தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றால் பக்குவப்படுத்தப்பட்ட திராவிட இயக்க மண்ணில் ஆரிய பி.ஜெ.பி. தன் கால் பதிக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது என்று " டைம்ஸ் ஆஃப் இந்தியா " ஆங்கில நாளேடு (18.11.2014) அம்பலப்படுத்தியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு ஆங்கிலேயர்கள் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இப்பிரிவினைக் கோட்பாட்டின் மூலம் தற்போதைய பா.ஜ.க அரசு மத ரீதியாக மக்களை பிரித்து ஒற்றுமையை சிதைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. தற்போது சமூக நீதிக் களமான தமிழகத்தில் கால் பதிக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தின் வலிமையால் சுதந்திரத்திற்குப் பிறகு மதவாத சக்திகளை வேரோடு பிடுங்கி எரிந்ததுமில்லாமல் திராவிட கட்சிகளின் தாக்கம் இன்னும் நூற்றாண்டு வரை இருக்கும்படி செய்துவிட்டது.

ஆனால் மத்தியில் பிரித்தாளும் கொள்கையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க தற்போது தமிழகத்திலும் தனது பிரித்தாளும் கொள்கையை களமிறக்கத் தொடங்கியுள்ளது.

ஆரியர்களின் வருகை

ஆரியர்கள் வந்த பிறகு வட இந்தியாவில் பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினார்கள். தென் இந்தியாவிலும் பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினார்கள். தென் இந்தியாவிலும் தங்கள் பலத்தை காண்பித்து வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்கள். இதற்கான எதிர்ப்பு வடக்கில் தொடங்கினாலும், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களின் மறைவிற்குப் பிறகு ஆரிய எதிர்ப்பு வலுவிழந்துவிட்டது அல்லது அந்த எதிர்ப்பு சக்திகள் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு அடிபணிந்து விட்டன.

ஆனால் தமிழகத்தில் அப்படியல்ல! பெரியாரின் திராவிடர் கழகத்தின் தாக்கம் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த தி.மு.க. மற்றும் ஆ.தி.மு.க. ஆட்சியின் காரணமாக நீடித்து வருகிறது.

முக்கியாமாக திராவிட கருத்தாழமிக்க தமிழகத்தை மத்தியில் பலம் வாய்ந்த ஆரியக்கூட்டம் ஒரு வகை பகைமைப் பார்வையே பார்த்து வந்தது. இதன் காரணமாகத்தான் அறிஞர் அண்ணா " வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! " என்றார்.

இதற்கு காரணம் உண்டு ஆரியர்களின் விரோத மனப்பான்மை எந்த அளவிற்கு ஊறிவிட்டது என்றால், தமிழ் மொழியை ஒழிக்கக் கங்கணம் கட்டி, இந்தியை முழுமையாகத் திணிக்கும் சூழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். பா.ஜ.க வின் ஆட்சியில் இந்தி மொழித் திணிப்பு மேலும் தீவிரமாகியுள்ளது.

இடையில் புகுந்தது ஆரிய இனம்!

இந்துத்துவ சக்திகளின் கூறான வேதங்கள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப் பட்டவை என்ற கட்டுக்கதைகள் செல்லுப்படியாகவில்லை. சமீபத்திய மனித இன இடப்பெயர்வு குறித்த ஆய்வு ஒன்றில் இந்திய தீபகற்பத்தில் 2000 ஆண்டுகளுக்கு இடையே பெரிய அளவில் அந்நிய இனம் புகுந்தது.

இதற்கு முன்பே பன்னெடுங்காலமாக இந்திய தீபகற்பத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு ஓர் இனம் வாழ்ந்து வந்தது என்ற உண்மை ஆரியர்கள் சமீபத்தில் இந்தியாவிற்குள் புகுந்த வந்தேறிகள்தான் என்பதை உறுதி செய்துள்ளது. இதிலிருந்தே வேதங்கள் எனும் கட்டுக் கதைகள் மூலம் தன்னை இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் என்று போலியான ஒரு தோற்றத்தை ஆரியக் கூட்டம் உருவாக்கிய சூழ்ச்சி தெரிய வரும். அதே நேரத்தில் இப்பொய்யை தற்போதைய அரசு வரலாற்றுப் பாடங்களில் மாற்றங்களைச் செய்து உண்மையாக்க முயல்கிறது.

வட மற்றும் தென் மாநிலங்களில் பாஜகவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு நடைமுறை அனுபவம் கிடைத்தது. அதாவது வட மாநிலங்களில் எளிதில் மத ரீதியாக மக்களை ஏய்த்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்களுக்குத் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது செல்லுபடி ஆகாது. ஆகவேதான் மோடி ஊழல் அற்ற என்ற ஒரு பிரம்மையை தமிழகத்தை மனதில் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

திராவிட கட்சிகள் மீது அவதூறு பரப்புதல்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியைக் குறித்து முதலில் மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக பாஜகவினருக்கு கடுமையான சில உத்தரவுகளைப் போட்டிருக்கின்றனர் மோடியும் அமித்ஷாவும்.

முக்கியமாக தற்போது முதல் குறி திராவிட சிந்தனையை உடைப்பதுதான் அவர்களின் பணி. இதற்காகவே முதலில் ஆரிய - திராவிட எனும் கோட்பாட்டை உடைத்து திராவிட சிந்தனை மீது பழித்தூற்றும் வகையில் பல்வேறுக் கட்டுக்கதைகளை தயார் செய்து மக்களிடையே பரப்புவது, அதாவது பாரம்பரிய இந்திய மரபை ஆங்கிலேயர்கள் சிதைத்தனர். அதைத் திராவிட சிந்தனைக் கொண்ட கட்சிகள் இன்றும் காப்பாற்றி வருகின்றனர் என்ற பொய்யான பிரச்சாரம் உள்ளூர மேற்கொள்ளப்படுகிறது.

இரஜினியை இழுக்க முய்ற்சி

அதற்கேற்றாற்போல் பிரபல திரைப்பட நடிகர்களைத் தங்களின் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகின்றது. இதன் முதல் படியாக ரஜினிகாந்தை தங்கள் வலையில் சிக்க வைக்க முழு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

பாஜக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதிக்க முடியாது. இதன் காரணமாக 2014 இல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பார்த்தது. இருப்பினும் அதன் வாக்கு வங்கி எதிர்பார்த்த அளவிற்குக் கூடவில்லை.

தற்போது முக்கியப் பிரச்சனையான மீனவர் சிக்கலை பாகஜ கையில் எடுத்துள்ளது. ஒருபுறம் இராஜபக்சேவிற்கு மத்திய அரசு முழுமையாக ஆதரவு தரும் நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்பது தமிழக மக்களின் மத்தியில் மிகப்பெரும் கேள்வியாக எழுகிறது. அதே நேரத்தில் இராஜபக்சேவுடன் சுமூகமாகப் பேசி மீனவர் பிரச்சனையைத் தீர்ப்பது போன்ற ஒரு மாயையும் தமிழக பாஜக கிளப்பி வருகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் திராவிட சிந்தனையை ஒழிக்க பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டே எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறது. இதன் முன்னேற்பாடாகத்தான் நாடார் சமூகத்தை சார்ந்தவர்களை முக்கிய பதவியில் அமர வைத்து சமூகநீதிக்கு ஆதரவான அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான எதிரிகள் நாங்கள் (பாஜக) அல்ல என்று காட்டுவது போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டது.

மாயையை உருவாக்குகிறார்கள்

மேலும் பாஜக வின் இந்துத்துவா சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்க தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காஞ்சி சங்கராச்சியாருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது போன்ற ஒரு போலியான மாயையை உருவாக்குவது மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் அதிகப்படியான பிற்படுத்தப்பட்ட மக்களை இணைக்க செய்வது போன்ற சூழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன என்று " டைம்ஸ் ஆஃப் இந்தியா " (18.11.2014 செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இரகசியமாகத் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா தியாகராயர் நகரில் மதம் தொடர்பான மடம் ஒன்றிற்கு சென்று வந்தார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தமிழகப் பிரமுகர்கள் பலர் அவரை சந்தித்ததாக தெரிகிறது. அமித்ஷா வந்து சென்ற பிறகு நடந்த சம்பவங்கள் பாஜகவின் சூழ்ச்சியை விரைவில் வெளியே கொண்டு வந்துவிட்டன.

அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ். தமிழகம் முழுவதும் ஊர்வலம், போராட்டம், பொதுக்கூட்டம்,என ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை தமிழகத்தில் மறைமுகமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சக்தி இப்போது வெளிப்படையாக களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் திராவிட சிந்தனையை வேரில் இருந்து அழித்தொழிக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பதவிகளைக் கொடுத்து அவர்களை பகடை காய்களாகப் பயன்படுத்தி களமிறங்கும் பாஜகவின் சூழ்ச்சி எந்த அளவிற்கு பலன் தரும் என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.