meeting2021 சட்டப்பேரவை தேர்தல் வேலைத்திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்

தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவைத் தோற்கடிப்போம்!

”தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவை 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்ற முழக்கத்தின்கீழ் கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 75க்கும் மேற்பட்ட தமிழ் சமூக அரசியல் அமைப்புகளின் பங்கேற்புடன் இன்று 20-01-2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடந்தேறியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.
 
1. 2014 இல் பாசக மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் திட்டக்கமிசன் கலைப்பு, ஜி.எஸ்.டி., நீட் திணிப்பு, பணமதிப்பிழக்க நடவடிக்கை, உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டுச் சட்டம், இந்தி – சமற்கிருத திணிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், இரயில்வே, விமானம், துறைமுகம், இராணுவ தளவாடத் தயாரிப்பு என அரசு துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 567 தொழிலாளர் நீதிமன்றங்கள் கலைப்பு, வேளாண் சட்டத் திருத்தங்கள், மின்சார சட்டத் திருத்தம் என சமூகநீதி, மாநில உரிமை, தொழிலாளர் – உழவர் நலன் ஆகியவற்றின் மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

2. ஒரே தேசியம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே வேளாண் கொள்கை, ஒரே தேர்தல், ஒற்றையாட்சி சர்வாதிகாரம் என முன்னேறி வருகிறது பாசிச பாசக. இவ்வாட்சி, நிலவும் நாடாளுமன்ற அமைப்பு முறையைச் செயலிழக்கச் செய்து சிறுகும்பல் பாசிச சர்வாதிகாரக் கொடுங்கோல் ஆட்சியாக வளர்ந்துச் செல்கிறது.

3. நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தல், ஆளுநர் தலையீடு, ஜி.எஸ்.டி. பங்குத் தொகையைத் தரமறுத்தல், வேளாண்மை, சட்ட ஒழுங்கு, கல்வி என மாநிலப் பட்டியல் விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்றுதல், தமிழக கட்சிகளைச் சிதறடித்தல், தமிழக அரசியலைக் குழப்பி நிலையற்ற தன்மைக்கு மாற்றுதல் (Destabilize) என சங்பரிவார பாசிச பாசக தில்லி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.

4. பாசகவை ஒரு பாசிச கட்சியாகவும் தமிழ், தமிழர், தமிழக விரோத சக்தியாகவும், சமய சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சக்தியாகவும் தமிழ்நாட்டின் சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் நலன் பேண் அரசியல் ஆகிய மரபார்ந்த அரசியலுக்கு நேரெதிரான அந்நிய சக்தியாகவும் பிரகடனப்படுத்துகிறோம்.

தமிழக மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பாசகவைப் புறக்கணித்து அக்கட்சிப் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பாசிச பாசக எதிர்ப்பியக்கத்தின் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம்.

5. ’பாசிச பாசக எதிர் தமிழ்நாடு’ என 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களம் அமைத்து பாசக போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றி பாசகவைத் கட்டுப்பணம் கூடப் பெறமுடியாத வகையில் தோற்கடிக்க பாசிச எதிர்ப்பில் உறுதி பூண்ட அனைத்து சனநாயக ஆற்றல்களும் களம் காண்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. பாசிச பாசக தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டியது வரலாற்று கடமையும். அவசர தேவையும் ஆகும். ஆகவே, பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள சனநாயக சக்திகள் அனைவரும் வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் பாசிச பாசகவைத் தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

ஒருங்கிணைப்புக் குழுவிற்காக,

- பாலன்

Pin It