theru koothuவார்த்தையின் இருளுக்கும் பொய்மையின் ஒளிக்கும்
நடுவே ஓடும் தறியில்
பின்னப்பட்ட கதைகள் நம்முடையதா
மாய வலையில் சிக்கிக்கொண்ட
நம் குரல்வளையில்
பாடப்பட்ட பாடல்களெல்லாம்
நம்மைப் பற்றிய பாடல்களா
நம் கவிதைகளில் இடம் பிடிக்காமல்
மரம் இழைத்தவர்கள் பறையடித்தவர்கள் விவசாயிகள்
பானை செங்கள் சுமந்தவர்களெல்லாம் எங்கிருந்தார்கள்
நம் கதைகளுக்குள் அவர்களை வராமல்
செய்தவர்கள் யார்
சூத்திரர்களும் பஞ்சமர்களும்
பாட்டி, தாத்தாக்களும் மூதாதையர்களும்
நம் குழந்தைகளின் கதைகளில் ஏன் வரவில்லை
நம்முடைய பாட்டன் முப்பாட்டன்களின்
வியர்வைகள் எந்த கதையில் இருக்கிறது
பாட்டிகளின் கண்ணீர் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது
இந்த நிலத்தின் கதைகள் எங்கே
நாம் யாருடைய சாகசத்தை சொல்லித்தருகிறோம்
கடவுளின் கதைகளைத் தவிர
நமக்கென்று கதைகள் இல்லையா
கம்பன் ஏன் வடக்கின் கதையைப் படைத்தான்
நமக்கென்று வரலாறு இல்லாமலா இருந்தது
நம் சொற்கள் ஏன் மதத்திற்கு திருப்பிவிடப்பட்டன
நம் ரத்தம் ஏன் கடவுளுக்கு பாய்ச்சப்பட்டது
நம் திறமைகளின் நதியை உறிஞ்சிக்கொண்டது யார்
நம் சிந்தனைகளை கொள்ளையடித்தது யார்
நம் மூளைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதில்
எது நம்முடையது
நம் உடலுக்கு ஒரு பெயரிருக்கலாம்
அது தாய்மொழி தந்ததல்ல
நம் கொண்டாட்டங்களுக்கு ஒரு பெயரிருக்கலாம்
அது தாய்நிலம் தந்ததல்ல
நம் அடையாளம் என்பது மதமா
நம் அடையாளம் என்பது சாதியா
நம்மை விசாரணை செய்வோம்
அடையாளங்களை மறுபரிசீலனை செய்வோம்.

Comments

2 comments

2
சேயோன் யாழ்வேந்தன்
அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நம்மைப் பற்றிய அருமையான கவிதை. வாழ்த்துகள்.
கோசின்ரா
மிக்க நன்றி தோழர் கோசின்ரா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.