எங்கேயும் எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான ஒரு சூழல் இந்த நாட்டில் இருந்துக்கொண்டே இருக்கிறது.

மதம் என்பது அவரவருடைய வாழ்க்கை நெறி அல்லது வாழ்க்கை முறையாக இருக்கிற வரையில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. அவரவர் நெறியில் அவரவர் வாழ இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் எப்போது மதநெறி எப்போது மத வெறியாக மாறுகிறதோ, அந்த நாடு கலவரத்துக்கு உள்ளாகி விடுகிறது. பொதுவாகவே உலகம் முழுவதும் நாம் ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் இரண்டு நாடுகளுக்கு இடையிலே நடந்த போரில் இறந்துபோன மனிதர்களைக் காட்டிலும் இரண்டு மதங்களுக்கு இடையே நடந்த போராட்டங்களிலும் கலவரங்களிலும் இறந்து போன மனிதர்களின் எண்ணிக்கை தான் கூடுதலாக இருக்கிறது.

அதுவும் 1992 ஆவது ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இதுபோன்ற கலவரங்கள் அங்கங்கே நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கலவரம் என்றால் இன்னொரு பக்கம் மத நல்லிணக்கம் குறித்த கலை இலக்கியங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சிறுகதை மதம் என்பது அவரவர் வாழ்க்கை நெறியாக மட்டும் இருக்கட்டும்: ஏன் முட்டிமோதிக் கொள்கிறீர்கள் என்கிற உணர்வை ஊட்டுகிற சிறுகதையாக உள்ளது. அணில்குஞ்சு என்பது அக்கதையின் பெயர். மிக அருமையான கதை அது. எழுதப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் அந்தக் கதை பொருத்தமாக இருக்கிறது.

பாரூக் என்று ஒரு இளைஞன் 10 வயது இருக்கும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியிலே வருகிறபோதுமுதலில் ஒரு கூட்டத்திலே பேசுகின்ற ஒரு செய்தி அவன் கா திலே விழுகின்றது கொஞ்ச தூரம் நடந்து வந்தால், இன்னொரு கூட்டத்திலே பேசப்படுகின்ற செய்திகளும் அவன் காதிலே விழுகின்றன. முதல் கூட்டத்திலே, பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்று பேசப்படுகிறது. இன்னொரு கூட்டத்தில் பாபர் மசூதியை இடித்ததினாலேயே தான் நாட்டிலே இத்தனை கலவரங்களும் என்று சொல்லப்படுகிறது.

இரண்டையும் கேட்டுக் கொண்டு பாரூக் வருகிறபோது, மரத்தில் இருந்து தொப்பென்று ஒரு அணில் குஞ்சு கீழே விழுகிறது. அப்போதுதான் பிறந்திருக்கிற, அழகான வேகமாக ஓட முடியாத ஒரு அணில் குஞ்சு. அதைப்பார்த்தபோது, அந்த பாரூக் என்கிற சிறுவனுக்கு அந்த அணில் குஞ்சின் மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது. அதைப் பிடித்துத் தன் கைகளிலே வைத்துக் கொள்கிறான். அழகாக இருக்கிறது. அது சின்ன அணில் குஞ்சு என்பதினாலே அதனுடைய கீழ்ப்பகுதி சிவந்திருக்கிறது. அது அதற்கு மேலும் அழகூட்டுகிறது. அதன் மேலே இருக்கிற மூன்று கோடுகளையும் அவனும் ஒருமுறை தடவிக் கொடுத்து, அந்த அணில் குஞ்சைத் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு வருகிறான்.

அவனுடைய அம்மா கேட்கிறாள். என்னடா இந்த அணில் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாயே என்று. அம்மா மரத்திலிருந்து தொப்பென்று விழுந்தது. அழகா இருக்கும்மா அதனால தூக்கிட்டு வந்தேன் என்று சொல்கிறான். அப்போது கறிக்கடை வைத்திருக்கிற அவனுடைய வாப்பா வீட்டுக்குள்ளே வருகிறார். அவரும் அந்த அணில் குஞ்சைப் பற்றிக் கேட்கிறார். முதலில் அவரும் அழகாய் இருக்கிறது வைத்துக்கொள் என்றுதான் சொல்கிறார். ஆனால் பாரூக் சொன்ன சில வார்த்தைகள் அவருக்குக் கோபமூட்டுகின்றன. பாரூக் சொல்கிறான் அப்பா இந்த அணில் குஞ்சுக்கு மேலே இந்த மூன்று கோடுகள் எவ்வளவு அழகா இருக்கு

பார்த்தீங்க்ளா? இது ராமனுக்கு பாலம் கட்ட இந்த அணில் குஞ்சு உதவியபோது அவர் தடவிக் கொடுத்ததினாலே வந்துச்சாம். எங்க பள்ளிக்கூடத்திலே டீச்சர் சொன்னங்க என்று சொன்ன உடனேயே வாப்பாவுக்குக் கோபம் வருகிறது. ஏன்டா ராமன் வைத்திருந்த குஞ்செல்லாம் இங்கே ஏன் கொண்டு வருகிறாய். கொண்டு போய் முதலில் வெளியே விடு என்கிறார்.

அணில் குஞ்சு அழகாக இருக்கிறது. அதை நீ வைத்துக்கொள் என்று சொன்ன அதே மனிதர்தான், மதத்தோடு தொடர்பு படுத்தப்பட்ட உடனேயே கோபப்பட்டு, அப்படி ராமர் தடவிக் கொடுத்த அணில் என்று டீச்சர் வகுப்பிலே சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றால் அதையெல்லாம் நம் வீட்டிலே வைத்துக் கொள்ளக் கூடாது. அதை முதலில் கொண்டு வெளியே விடு என்கிறார். அந்தப் பையனுக்கு மனம் வரவில்லை. அழகாக இருக்கிற இந்த அணிலுக்குள் எப்படி மதம் வந்து சேர்ந்தது என்று அந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை. ஆனாலும் வாப்பாவிடத்திலே அதையெல்லாம் கேட்டு அவரோடு வாதாட முடியாது. இல்லையப்பா நான் வைத்துக் கொள்கிறேன் என்று கெஞ்சிப் பார்க்கிறான்.

அவர் விடுவதாக இல்லை. அம்மா இடையிலே புகுந்து, இரண்டு பேருக்கும் இடையே ஒரு சமாதானம் செய்கிறாள். சரி நீங்கள் சொன்னதற்கு அப்புறம் அவன் வைத்துக் கொள்ளமாட்டான். கொண்டு போய் விட்டு விடுவான். ஆனால் இந்த ராத்திரி நேரத்திலே எங்கே கொண்டு போய் விடுவது... அதனால் வைத்திருந்து காலையிலலே கொண்டு போய் விட்டு விடுவான் என்று அவள் சமாதானம் செய்கிறாள். அந்தச் சமாதானத்தை இரண்டு பேர்களுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

காற்றுப் போவதற்கு வசதியான ஒரு கூண்டுக்குள்ளே இரவு வைத்து, அதற்குத் தேவையான தீனிகளையும் கொடுத்து அந்த அணிலின் அழகை ரசித்து ரசித்து அந்தப் பையன் பாரூக் பார்த்துக் கொண்டிருக்கிறான். மறுநாள் காலையில் பொழுது விடிகிறபோது, சொன்ன வார்த்தையைக் காப்பற்ற வேண்டும். அப்பாவுக்கு இனிமேலும் வைத்துக் கொண்டிருந்தால் கோபம் வந்துவிடும் என்று அணில் குஞ்சை எடுத்துக் கொண்டு, எடுத்த அந்த மரத்துக்கு அருகிலேயே கொண்டு போய் விட்டு விடலாம் என்று நினைத்து அங்கே போகிறான்.

போகிறபோது அந்த ஊரைச் சேர்ந்த ஆராவமுத ஐயங்கார் என்பவர் எதிரிலே வருகிறார். என்னடா அம்பி கையிலே அணில் குஞ்செல்லாம் வைச்சிண்டிருக்கிறே என்று கேட்கிறார்.

இந்த பையன் நடந்ததைச் சொல்கிறான். இங்கிருந்து நேற்று எடுத்துக் கொண்டு போனேன். இது ராமர் தடவிச் கொடுத்த அணில் என்பதினாலே வாப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. திரும்பவும் கொண்டு போய் விட்டுவிடச் சொன்னார். அதற்காக வருகிறேன் என்கிறான். அப்போது ஆராவமுத ஐயங்கார் கேட்கிறார். எங்களுடைய ராமர் வைத்திருந்த குஞ்செல்லாம் நீங்கள் ஏன் கொண்டு போய் வைத்திருக்கிறேள். உங்கள் வீட்டிலெல்லாம் இருக்கக்கூடாது. இங்கே கொண்டு விட்டு விடுவதுதான் சரி என்கிறார். யாருமே அதை ஒரு அணிலாக.... ஒரு உயிராகப் பார்க்காமல் மதத்தோடு இணைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.

அந்த நேரத்தில் பாரூக்கினுடைய அப்பா அந்த இடத்துக்கு வருகிறார். பையனிடம் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவரைப் பார்த்து இவர் கேட்கிறார். அவர் நடந்ததைச் சொன்னபோது வாப்பாவுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. ராமருக்கு உதவி செய்த அந்த அணில் குஞ்சை நம் வீட்டுக்கு ஏன் கொண்டு வருகிறாய் என்று கேட்க அதே அப்பாதான், இப்போது ஆராவமுத ஐயங்கார் கேட்ட உடனே. ஏன் நாங்கள் அணில் குஞ்சை வைத்துக் கொள்ளக்கூடாது. அது உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அணில்

எல்லாருக்கும்தான் சொந்தம். இதிலே நீங்கள் எப்படிச் சொந்தம் கொண்டாடுவது உங்கள் மதத்துக்கும் அணிலுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறார். இரண்டு பேருக்கும் வாதம் வலுக்கிறது.

சின்னப் பையனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் இந்தப் பக்கத்திலிருந்து இரண்டு பேர் வருகிறார்கள். அந்த பக்கத்திலே இருந்து ஒருவர் வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம் சூடேறுகிறது.

அணில் குஞ்சை ஒரு இஸ்லாமியர் தன் வீட்டிலே வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? என்கிற ஒரு தேவையற்ற விவாதம். அந்த இடத்திலே ஒரு சண்டையாக மாறுகிறது? பலரும் கூடுகிறார்கள். இந்த நேரத்தில் பாரூக்கினுடைய அம்மாவும் அங்கே வந்து சேருகிறாள். அவள் சொல்கிறாள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த அணில் குஞ்சினால் பத்து கொலை விழும்போல இருக்கிறது. வேண்டாம் பாரூக் விட்டு விடு என்கிறாள். அதை நான் விடுவதற்குத்தானே வந்தேன் அம்மா. அதற்குள் இவ்வளவு பெரிய சண்டை வந்து விட்டதே என்கிறான்.

அமைதியாக... அன்பாக இருந்தவர்களிடத்திலேயே மதம் இப்படி ஒரு கலவரத்தைத் தூண்டி விடுகிறது என்று இந்த கதை மிக அழகாகச் சொல்கிறது. அதற்குப் பிறகும் அதை வைத்துக் கொண்டிருக்க மனமில்லாம் அந்தப் பையன் அணில் குஞ்சை கீழே விட்டு விடுகிறான். அப்போது மரத்திலிருந்து ஒரு பருந்து ஓடிவந்து அந்த அணில் குஞ்சைக் கவ்விக் கொண்டு போய்விடுகிறது. இந்த ஊரில் மதக் கலவரம் வந்த விடாமல் இருக்க வேண்டுமென்று அந்த அணில் குஞ்சு தன்னைத் தியாகம் செய்து கொண்டு விட்டது என்று அந்தத் கதை முடிகிறது.

எங்கேயும் எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான ஒரு சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்து காட்டுகிற ஒரு அருமையான சிறுகதையாக இந்தக் கதை இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய எழுத்தாளர் யார் என்று சொல்ல நான் மறந்துவிட்டேன். அத்தனை பேரும் அறிந்த ஒரு எழுத்தாளர் தான் அவர். நம்முடைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற கதைதான் இந்த அணில் குஞ்சு என்கிற சிறுகதை.

Pin It