உன் சிரிப்பில்

உதிரும்

முத்துப்பரல்களை விடவா

காணாமல் போன

கால் கொலுசு

கவிதை பாடிவிடப்போகிறது?

*******

காத்திருந்து காத்திருந்து

நீயும், நானும்

எத்தனையோ முறை

ஏமாந்து போனாலும்

காத்துக்கிடக்கிறது

நமக்காக காதல்.

*******

அமுதம் சிந்தும் வார்த்தைகள்

மட்டுமின்றி அவ்வப்போது

நஞ்சும் கக்குகிறாய்

ஆனாலும்

எப்போதும் எனக்கு

மாணிக்கம் நீ.

*******

உன்னைக் காணும் முன்வரை

அரிச்சந்திரனாய் இருந்தேன்

என்பதை நம்பாத நீ

அடுக்கடுக்காய்

அவிழ்த்து விடும்

பொய் மூட்டைகளை மட்டும்

எப்படி ரசிக்கிறாய்?

 

Pin It