தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் தொடர்பான அறிவுரைக் குழுமத்தின் முன் திரு.மார்க்ஸ் அவர்கள் அளித்த அறிக்கை

ansari_340இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சென்ற 17.09.2012 முதல் நீதிமன்றக் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரியைத் (த/பெ: அப்துல் ரஹ்மான்) தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (1980) 3(1)(a) பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சென்ற 05-12-2012 அன்று பொது (சட்டம் & ஒழுங்கு) துறை செயலர் உத்தரவிட்டுள்ளார் (கடித எண். 4619/ச(ம)ஒ-எப்/2012). தமிமுன் அன்சாரியை நன்கு தெரிந்தவன் என்கிற முறையிலும், இவர் மீதான ஆதார வழக்கு குறித்த உண்மைகளை நேரில் சென்று ஆராய்ந்தவன் என்கிற முறையிலும் கீழ்க்கண்ட உண்மைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

அ. ஆதார வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளும் முரண்களும்:

1. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவர் மீது பதிவு செய்துள்ள வழக்கில் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC120(B). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் கூறுகின்றனர். 

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

2.இக்குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை என்பது மட்டுமல்ல இவற்றுக்கு எந்த ஆதாரமும் கியூ பிரிவு போலீசால் முன்வைக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் உள்ள பல செய்திகள் பொய்யானவை. இது குறித்த உண்மைகளை நேரில் சென்று சென்ற செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த மனித உரிமைப் போராளிகள் பேரா.கல்யாணி, எஸ்.வி.இராஜதுரை, பேரா. கோச்சடை, கோ.சுகுமாரன், வழக்குரைஞர் கமருதீன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தோம். நாங்கள் அறிந்த உண்மைகள் வருமாறு:

3.அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார்.

அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்பு படுத்தப்பட்டதுமில்லை. கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற மார்க்ஸ்ட் கட்சியில் அவர் இருந்த காலத்தில் அவர் மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை. கல்லூரியில் படித்த காலத்தில் அவர் தேசிய மாணவர் படையில் இருந்து சான்றிதழ்கள் பெற்றவர். பொதுப் பணிகளில் பங்கு பெற்ற செய்திகள் பல பத்திரிக்கைகளில் வந்துள்ளன. குடந்தையில் சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகிச் செத்தபோது தனது உயிரைப் பொருட்படுத்தாமல் பல குழந்தைகளைக் காப்பாற்றியவர் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். 

தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலி எனப்படும் வெங்காய வியாபாரிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கை புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார். 

4.அன்று நடந்தவை: 16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.

அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும், தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப் பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர். 

5. முதல் தகவல் அறிக்கையிலுள்ள முரண்கள்: பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படுகிறது. கியூ பிரிவு போலீசைப் பார்த்தவுடன் அன்சாரி ஓடியதாகவும், அவரை, இவர்கள் ஓடிப் பிடித்துக் கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கடை உட்பட அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, ஆப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர். தவிரவும் சீருடை இல்லாத கியூ பிரிவு போலீசைப் பாத்தவுடன் அன்சாரி ஒடினர் என்பதை ஏற்க இயலாது. அப்படி ஒரு சம்பவம் அன்று அந்த இடத்தில் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை. ஆக ஒரு பகற்பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் உள்ள இந்தப் பொய், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வழக்கு என்பதை உறுதிப்படுத்துகிறது.

6. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

7.தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

8. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. அந்த ராதாவை சுமார் இரண்டு மாதங்கள்வரை விசாரிக்கவே இல்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை. தற்போது அளிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் ஆணையில் (பத்தி xii) ராதா (எ) ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்ற விவரங்களாக, அவரது இராணுவப் பதக்கங்கள், அவரது சீருடை ஆகியவற்றின் புகைப்படங்கள், அவரது பராகிளைடிங் மற்றும் மோட்டார் சைக்கிள் ரைடிங் முதலான சி.டிக்கள் எனச் சொல்லப்படுகிறது. இவை எந்த வகையிலும் இரகசியங்கள் அல்ல என்பதும் எவ்வகையிலும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தன அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

9.தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் செய்யப்பட்டதாகவே உள்ளது.

10. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்ககுரைஞர்களுக்குத் தகவல் தெரிவிக்க வில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும். மீண்டும் 18.10.2012 அன்று முதல் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்த போதும் அன்சாரியின் வழக்குரை ஞருக்கு விவரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நாட்களில் தமீம் அன்சாரி தன்னிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பதும் அவருக்கும் நான்காவது எதிரிக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் அடங்கிய சி.டி கைப்பற்றப்பட்டது என்பதும் பொய் என்பதாலேயே தமீம் அன்சாரியின் வழக்குரைஞர்களுக்குச் செய்தி அறிவிக்கப் படவில்லை.

ஆ. தடுப்புக் காவல் ஆணை மற்றும் அதற்குத் துணையாக அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களிலுள்ள முரண்பாடுகள்:

1.ஆதார வழக்கில் கைது செய்யப்பட்டு 2 மாதங்கள் 18 நாட்களுக்கு மேலான பின்னரே தடுப்புக் காவல் ஆணை இடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பாக வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. தமீம் அன்சாரி தவிர இதர எதிரிகளாகச் சுட்டிக் காட்டப்படும் யாரும் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யப்படவும் இல்லை. கூடுதலாக முக்கிய விவரங்களோ, ஆவணங்களோ கிடைக்காத நிலையில் இத்தனை தாமதமாகத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான காரணம் குறித்து மனதைச் செலுத்தாமல் இந்த ஆணை இடப்பட்டுள்ளது.

2.தடுப்புக் காவல் ஆணையில் குறிப்பிடப்படும் 2, 3ம் எதிரிகள் தமீம் அன்சாரியுடன் வணிக உறவு கொண்டிருந் தவர்கள், 4ம் எதிரி. இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி. இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கியூ பிரிவு காவல்துறையால் அளிக்கப்படவில்லை. அவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதராலய உதவி அதிகாரி அமீர் சுபைர் சித்திக் எனப்படும் 4வது எதிரியை தமீம் அன்சாரி இதுவரை பார்த்ததே இல்லை என்பதோடு அப்படி ஒருவர் இருப்பதே அவருக்குத் தெரியாது. தமீம் அன்சாரிக்கும் இவர்களுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் “இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றுவது”, “தென்னிந்திய இராணுவ மையங்களின்மீது தாக்குதல் நடத்துவது” உள்ளிட்ட சதித் திட்டங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றிற்கும், 4வது எதிரியை அவர் சந்தித்ததற்கும் தமீம் அன்சாரி போலீஸ் காவலில் இருந்தபோது அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர, இந்த மூன்று மாத காலத்தில் விசாரணை அதிகாரியால் வேறு எந்தச் சிறு ஆதாரத்தையும் காட்ட இயலவில்லை. நீதிமன்றத்திற்கு வெளியே, தெரியாத நபர்களின் முன்னிலையில் போலீஸாரிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லத்தக்கதல்ல என்கிற சட்ட விதியின்மீது மனத்தைச் செலுத்தாமல் இந்த ஆணை இடப்பட்டுள்ளது.

3. தடுப்புக் காவல் ஆவணப் புத்தகத்தில் காணப்படாத சில முக்கிய ஆவணங்கள்:

(அ). தமீம் அன்சாரியிடம் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்குமூலத்திற்குச் சாட்சியாகக் காட்டப்படும் கொட்டப்பட்டு கிராம அலுவலர் முத்துக்குமார் மற்றும் அவரது உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் வசிப்பவர்களல்ல. அவர்கள் முன்னிலையில் தயாரிக்கப்பட்டதாக இவர்களின் 161 (3) வாக்குமூலத்தில் சொல்லப்படும் பார்வை மகஜர் மற்றும் மாதிரி வரைபடம் ஆவணப்புத்தகத்தில் இல்லை.

(ஆ). ஆவணப் புத்தகத்தில் இணைக்கப் பட்ட 161(3) வாக்குமூலங்களில் கியூ பிரிவு தலைமை காவலர் எண்: 1542 ஜி. ஜான்லியோன் ராஜின் வாக்குமூலம் காணப்படவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதா? பெறப்படவில்லையாயின் காரணம் என்ன? பெற்றிருந்தால் அது ஏன் இணைக்கப் படவில்லை?

(இ). ஆதார வழக்கில் 38 நபர்களிடம் இருந்து தடுப்புக் காவல் உத்தரவுக்கு முன்னதாகவே 161(3) வாக்கு மூலங்கள் பெறப்பட்டதாகவும், அனைத்து வாக்கு மூலங்களும் 26.11.2012 தேதிக்குப் பிறகு வெவ்வேறு நாட்களில் திருச்சி நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆவணப் புத்தகங்களில் வெறும் 23 நபர்களின் வாக்குமூலங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.

(ஈ). ஆவணப் புத்தகத்தின் 227, 239, 251, 263, 275, 279, 285, 289, 293, 303, 309, 321, 335, 339, 345, 349 பக்கங்களில் உள்ள 161(3) வாக்குமூலங்களில் அவை பதிவு செய்யப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை. வாக்குமூலத்தில் தேதி இல்லாதது பல்வேறு அய்யங்களுக்குக் காரணமாகின்றது.

(உ). முன்னதாகக் கைது செய்யப்பட்ட விவரமோ, இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவரமோ தமீன் அன்சாரியின் மனைவிக்கோ பெற்றோருக்கோ தெரிவிக்கப் படவில்லை. இவை டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நெறிமுறைகளுக்கும் இதர சட்ட விதிகளுக்கும் எதிரானவை.

(ஊ). ஆவணப் புத்தகத்தின் 199, 201 பக்கங்களில் ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ என்னும் அமைப்பு, தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட சுவரொட்டிகளின் புகைப்படங் கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஒட்டிய கண்டனச் சுவரொட்டிகள், மூத்த மனித உரிமைப் போராளிகள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அறிக்கை மற்றும் அவை குறித்துத் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட செய்திகள் ஆகியன ஆவணத்தில் இணைக்கப்படவில்லை. மற்றவற்றை மறைத்து ஒரு முஸ்லிம் அமைப்பை மட்டுமே இங்கே குறிப்பிடுவது முஸ்லிம்கள் இத்தகைய தேச விரோதச் செயல்களை ஆதரிக்கக்கூடியவர்கள் என்கிற அனுமானத்தின் அடிப்படியிலேயே செய்யப்பட்டுள்ளது. இது காவல்துறை உள் நோக்கத்துடன் செயல்படுவதற்கு ஒரு அப்பட்டமான ஆதாரமாக உள்ளது. த.மு.மு.க என்பது வெளிப்படையாக இயங்கும் அமைப்பு என்பதோடு இவ்வமைப்பைச் சேர்ந்த இருவர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சினைகளை மட்டுமின்றி சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு உட்பட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்காகவும் இயங்கும் ஒரு அமைப்பு. 

(எ). தமீம் அன்சாரியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலிஸ் நீதித்துறை நடுவர் முன் சமர்ப்பித்த மனு, அதற்கெதிராக தமீம் அன்சாரியின் வழக்குரைஞர் தாக்கல் செய்த மெமோ (21-09-2012) மற்றும் தமீம் அன்சாரி எழுத்துமூலம் சமர்ப்பித்த ஆட்சேபணை மனு; போலீஸ் காவலில் இரு முறை வைக்கப்பட்டிருந்த போதும் தமீம் அன்சாரியின் வழக்குரைஞர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை எதிர்த்து அவர்கள் கியூ பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிய தந்திகள், செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 24 தேதிகளில் நீதித்துறை நடுவர்கள் முன் சமர்ப்பித்த மெமோ, அஃபிடவிட், மனு மற்றும் கியூ பிரிவு ஆய்வாளர் சமர்ப்பித்த பதில் மனு; கியூ பிரிவு புலனாய்வு ஆய்வாளர் தடுப்புக் காவல் வேண்டி ஏதும் சத்தியப் பிரமான வாக்குமூலம் அளித்திருந்தால் அது முதலிய ஆவணங்கள் ஏதும் தடுப்புக் காவல் ஆவணத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.

வீட்டு உபயோகத்திற்காக இருந்த டாடா இண்டிகா காரை கியூ போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க 02-11-2012 அன்று தஞ்சையிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி இராஜேந்திரனிடம் அன்சாரியின் மாமா லியாகத் அலி ஒப்படைத்தார். இதற்கு ஒப்புகை இரசீது ஏதும் தரப்படவில்லை. ஆனால் திருச்சி அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அன்சாரியின் மாமனார் அப்துல் ஜலீலும் மாமா லியாகத் அலியும் ஒப்படைத்ததாகப் பொய்யாக வழக்கு ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் காரை ஒப்படைக்க வேண்டி அன்சாரி சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு (R.P.No..8123/2012), இதறகு எதிராக கியூ பிரிவு போலீஸ் அளித்த ஆட்சேபணை மனு ஆகியனவும் ஆவணத் தொகுப்பில் இடம் பெறவில்லை.

தமீம் அன்சாரி பக்கமுள்ள நியாயங்களை விரித்துரைக்கும் இந்த ஆவணங்கள், தடுப்புக் காவல் ஆணையை வழங்கும் அதிகாரியின் பார்வையிலிருந்து இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய முக்கிய ஆவணங்கள் தடுப்புக் காவல் ஆணையிடும் அதிகாரியின் கண்களிலிருந்து காவல்துறையால் மறைக்கப் பட்டுள்ளன என்றால், அது குறித்து எந்தல் கவலையும் இன்றி தடுப்புக் காவல் ஆணையில் அதிகாரி கையொப்பமிட்டுள்ளார். 

ஒரு இளைஞனின் வாழ்வில் மிகப்பெரிய வீழ்ச்சியை அளிக்கக் கூடிய ஒரு ஆணையில் பொறுப்புள்ள அதிகாரி மனத்தைச் செலுத்தாமல் கையொப்பமிட்டுள்ளது வருந்தத் தக்கது. இது அப்பட்டமான சட்டமீறல் ஆகும்.

(4).அன்சாரியின் மனைவி நபீலா, மாமனார் அப்துல் ஜலீல், மாமா லியாகத் அலி ஆகியோர் கியூ பிரிவு போலீசாரிடமோ வேறு யாரிடமோ வாக்குமூலம் எதுவும் அளிக்க வில்லை. ஆனால் இவர்கள் 161(3) வாக்குமூலங்கள் அளித்துள்ளதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஒரு பொய்.

(5). அன்சாரி பிணையில் வெளிவரும் சாத்தியக் கூறு உள்ளதால் அவரைத் தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமென தடுப்புக்காவல் ஆணை பத்தி 11ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார வழக்கில் அன்சாரி பிணை மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதும் அவர்மீது இ.த.ச 120(B) மற்றும் Official Secrets Act S 3, 4, 9 ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவலில் வைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவருக்கு பிணையில் விடுதலை கிடைக்க வாய்ப்பிருந்திருக்காது. இது குறித்தும் தடுப்புக் காவல் ஆணையில் கையொப்பமிட்ட அதிகாரி மனதைச் செலுத்தவில்லை.

இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் ‘கியூ’ பிரிவு குறித்து ஒரு குறிப்பு:

 கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலான வற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.

இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

கியூ பிரிவு போலீஸ் இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளது. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங் கள் நடைபெற்றிருந்த ஒரு தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டுள்ளது. தவிரவும் கூடங்குளம் போராட்டம் பெரிய அளவில் நடைபெற்று வரும் சூழலில் தமிழகத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் உள்ளது.

இத்தகைய அரசியல் நோக்கங்களின் பின்னணியில் ஒரு அப்பாவி இளைஞர் இன்று அரசியல் காரணங்களுக்காகப் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்க ளுக்காக இரக்கமின்றிச் செயல்படும் காவல்துறை, அரசின் முகவராகச் செயல்பட்டு. கொடுக்கப்பட்ட ஆவணங்களின்மீது மனதைச் செலுத்தாமல் தடுப்புக் காவல் ஆணையில் கையொப்பமிட்டுள்ள அரசுச் செயலாளர் ஆகியோரால் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை, நீதி வழங்கு அநுபவம் மிக்க இந்த அறிவுரைக் குழுமம்தான் சரி செய்ய வேண்டும். 

பொடா, தடா ஆகிய சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்களின் வீதம் அதிகம் என்பதையும், இவர்களில் 90 சதத்திற்கும் மேலானோர் பல ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நீண்ட சிறைவாசம் மற்றும் அதனால் ஏற்பட்ட அவப் பெயர் ஆகியவற்றால் அவர்களில் பலர் இன்று தம் வாழ்வை இழந்து நிற்கின்றனர். அந்த நிலை தமிம் அன்சாரிக்கும் வந்துவிடலாகாது.

கண்ணீருடன் தங்கள் அலுவலகம் முன் காத்திருக்கும் தமீம் அன்சாரியின் இளம் மனைவிக்கும் அவர்களின் நான்கு வயது மகனுக்கும் நீதி வழங்குங்கள்; தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் ஆணை தவறானது என அரசுக்கு அறிவுரை வழங்குங்கள் என உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்.

டிசம்பர் 26, 2012

- அ.மார்க்ஸ், சென்னை. முன்னாள் இயற்பியல் பேராசிரியர், (முகவரி: 3/5, முதலாம் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020) 

Pin It