Prison“ஒர் ஆண் கல்விபெற்றால் அவனுடைய வீட்டிற்கு மட்டுமே ஆதாயம். ஆனால் ஒரு பெண் கல்விபெற்றால் அவள் பிறந்த வீட்டிற்கு மட்டுமல்லாமல் புகுந்த வீட்டிற்கும் ஆதாயம்” என்பது ஒரு பழம் பாடலின் கருத்து. “தலைவாரி பூச்சூடி பாடசாலைக்குப் போ” என்று கவிஞர் வலியுறுத்தியதும்கூட பெண்கல்வியைத்தான். பொதுவாகவே, ஒரு கல்விச்சாலை திறக்கப்படும்போது ஒரு சிறைக்கொட்டடி மூடப்படும் என்பதுதான் சமூகவியலாளர்களின் கணிப்பு.

ஆனால் இன்றைய தமிழகத்தில் நிலவிவரும் அவலமான கல்விச்சூழல் பாமரர்களுக்கு தரமான கல்வியை எட்டாக்கனியாக்கி இருக்கிறது. ஏற்கனவே பெண்பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்த பலநூறு காரணங்கள் இருக்கின்றன. இன்றைய தரமான கல்வி விலையேறிப்போன கல்வியாக இருப்பதால் அத்தனை காரணங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

28.03.2009 சனிக்கிழமை அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சிறைத்துறை டிஜிபி கூறிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டில் பெண்கல்விக்கு பேரிடி விழுந்த செய்தியை விலாவாரியாக எடுத்து வைக்கிறது.

இந்தியத் திருநாட்டிலேயே, தமிழ்நாட்டில்தான் ஒவ்வோர் ஆண்டும் அதிக அளவில் பெண்கள் கைது செய்யப்படுகிறார்களாம். ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 65,000 பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்கிறார் சிறைத்துறை டிஜிபி. இவர்களுள் சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு 1000 பெண்கள் தண்டனை பெறுகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண்கள் கைது செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகரித்திருப்பதாக சொல்லுகிறார் சிறைத்துறை டிஜிபி.

கடந்த ஆண்டில் 57,000 பெண்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதாகவும், 998 பெண்கள் தண்டனை பெற்றதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தண்டனை பெற்ற பெண்கைதிகளின் வயதுப்பிரிவு இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 51 பேர். 50 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 136 பேர். 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 271 பேர். 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் 192 பேர். 20 வயதிற்கு கீழுள்ளவர்கள் இரண்டு பேர்.

மொத்தமுள்ள பெண் சிறைக் கைதிகளில் சரிபாதி எண்ணிக்கை 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் இந்த வயதுப்பிரிவு பெண்கைதிகளின் குழந்தைகள் ஆதரவற்று விடப்படுவார்கள் என்பதுதான். இந்தக் கைதிகளின் குழந்தைகள் சரிவர கவனிக்கப்படாமல் விடப்பட்டால் அவர்களும் குற்றவாளிகளாக மாறும் அபாயம் இருக்கிறது.

தற்போது உள்ள புழல் சிறையில் நாளொன்றுக்கு 500 பார்வையாளர்கள் கைதிகளைப் பார்ப்பதற்காக வருகிறார்களாம். ஆனால் பெண்கைதிகளைப் பார்க்க எவருமே வருவதில்லை என்கிறார் இந்த சிறைத்துறை டிஜிபி. ஓர் ஆண் கைதியாக இருப்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் பெண் ஒருத்தி கைதியாக மாறுவதை ஏற்றுக் கொள்ள மறுப்பதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பெண்கைதிகளில் பலரும் தாங்கள் குற்றம் செய்யக் காரணமாக இருந்தது தங்களின் கணவன்மார்தான் என்கின்றனராம். கொலைக் குற்றத்திற்காக இப்போது தண்டனை அனுபவித்துவரும் பெண்கைதிகளின் எண்ணிக்கை மட்டும் 127. திருட்டு வழக்கில் 5 பேரும், வரதட்சிணை சாவுகளுக்காக 16 பேரும் தண்டனை அனுபவிக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமை வழக்குகளுக்காக 47 பெண்கள் தற்போது தமிழக சிறைகளில் இருக்கின்றனர். கடந்த ஆண்டில் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பெண்கள் 9 பேர். இதைப்போலவே சிறையில் நடந்த பிள்ளைப்பேறுகள் 2006 ஆம் ஆண்டில் நான்காக இருந்தது. 2007 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.

சிறைச்சாலைகள் சீர்திருத்தச்சாலைகள் அல்ல. அவை இன்றும் தண்டனைச் சாலைகளாகவே நீடிக்கின்றன. ஒரு முறை சிறைக்குப் போய்வந்த எவனும் போலீசின் கண்களில் குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறான். அதுவும் தலைகாய்ந்து பரட்டையாகத் திரிபவனின் பாடு இன்னும் திண்டாட்டம். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இவர்களின் பங்களிப்புதான் அதிகம்.

தமிழகத்தில் எந்த ஒரு மாணவனும் படிப்பதற்காக ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்கக்கூடாது என்பதற்காகவே அதிக அளவில் அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள் கிராமங்களில் தொடங்கப்பட்டன. இன்றைய புள்ளிவிவரப்படி 23,395 அரசு தொடக்கப்பள்ளிகளும், 5048 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் இருக்கின்றன. அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத 5737 தொடக்கப்பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

உயர்நிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் 2176 அரசுப்பள்ளிகளும், 630 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இருக்கின்றன. 1768 பள்ளிகள் அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மேல்நிலைப்பள்ளிகளின் நிலை வேறு விதமாக இருக்கிறது. அரசு நடத்தும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2100. அரசாங்க உதவி பெற்று நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளிகள் 1067. அரசாங்கத்தின் உதவி இல்லாமல் நடத்தப்படும் மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையோ 1863.

இந்த புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை நிலவரம் என்ன? தொடக்கக்கல்வியில் அரசு காட்டும் அக்கறை மேல்நிலைக்கல்வியில் குறைந்து போகிறது? ஏன் இந்த மாற்றம்? அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத பள்ளிகள் இலவசமாக எந்த துரும்பையும் அசைத்துப் போடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ‘கையில் காசு இல்லாத மாணவனுக்கு கதவை சாத்தடி’ என்பதுதான் இந்தப் பள்ளிகளின் ராக ஆலாபனை. தரமான மேல்நிலைக்கல்வி கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் கையில் காசு இல்லாத காரணத்தால் அரசுப்பள்ளிகளை நாடுவதும், அல்லது படிப்பை பாதியில் நிறுத்த முனைவதும் இதனால்தான். பெண் பிள்ளைகளின் நிலையோ பரிதாபம். ஆண் பிள்ளையையே படிக்கவைக்க இயலாத பெற்றோர்கள் பெண்பிள்ளைகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்?

அரசாங்கத்தின் நிலை இன்னும் அவலம். தமிழ்நாட்டில் கல்விநிலையங்கள் மீது அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை விண்ணப்பத்தின் விலை 10 ரூபாய்க்கு மேல் போகக்கூடாது என்று ஒரு சாதாரணமான ஆணைகூட பிறப்பிக்க திராணியில்லாத அரசுதான் இன்றைய வாய்ச்சவடால் அரசு. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் பேதத்தை விதைக்கும் பல்வேறு கல்விமுறைகளைக் களைந்து சமச்சீர் கல்விமுறையை கொண்டு வருவோம் என்று வீராப்பு பேசியகாலம் நமக்கெல்லாம் மறந்துபோய்விடவில்லை. இப்போதைய தேர்தல் அறிக்கையிலும்கூட அதே சவடால் வசனங்கள் வரலாம் அல்லது வசதியாக மறந்துபோனதுபோல் நடிக்கலாம்.

வணிக ஆதாயங்களுக்காக கல்விநிலையம் நடத்துவோரும், அரசியலில் அறம் பிழைத்தோரும் கைகோர்த்து நடக்கும் காலம் இது. வானத்தைப் பார்த்தபடி நடக்கும் இந்த கள்ளக்கூட்டணியின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏழைப்பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகள். இந்த கள்ளக்கூட்டணி தடுமாறி விழப்போவதும் இதே ஏழைகளால்தான் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும்.

ஒரு காலத்தில் தமிழகத்தின் எழுச்சி கல்விச் சாலைகளில் தொடங்கியது. இன்று தமிழகத்தின் வீழ்ச்சியும் கல்விச்சாலைகளில்தான் தொடங்கியிருக்கிறது.

அதன் குறியீடுதான் சிறைத்துறை டிஐஜியின் புள்ளி விவரங்கள். 

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It