ஒரு துளி வெட்கத்தைத் தொட்டு
நெற்றியில் வைத்துக் கொள்வாய்..
தூங்காமல் விழித்திருந்த
நேற்றைய இரவை
ஒற்றை ஜடையில் பின்னலிடுவாய்..
வலது புருவத்தை நெருங்கி
சுருளாய்த் தொங்கும்
கற்றை நெளிக் குழலை...
நுனியில் சுருட்டும்போதே
ரகசியமாய் என் பெயர் உச்சரித்து
கவனமாய் பழகிக் கொள்வாய்..
முட்டைவடிவக் கண்ணாடியில்..
முடிவாய் ஒரு புன்னகையைப்
பதிவு செய்வாய்..
தலை வாசல் நிலைக் கடந்து
செருப்புக்குள் கால் நுழைந்ததும்..
ஏறிட்டு என்னைப் பார்ப்பாய்..
நானொரு ஸ்தூலம்..
நானொரு அவசியம்..
நானொரு நிர்ப்பந்தம்..
என்னை விட்டு விலகும்போதெல்லாம்...
நீ என்னிலிருந்தே விலகுகிறாய்..
ஒப்புக்கொள்ள மறுபடியும்
நீ மாலை வருவாய்..
- இளங்கோ (