எட்டி எட்டி பார்த்துவிட்டு
ஓடி விடுகிறார்கள் குழந்தைகள் எனில்
மருமகள் வரவேற்பறையில் இருக்க கூடும் ..
சுற்றில் வரும்
பெரிய மருத்துவரைப் போல வந்து
"சரி, வேறன்ன ..?" என
ஆரம்பிக்கும் பிள்ளையிடம் -
இரண்டு நாளாய் எதிர்வீட்டில்
புதிதாக குழந்தையொன்று கையசைக்கிறது - என்றோ
பல்லில் செருகிய ஏதோ
சாயங்கால வாக்கில் வந்ததும்
தான் தூங்க முடிந்தது - என்றோ
இலவசம் தருகிறார்கள் என்றாலும்
"நான் என்ன நினைக்கிறேன், என்றால் ....” - என்றோ
ஏதாவது சொல்ல முடியுமா ?
சில்லறையாகத் தெரிந்தது -
இறந்து போன உன் உறவினர்கள்
கனவில் வந்ததாக நீ சொன்னபோது ...
இப்போது..
என் கனவில் நீ வருகிறாய்.
நானும் யாரிடமும் சொல்லுவதில்லை .