ஆரியப் பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எல்லாப் பண்டிகைகளிலும் மிகவும் ஆபாசமானதும் தமிழர்களுக்கு மானக் கேடானதுமான பண்டிகையே தீபாவளி.

தமிழனை ஆரியன் ஆடக்கியாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் ஆரியக் கடவுளின் கொலைகாரத் தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து, நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும்.

நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன், ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன். ஆகையால்தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான்.

ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதைத் தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா?

கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகா விஷ்ணுவின் அவதாரமாகும்.

ஏசுநாதர் கிருஸ்துவ மதத்தை உண்டாக்கியவர், இவரைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப் பற்றிய கதை.

ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணøன்ப பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை, சகடாசூரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.

கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.

கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயை பிளந்து கொன்றான்.

மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்.

குதிரையுருக் கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.

வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.

மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.

சபலன், கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்.

தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளி கொன்றான்.

பஞ்சகன் என்பவனைக் கடலில் சென்று கொன்றான்.

சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்.

முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்.

நரகாசுரனைக் கொன்றான்.

வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணையையும் கொன்றான்.

சாளுவனைக் கொன்றான்.

சிசுபாலனைக் கொன்றான்.

துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படுகொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுள்ளன இங்கு எழுத இடமில்லை.

இப்பேர்ப்பட்ட கொலைக்காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயஞ் செய்து விடல்'' என்ற உயர கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைக்காரக் கிருஷ்ணன் கதையைப் புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.

கிருஷ்ணன் கொலைக்காரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன்(?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில் – குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்துக் கண் குளிரப் பார்த்தான்!

ராதை, ருக்மணி, சத்தியபாமை, சாம்பவதி, காளிந்தி, மித்திர, விந்தை, சத்தியவதி, பத்திரி, லட்சுமணை, நப்பின்னை, சோபை, பிரனை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.

பிறகு சில்லரையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டு வந்து 16,000 பெண்களையும் மணந்து கொண்டான்.

இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக் கன்னிகைகளையும் மணந்து கொண்டான்.

இவர்களைத் தவிர பல்லாயிரக்கணக்கான கோபிகாஸ்தீரிகளுடன் லீலைகள் புரிந்தான்.

கொலையும் விபசாரமும் மட்டுமல்ல, கொலை செய்யவும் தூண்டினான் கீதையின் மூலமாக!

கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம். அப்படினால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா? கொண்டாடலாமா?

கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?

உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வ வல்லமைக்குத் தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா?

பிற மதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும், பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காறித் துப்ப மாட்டார்களா?

கடவுள் என்றால் – கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது, கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?

ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலைமுழுகுங்கள்!

இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப்பட்டுத் தானே லட்சக்கணக்கான மக்கள் பிற மதங்களைத் தழுவியிருக்கிறார்கள்.

ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைக்காரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டலாமா? கண்டிப்பாய்க் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! தமிழர்களே!

"விடுதலை' 27.10.1958

Pin It