வரலாற்றின் கொந்தளிப்பில்தான் உண்மைகள் வெளிவருகின்றன என்பது  மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுதுகோலை இந்துத்துவ வெறியர்களும், சாதி ஆதிக்கவாதிகளும் தமிழக அரசின் துணையோடு முறித்துள்ளனர். ஆனால் அறிவுலகம் ஆர்த்தெழுந்து பெருமாள்முருகனின் பக்கம் நிற்கிறது.

perumal murugan நான் ஒன்றை தேவை கருதி பதிவு செய்கின்றேன். ஆதிக்க சாதியாக உள்ள கொங்கு வேளாளர் சாதியில் ஒரு நில உடமைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். நானும் எனது உறவினர்கள் பலரும் எங்கள் ஊரில் ஒரு தலைமுறையே ஜனநாயக கருத்தாளர்களாக அடித்தட்டு மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்பவர்களாக இயங்கி வருகிறோம். எங்களை மனிதர்களாக மாற்றியது மார்க்சிய இயக்கங்களும் பெரியாரிய இயக்கங்களுமே ஆகும்.

 அதுபோல் பெருமாள் முருகன் கொங்கு வேளாளராக பிறந்திருப்பினும் அவரது எழுதுகோல் அடித்தட்டில் அல்லலுறும் அனைத்து மக்களின் வாழ்க்கையைப் பேசியது மார்க்சியப் புரிதலால்தான்.  பா.ஜ.க.வின் இல.கணேசன் பெருமாள் முருகனின் வேர் கம்யூனிசத்தில் இருக்கிறது, எனவே அவர் எழுதக்கூடாது என ஆணவமாகப் பேசியுள்ளார். கம்யூனிசம் என்னும் பூதம் இனி ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும் என்று மார்கஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது.

திருச்செங்கோட்டின் மானமே போய்விட்டது என்று கொக்கரிக்கின்றவர்களுக்கு சில கேள்விகள்

1.ஒவ்வொரு கோவிலிலும் தேவரடியார்கள் என்று சொல்லும் தேவதாசிகள் இருந்ததும் அவர்களிடம் அப்பகுதியின் பண்ணையார்கள் படுத்துக்கிடந்ததும் பொய்யா?

2.தேவதாசி ஒழிப்புச்சட்டம் கொண்டுவந்து பெரியாரின் ஆதரவோடு முத்துலட்சுமி ரெட்டியார் அவர்கள் முன்னின்று வெற்றிபெற்றார். இது வரலாறு. கட்டிய மனைவி இருக்க ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களை பொட்டுக் கட்டிவிட்டு அனுபவித்து வந்தீர்களே. அப்பொழுது மானம் போகவில்லையா?

3.தினமணி ஏடு 15-01-2015 தேதியிட்ட ஆசிரிய உரையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கோவிலில் தங்கி குழந்தை பெற்றது பெருமாள் முருகன் குறிப்பிடும் முறையில்தான் என அறைந்து கூறியதே ஏன் கவுண்டர் தலைவர் ஈசுவரனும் இந்துத்துவக் காவலர்களும் வைத்திய நாதன் அவர்களை எதிர்த்துப் பேசவில்லை?

4.குந்தி குழந்தை பெற்றதே மற்றவர்களின் உதவியால்தான் என அனைத்து விமர்சகர்களும் கூறினார்களே ஏன் இவர்கள் மறுப்புரைக்கவில்லை?

5. பெண்கள் கணவன் இழந்தபின் வெள்ளைச்சேலை கட்டவேண்டும், மறு மணம் செய்யக் கூடாது என்ற வழக்கம் கொங்கு வேளாளர் முதலியார்கள் உள்ளிட்ட உடைமை வர்க்க சாதிகளில் கடுமையாக இருந்தது. இன்று வெள்ளைச்சேலை கட்ட வேண்டும் என்பது முற்றாக ஒழிந்துவிட்டது. பெண்களின் மறுமணம் என்பது இயல்பாக மாறி வருகிறது. வரலாற்றின் தவிர்க்க இயலாத இந்த மாற்றத்தை இந்த பண்பாட்டுக் காவலர்களால் ஏன் தடுக்க முடியவில்லை. அது மட்டுமா சாதிமறுப்புத் திருமணங்கள் சொந்த வேலைவாய்ப்புள்ள ஆணும், பெண்ணும் செய்வது அதிகரிக்கின்றது. இந்த மாற்றங்கள் சமூக வளர்ச்சிப்போக்கின் விதி. இதை 'ஆண்டவனாலும்' தடுக்க முடியாது.

 சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி சிந்திக்கின்ற, பேசுகின்ற அனைவரும் பெருமாள் முருகனின் பறிக்கப்பட்ட எழுத்து உரிமையை மீட்டுக் கொடுக்க ஒன்று பட்டுக் குரல் கொடுக்கவேண்டும். பெருமாள் முருகன் மௌனிக்கக் கூடாது.

 தமிழகத்தில் இந்துத்துவ சக்திகளும், சாதி ஆதிக்க சக்திகளும் ஒரு பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது வள்ளுவர் தொடங்கி பெரியார் வரை சமூக நீதிக்குக் குரல் எழுப்பிய தமிழ்மண்.

 உழைக்கும் தமிழ் மக்களின் குரலை நெறிக்கவரும் சாதிவெறி, மதவெறி சக்திகளை முறியடிப்போம்! உழைக்கும் தமிழர்களாக ஒன்றிணைவோம்!

Pin It