்
நீலச்சங்குகளையும்
கடல் கொண்டதா என்ன ?

- தமிழ் உதயா, லண்டன்

Pin It