வேறெங்கும்
சொல்லிவிட முடியாத துக்கமொன்றை
நட்சத்திரங்கள் கவர்ந்து கொண்டன
என் நள்ளிரவில்
குவளையில் தளும்பும் நீரின் அலையில்
நிழலென மிதவையிடுகிறது
கேவலின் கண்ணீர்த் துளியொன்று
ஈரத் துணிகளற்ற கொடிகளில்
என் மௌனங்கள் காய்கின்றன
நிலவின் கிரணத்தில் மூழ்கி
வெறுமைப் பாலை விரியும்
தரை விரிப்பில்
அவள் இல்லாத இடங்களில்
பூக்கள் பூத்திருக்கின்றன
மகரந்தங்களை உள்ளடக்கி
யாருமற்ற என் தனிமைக் கணங்கள்
வேகமாய் எதிர்த்திசையில்
ஓடி மறைகிறது
ஒற்றை எரிக்கல்லாய் வானைக் கிழித்து
****
- இளங்கோ
கீற்றில் தேட...
மகரந்தங்களை உள்ளடக்கிய பூக்கள்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்