கே : கடந்த கால் நூற்றாண்டு அனுபவம் பற்றி....

பதில் : இந்த உலகம் அநீதியானது. சமநீதிக்கான போராட்டம் தொடர்கிறது. உழுது, விதைத்து அறுப்பார்க்கு உணவு இல்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வோர்க்கே செல்வமெலாம் உண்டு. உண்மை சொல்வோருக்கோ, எழுதமாட்டாத அளவுக்குப் பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே மடிவதுண்டு. இப்படியொரு பார்வையுடன் பரவலாக்கப்பட்டிருந்த செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

இயற்கை மருத்துவம் தமிழகத்தில் புத்துயிர் பெறப்பாடுபட்டவர்களில் ஒருவர், கோபிச் செட்டிப் பாளையம் வெள்ளிமலை ஆவார். உழவு குறித்த பாதையில் பணிபுரிவோர் குறைவு. அதில் பார்வையைக் குவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். வாழும் சூழலும் உழவும் இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆதலால், இரண்டும் குறித்த தேடலும் பகிர்தலுமாகக் காலாண்டு ஓடியுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றிய அனுபவங்கள், வெளிநாடுகளில் கண்டவை, கேட்டவை இவற்றை உழவர்களிடம் பரிமாறியபோது அவர்கள் செய்து பார்த்துத் திருத்தம் செய்தார்கள். நாற்பதாண்டுப் பயணத்தில் சில திருப்பங்களை நினைத்துப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.

1963க்கும் 1969 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோவில்பட்டி மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தேன். 11 விஞ்ஞானிகளும் 22 உதவியாளருமாக பணிபுரிந்தோம். டெல்லியிலிருந்து ஒட்டுக் கட்டி சொத்தை (வீரிய) விதைகள் இறக்குமதியாயின. உப்பு உரங்கள் பரிந்துரைக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி இரசாயணங்கள் புகுத்தப்பட்டன. 158 ஏக்கர் பண்ணையில் ஒரு சிறு துண்டு நிலத்தில் கூட லாபம் வரவில்லை. இந்த உழவியல் முறை நீடித்தால் நமது உழவர்கள் கடன் படுவார்கள். நிலம் தரிசு போடப்படும். இதற்கு உழவன் மகனாகிய நம்மாழ்வார் துணை போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்து வெளியேறினேன். அன்று கண்ட முடிவு சரி என்பதையே காலம் நிரூபித்துள்ளது.

1969க்கும் 1979க்கும் இடையில் களக்காடு ஒன்றியத்தில் பணிபுரிந்தேன். அது நோபல் பரிசு வாங்கிய அருட்தந்தை டோமினிக் பியர் தொடங்கிய நிறுவனம். அந்த நிறுவனம் உழவர்களுக்கு தண்ணீர் வசதி செய்துகொடுத்து, உழவு மருத்துவம் போன்ற சேவையும் அளித்தது. நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தோம். 10 ஆண்டுக்குப் பிறகு பார்த்தபோது உழவர் எல்லாம் கடனாளியாக இருந்தார்கள். வியாபாரிகள் எல்லாம் பணக்காரர்களாகிவிட்டார்கள். முக்கியத் திருப்பம் தர்மபுரி மலைகளில் இருந்தது. 1979க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலம் அது. காடுகள் கரியானதால் வாழ்க்கை கருகிப் போயிருந்த மக்களுக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடம் இருந்து கற்கத் தொடங்கினேன். அதுவே தொடர்கல்வியாக எனக்கு அமைந்துவிட்டது.

1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோடையில் வறட்சி. குளிர்காலத்தில் (மூன்று நாள் மழையில்) வெள்ளம். ஒரே ஆண்டில் வெள்ளமும் வறட்சியும் தோன்றுவது எதனால்? ஒரே விடை, மரம் இல்லை. வெள்ளைக்காரன் வெளியேறியபோது நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு காடாக இருந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் காடாக இருந்தால் நாட்டிற்கு நல்லது என்றார்கள். பணம் ஒதுக்கினார்கள். படைவீரர்களுக்குரிய அதிகாரத்தோடு வன அதிகாரிகள் தர்பார் நடத்தினார்கள். 1982 கணக்குப்படி 17 விழுக்காடு பரப்பு காடாக உள்ளதாக கதை விட்டார்கள். 1986ஆம் ஆண்டு ஆப்பிள், அதுதான் நாம் வான்வெளியில் சூழல்விட்ட செயற்கை நிலா எடுத்தனுப்பிய படத்திற்கு விஞ்ஞானிகள் வண்ணம் தீட்டிப் பார்த்தார்கள். 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியது. அதில் மூன்று விழுக்காடு வெறும் முற்புதர்கள்.

சமூக நலம் காக்க காடு வளர்ப்பீர், என்று வெளிநாட்டவர் திட்டமும் நிதியும் கொடுத்தார்கள். தமிழ் நாட்டிற்கு சுவீடன் நாடு 110 கோடி ரூபாய் நிதியளித்தது. அது கொண்டு வனத்துறையினர் ஏரி, குளங்களில் கருவேல மரமும் (அதுவும் இறக்குமதியானது) மேய்ச்சல் நிலங்களில் தைல மரங்களும் (மாடு தின்னமுடியாதது) மட்டுமே நட்டு வளர்த்தார்கள். காணாமற் போனது சமூக நிலம். இது குறித்து அன்று அரசு ஆலோசகராக இருந்த வங்காளி திரு.கி.ரத்தீன்ராய் நமது கவனத்தைத் திருப்பினார். அவர் மூலம் நம் கைக்கு வந்து சேர்ந்த புத்தகம் ஒரு வைக்கோல் புரட்சி. அது முதற்கொண்டு இயற்கை வழி உழவாண்மை பற்றிய தீ உள்ளத்தில் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இயற்கை வழி உழவாண்மை ஒன்றே நிலைத்தும் நீடித்தும் இருக்க வல்லது. இயற்கை வழி என்பது யூரியாவுக்குப் பதிலாகச் சாணி போடுவது இல்லை. உயிர் உள்ள இயற்கை. உயிர் இல்லா இயற்கை இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளை அறிந்த பயிர் செய்வது இயற்கை வழி. எடுத்துக்காட்டாக, பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றைத் தின்னும் பூச்சிகளும் குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்வதற்கு என்று நஞ்சு தெளித்த போது நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தன.
பறவைகள் மறைந்தன. ஆகவே பூச்சி கொல்லி தெளிப்பதாலேயே பெருகுகின்றன.

பயிற்சியளித்த மற்றுமொரு தகவல், இரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்துவதற்காக உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. உலக போரின் பொழுது, போர்க் காலத்தில் வெடியுப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு போரில்லாக் காலத்திலும் இலாபம் குவிப்பதற்காகவே இரசாயன உரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அது போலவே, பூச்சி கொல்லி நஞ்சுகள் பூச்சியைக் கொல்லுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இரண்டாம் உலகப் போரில் உருசியப் படைவீரர்களைக் கொல்லுவதற்காகக் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுவதற்காக ஹிட்லர் படை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை இவை. போர் முடிந்த பிறகும் கம்பெனிகள் இலாபம் குவிக்க வேண்டும் என்பதற்காகவே பூச்சி மருந்து என்ற பெயரில் இந்த நஞ்சுகள் உழவர் தலைகளில் கட்டப்பட்டன.

இதன் விளைவாக தானியம், பருப்பு, காய், கனி, இறைச்சி, முட்டை, பால், தாய்ப்பால் எல்லாமே நஞ்சாகிப் போயின. இதனை 1984ஆம் ஆண்டிலேயே கோவைப் பல்கலைக் கழகம் கண்டறிந்தது. அதனால், இயற்கை வழிப் பயிர் பாதுகாப்புத் துறை என்று ஒரு துறையையும் திறந்திருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு உத்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நேர்மையை சோதனைக்குள்ளாக்குகிறது.

1996ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் இருந்தது. அங்கெல்லாம் சிறு அளவு இயற்கை உழவர் பண்ணைகளில் வெற்றிக் கொடி பறந்து கொண்டிருந்தது. பெரிய அளவு பண்ணைகள் எளிதில் இரசாயனங்களையும் எந்திரங்களையும் கைவிட முடியாத நிலை உள்ளது. நாட்டு மக்கள் தொகையில் நூற்றில் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டுமே கிராமப்புறத்தில் வாழ்கிறார்கள். இரசாயனப் பூச்சிக் கொல்லிகளின் கொடுமையை எல்லாரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து இயற்கையில் விளைந்தவை அங்கு இறக்குமதி ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். 1996ஆம் ஆண்டின் இறுதியில் பிலிபைன்ஸ் நாட்டில் இருந்தேன். 12 நாடுகளைச் சேர்ந்த 18 பேர் ஆய்வுப் பட்டறையில் இருந்தோம். பயிற்சி காலம் ஒரு மாதம். தஞ்சை மாவட்டம் போன்று அங்கு வளம் மிகுந்த பகுதி மணீலா.

பசுமைப் புரட்சி செய்து நிறைய விளைச்சல் எடுத்த பகுதி. நிலம் வளமிழந்து தரிசாகக் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு மாடு நீண்ட கயிற்றில் கட்டப்பட்டிருக்கிறது. அது இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பெரு முதலைகளான ராக்பெல்லர் எண்ணெய் கம்பெனியும், போர்டு மோட்டார் கம்பெனியும் அவர்களது கூட்டாளிகளும், கூடி உருவாக்கிய நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிபைன்ஸில் உள்ளது. இங்குதான் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.5 போன்று சொத்தை விதைகளை எல்லாம் உற்பத்தி செய்தார்கள். இந்தியாவில் இருந்த பல்லாயிரம் விதைகளை இந்த கம்பெனிக்கு வாரிக்கொடுத்ததற்காக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இங்கு இயக்குநர் பதவி கிடைத்தது. ஐ.ஆர்.ஆர்.ஐ. ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பயிர்களை விடவும் மழைகளில் மாடிப்படி போல அமைந்த அந்த நாட்டு விவசாயிகள் செய்திருந்த பயிர் சிறப்பாக இருந்தது. பயிற்சிகாலம் முடிவில் இப்படி எழுதினோம்.

1960க்கு முன்பு உலகில் இருந்த வேளாண்மை 1960க்குப் பின்பு வந்தது வேளாண் வணிகம். இந்த வேளாண் வணிகத்தின் தன்மை இப்படி இருந்தது.

1. எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது.

2. ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்வது.

இந்த புரிதலுடன் இவற்றுக்கு எதிராக மக்கள் தேவைக்காகவும் உள்ளுர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் செய்வதுவே இயற்கை வழி வேளாண்மை. தொடர்ந்து அதை மக்களிடம் கொண்டு செல்லப் பாடுபடுகிறேன்.

கே : இயற்கை வேளாண்மைக்கு அதிக கால்நடைகள் தேவைப்படும் என்றும். அந்த கால்நடைகளின் கழிவுகள் மூலம் வெளியாகும் மீதேன் காற்று மூலம் ஓசோன் திரையில் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு குறித்து?

ப : வாழும் சூழலை நாசப்படுத்தும் ஆலைகளை நடத்தும் வியாபாரிகளின் கையாள்களே இப்படி பிரச்சாரத்தைக் கிளப்புகிறார்கள். ஓசோன் திரையில் ஓட்டை போடுவது குளோரோ புளூரோ கார்பன் இந்த கலவை காற்று ஏர்கண்டிசன், வீடு, அலுவலகம், கார்கள் வழியாக வெளியேறுகிறது. குளிர் சாதனப் பெட்டி உபயோகித்தால் வெளியேறுகிறது. தீயணைப்பு கருவி வழியாக வெளியேறுகிறது. பொருள்கள் உடையாமல் பெட்டிகளில் அடைத்து பயன்படும் நெழிவு அட்டை தயாரிப்பில் வெளிப்படுகிறது. இவைகளுக்கு மாற்று உத்திகள் கண்டறியப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு அமெரிக்கா உடன்படவில்லை. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? இயற்கை உழவாண்மைக்குத் தேவைப்படும் கால்நடை கழிவுகளில் மீதேன் வரும் என்பவர்கள் இறைச்சிக்காக இலட்சக்கணக்கில் கால்நடைகளை வளர்க்கிறார்களே அது என்னவோ இயற்கை வழி என்பது கால்நடை வளர்ப்பு மட்டுமல்ல. அதன் கழிவை எரிசாணக் கிணற்றில் இட்டு மீதேன் காற்றை எரித்து விடவும் செய்வோம்.

கே : உழவர்கள் படுகொலைகள் மலியும் இந்த வேளையிலும் எம்.எஸ்.சுவாமிநாதனும் இராமசாமியும் மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகளுக்காகப் பிரச்சாரம் செய்வது என்ன?

ப : கடந்த இருபது ஆண்டுகளாக 30,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது சுவாமிநாதனுக்கும் இராமசாமிக்கும் சரத் பவாருக்கும் தெரிகிறது. ஆனாலும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் மண்ணுக்கும் உழவுக்கும் மனிதகுலத்துக்கும் கேடுவிளைவிக்கும் மரபணு மாற்று விதைகளை உழவர் நிலத்தில் புகுத்துவதில் கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லையா? இவர்கள், இவர்களை ஒத்தவர்களுக்காகத்தான் பாரதியார் பன்றிக் கதை சொல்லி வைத்தார்.

கே : பிரதமர், குடியாட்சித் தலைவர் இருவரும் இரண்டாம் பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகிறார்கள்.... அது பற்றி...?

இவர்கள் இருவருக்கும் வேளாண்மையும் தெரியாது, உழவர் நிலையும் புரியாது. அப்படிப் புரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எம்.எஸ். சாமிநாதன் போன்றோரின் இராஜதந்திரதர்மம். ஓராண்டுக்கு முன்பு டாக்டர் வந்தனாசிவாவுடன் ஏழு மாநிலப் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பச்சைப் புரட்சியின் கருகிய விளைவுகளையும் இயற்கை வரி உழவாண்மையின் சிறப்பையும் சுமார் அரைமணி நேரம் விளக்கினோம். அனைத்தையும் கேட்ட பிறகு பிரதமர் இரசாயனம் இல்லாமல் வேளாண் உற்பத்தி சாத்தியமில்லை, என்று எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்கிறாரே? என்று பதில் உதிர்த்தார். பைநிறைய கொண்டு போயிருந்த வந்தனாசிவா எழுதிய புத்தகங்களையும் மரபணு விதையும் விதைச்சட்டமும் வேண்டாம் என்று எழுதி 10,000 பேர் கையயாப்பம் இடம் கோரிக்கைகளையும் பிரதமர் கையில் ஒப்படைத்துத் திரும்பினோம்.
புரட்சி பச்சையாகவும் இராது. அது இரண்டாவதாகவும் தேவையில்லை. நமது உழவர்கள் முதுகில் பலர் குதிரை சவாரி செய்கிறார்கள். உழவர்கள் நிமிர்ந்து கொண்டால் போதுமானது. பிறருக்கு மாடாக உழைப்பதை உழவர்கள் நிறுத்த வேண்டும். மாறாக மாடுகளை உழவர்கள் செல்வர்களாகப் பார்க்க வேண்டும். உலக முதலாளிகள் பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம் கடைச்சரக்கின் விலை உயரும் என்பதை உயர வேண்டும்.

கே : பச்சைப் புரட்சி வெற்றி என்கிறார்கள். உபரி உற்பத்தி என்கிறார்கள். கப்பலில் கோதுமையை இறக்குமதி செய்கிறார்கள். கிட்டங்கியில் தானிய மூட்டை அடுக்கிக் கிடக்கிறது. ஆனாலும் மக்கள் பசியோடு தூங்கப் போவது கொடுமை, கேவலம் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது. ஏன், இந்தக் கொடுமை?

ப : பச்சைப் புரட்சி காலத்தில் வைக்கோலைக் குறைத்து தானிய விளைச்சலை உயர்த்தியது உண்மை. சத்து மிகுந்த தானியங்கள் விளைந்த நிலங்களில் கோதுமையும் நெல்லும் விளைவித்ததால் நெல் கோதுமை தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை. நிறைய அணைகளைக் கட்டியும் ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கியும் நீர்ப்பாசன வசதியைக் கூட்டினார்கள். அதனால் ஒரு போகம் விளைந்த நிலங்களில இரண்டு போகம் விளைந்தது. இரண்டு போகம் விளைந்த நிலங்களில் மூன்று போகம் விளைந்தது. அதனால் கோதுமை, நெல் தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை. ஆனால், அது பழங்கதையாகிப் போனது. இன்று சுவாமிநாதனின் பல்லவி வேறு விதமாக உள்ளது. இரசாயனங்களைக் கொட்டியதால் நிலங்கள் உப்பாகிப் போய் விட்டன. கோதுமை தானிய விளைச்சல் குறைந்து விட்டது. ஆனால் தானிய விளைச்சல் குறைந்ததால்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்பது இல்லை. எப்போதும் இறக்குமதியில் ஆளும் கட்சிக்கு இலாபம் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதுகிறார்.

வாணிபப் பயிர் உற்பத்தி, இரசாயன உரங்கள், எந்திர வேளாண்மை இவை புகுந்ததால் ஊர்ப் புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைத் தோற்றுவித்தது. காடுகளை இழந்ததால் மழை மறைந்தது. அதனால் சாகுபடி இழப்பு, வடிகால்கள், ஏரிகள் தூர் வாராததால் வெள்ளப்பெருக்கு, அதனால், சாகுபடி இழப்பு இப்படி மக்கள் கையில் காசு இல்லாமல் போனது. உச்ச வரம்புச் சட்டம் என்ற பெயரால் மிச்ச வரம்புத் திட்டம் செயல்படுத்தியதால் ஏழை - பணக்காரர் இடைவெளி பெரிதாகியது. இத்தனை அவலங்களும் சேர்ந்ததால் கிட்டங்கியில் உணவு ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டினிச்சாவும் நடந்தேறுகிறது.

கே : நம்முடைய பாரம்பரிய விதைகள் இன்றுள்ள சூழலுக்குப் பொருந்தாது என்று விஞ்ஞானிகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சொல்லுகிறார்கள். இது உண்மையா?

ப : 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இவர்கள் உற்பத்தி செய்த குறுகிய கால பெருமையாக ஆராய்ச்சி நிலையத்தார் கூறியது எல்லாம் பொய். அதே போன்றதுதான் இந்தப் பொய்யும், செங்குறுவை,
கருங்குறுவையயல்லாம் 90 நாட்களில் விளையும் பாரம்பரிய ரகங்கள்தான். அறுபது நாளில் விளையும் அறுபதாம் குறுவை கூட நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புதான்.

தரக் குறைவான விதைகளையே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இவர்கள் கண்டுபிடித்த ஏ.டீ.டி43 அரிசி கிலோ 12 ரூபாய்க்கு விற்கும்போது உழவர் வித்தான வெள்ளைப் பொன்னி அரிசி கிலோ 22 ரூபாய்க்கு விற்கிறது. நீண்ட கால இரகங்களான கிச்சடிச்சம்பா, சீரகச்சம்பா எல்லாம் இயற்கை வழியில் பயிரிடப்படுகிறது. மக்கள் விரும்பி பண்ணுகிறார்கள். தண்ணீர் தேங்கியுள்ள நிலங்களில் மடு மழுங்கிதான் சிறந்தது. கடல் தண்ணீர் புகும் கடற்கரைப் பகுதிக்கு குழியடுச்சான், குடைவாழை போன்றவையே ஏற்றவை.
நீர் குறைந்த பகுதிகளுக்கு வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி, ஒசுவக்குத்தாளை இவையே ஏற்றவை. சுவை வேண்டுமானால் தூயமல்லி, சம்பா மோசனம் இவையே. இவையயல்லாம் விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு கலாச்சாரமும் தெரியாது, வரலாறும் தெரியாது. எதைத் தின்னுகிறோம் என்பதும் தெரியாது. அவர்கள் மனைவி, குழந்தைக்கு வரும் மார்புப் புற்று, கர்ப்பப்பை புற்று எதனால் வருகிறது என்பதும் தெரியாது.

கே : இயற்கை உழவாண்மைக்குப் போனால் நல்ல விளைச்சல் பார்க்க குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் அச்சுறுத்துகிறார்களே?

ப : இவர்கள் சொன்னதைக் கேட்டு இரசாயனத்தையும் நஞ்சையும் நிலத்தில் கொட்டியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே! அதை விட இது சிறந்தது தானே?

இயற்கை உழவாண்மை மெதுவாகவே பலன் தரும் என்பதை எங்கு சென்று படித்தார்கள்? குருடர்கள் யானையைப் பார்த்தது போல இவர்கள் பேச்சு இருக்கிறது. பலவகைத் தானியங்களை வளர்த்து மடக்கினால் நிலம் 60 நாட்களில் வளமாகும். நெய்வேலிக் காட்டாமணக்கை வெட்டி வாய்மடையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும். அமுதக் கரைசலில் 24 மணி நேரத்தில் பயிர் பச்சை காட்டும். ஆவூட்டம், ஆட்குட்டம் தெளித்தால் விளைச்சலும் கூடும், சுவையும் கூடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குவோம்.

கே : வாழ்வாதாரத்தையே அழிக்கும் விதைச் சட்டத்தின் பின்னணி என்ன?

ப : பதவியில் இருப்பவர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பெனி விதைகளால் விளைச்சல் உயரும், கத்தரிக்காயைப் பூச்சி தின்னாது. அரிசி சாப்பாட்டால் கண் விளங்கும் இப்படியயெல்லாம் கம்பெனிகள் விஞ்ஞானிகளைப் பேசவைக்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக தேசிய விதைக் கார்ப்பொரேசன் குட்டிக்கரணம் போட்டும் 80 சதம் உழவர்கள் தங்கள் விதைகளையே பயன்படுத்துகிறார்கள். இன்று தேசீய விதைக் கார்ப்பொரேசன் விதை கம்பெனி பன்னாட்டு கம்பெனிகளிடம் தன்னை விற்றுக் கொண்டுவிட்டது.

இதற்குப் பெயர்தான் தனியார் மயமாக்கம். தனியார் கம்பெனிகள் தான் கொடுப்பதை மட்டுமே உலக மக்கள் உண்ண வேண்டும். இலாபம் மலை மலையாய்க் குவிய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால், உழவர் வீட்டில் விதை இருக்கக்கூடாது. அதற்காகத்தான் விதைச்சட்டம். விதை இன்ஸ்பெக்டர் எந்த வீட்டிலும் எந்த நேரத்திலும் புகலாம். எந்த பெட்டியையும் எந்தக் கதவையும் உடைக்கலாம். எந்தப் பூட்டையும் உடைக்கலாம். சான்று பெறாத விதை இருந்தால் உழவரை ஆறுமாதம் சிறையில் போடலாம். 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இவையெல்லாம் எதற்காக? நெற்றி வேர்வை சிந்தி, சேற்றில் நடந்து. வெய்யிலில் காய்ந்து நாட்டுக்குச் சுவையான உணவு உற்பத்தி செய்து கொடுத்ததற்காக உழவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு கொடுக்கும் பரிசு இது.

கே : பாரம்பரியக் கால்நடைகளை அழித்துவிட்டு வெளிநாட்டுக் கால்நடைகளை இறக்குமதி செய்யும் அபாயம்.... குறித்து....?

ப : இடத்திற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் வளர்ச்சியுறும் கால்நடைகள் வேறுபடுகின்றன. காங்கேயம், உம்பளாச்சேரி, திருவண்ணாமலை, தருமபுரி, ஓங்கோல், கிர் இப்படி மாடுகளை ஊர்ப் பெயர் சூட்டி அழைப்பதிலிருந்தே இந்த உண்மை வெளிப்படும். வெளிநாட்டு மாடுகள் குளிர் சீமையில் வளர்பவை. அவை நமது தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்றவை இல்லை. இதை 1955 ஆம் ஆண்டு வாக்கிலேயே வேளாண் நிபுணர் வீ.டி.சுப்பையா முதலியார் கூறியுள்ளார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இறக்குமதி செய்த காளை கொண்டு நமது கால்நடை இனங்களை அழிக்கிறார்கள். உயிரியல் பன்மயமே வளமைக்கு அடிப்படை என்று அவ்வப்போது பேசவும் செய்கிறார்கள்.

கே : நீர் நிலைகள் சிதைக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆலைச் சாக்கடையாக மாற்றப்பட்டும் வருகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு 80% தண்ணீர் உழவுக்குப் பயன்படுத்தப்படுவதே காரணம் என்று குற்றச் சாட்டு உள்ளதே?

95% ஆற்று நீர் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட காலம் இருந்தது. அன்று குடி நீர்த் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு தண்ணீர் வளம் குறைந்த மாநிலம். அதனால் நமது முன்னோர்கள் 65,000 ஏரி, கண்மாய், குளம், குட்டைகளை வெட்டி, பராமரித்து வந்தார்கள். அவற்றின் கரைகளை வெட்டித் தண்ணீரை வடிய விட்டு விட்டு இன்று பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், நீதிமன்றம் எழுப்புகிறோம். தேயிலைத் தோட்டம், இரப்பர் தோட்டம், ஆலைக்கு மரம் வளர்ப்பு, நகர மயமாக்கம், சாலை விரிப்பு என்ற பெயரில் காடுகளையும் நஞ்சை நிலங்களையும் மொட்டையடித்துவிட்டு நமக்குக் காதுகுத்தப் பார்க்கிறது சூது செய்யும் கூட்டம். அதே நேரத்தில் உழவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். பூமியை ஆழமாகத் துளைத்து தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டி தென்னை. வாழை, கரும்பு பயிர் செய்வதெல்லாம் அடாவடித்தனம்.
வெளிநாட்டவர் கோவணம் கட்ட வேண்டும் என்பதற்காக திருப்பூரில் ஆலைகளை நிறுவி, சாக்கடைகளை நொய்யல் ஆற்றில் கட்டி அதைத் தீண்டத் தகாததாக ஆக்கிய குற்றவாளி யார்?

அந்நியர் செருப்பு அணிய வேண்டுமென்பதற்காக ஆம்பூர் வாணியம்பாடியில் தோல்பட்டறை தொடங்கிப் பாலாற்றைத் தீண்டத்தகாததாக மாற்றியது எவர்குற்றம்?

இவையயல்லாம் காலம் கடத்தாமல் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

கே : விதர்பா பகுதியில் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது. நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் தற்கொலையைத் தடுத்து நிறுத்துமா?

ப : மன்மோகன்சிங் மந்திரிசபை பதவி ஏற்றவுடன் முதன் முதலாக அவர் செய்தது என்ன? ஆந்திர மாநிலத்திற்குப் பறந்து சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினார். அப்போதே உழவர்க்குக் கடன் கொடுப்பதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
அவருக்குப் பதில் கூறிய டாக்டர் வந்தனா சிவா பின் கண்டவாறு கூறினார். கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற ஒரு கயிற்றை விட வேண்டும். மாறாக, நமது நிதியமைச்சர் ஒரு வாளி தண்ணீரைக் கொட்டுகிறார். கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அதற்கான காரணம் என்ன? சாகுபடி செலவு அதிகரிக்கிறது. தொடர்ந்து இரசாயனம் இட்டதால் மண் வளத்தை இழந்தது. உணவுப் பயிர் செய்வதற்குப் பதிலாக வாணிபப் பயிர் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள். மான்சாண்டோ கம்பெனிப் பருத்தி வியாபாரி சொன்னது போல் விளையவில்லை. விளைந்த பருத்திக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இக்காரணங்களைக் களையாது மேலும் கடன் கொடுப்பதால் தற்கொலையைத் தடுக்க முடியாது என்று வந்தனா கூறினார். வந்தனா அன்று கூறியது இன்றைக்கும் பொருந்தும்.

கே : விதர்பா பகுதி தற்கொலைகளை எதிர்கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன், காந்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக நீண்ட காலம் முகாமிட்டிருந்த விதர்பா பகுதியில் தற்கொலை தொடர்வது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனாலும் அவர் இரண்டாம் பச்சைப் புரட்சியை செயல்படுத்த முனைப்பாக இருப்பது ஏன்?

ப : சுவாமிநாதனின் சாமர்த்தியமே இங்குதான் உள்ளது. பச்சைப் புரட்சிக்கு மூன்று அப்பா. ஒருவர், அமெரிக்க சனாதிபதி ஜான்சன், இரண்டாவது அப்பா முன்னாள் உணவு அமைச்சர் சி. சுப்பிரமணியம், மூன்றாவது அப்பா, நம்முடைய சுவாமிநாதன். சுப்பிரமணியம் இன்று உயிருடன் இல்லை. பச்சையாகப் புரட்சி நடத்தி நாட்டைப் பாலைவனமாக்கியதற்காக சுவாமிநாதன்தான் வெட்கப்பட வேண்டும். ஆனால், நாம் வெட்கப்பட வேண்டும் என்று நம்மையும் கூட்டுக் களவாணியாக்குவதில் தான் சுவாமிநாதன் வெற்றி அடங்கியுள்ளது. அவர் இப்போது முழக்கத்தை மாற்றிவிட்டார். பச்சை வேளாண்மை என்று தலைப்பை மாற்றிக் கொண்டு விட்டார். அவர் மீர்ஜாபர் நம்பர் 1.

கே : தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்ளும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சிலர் நோக்கம், தகுதி பற்றிக் கூறுங்கள்?

ப : பச்சைப் புரட்சியின் அப்பா நான் தான் என்று மார்தட்டிக் கொண்ட சுப்பிரமணியத்தில் இருந்து தொடங்குவோம். பிரதமர் ஜவகர்லால் நேரு அகால மரணமடைந்தார். லால்பகதூர் பிரதம மந்திரியானார். அவர் காமராசருக்கு வேண்டியவர். சுப்பிரமணியத்தைப் பழிவாங்குவதற்காக உழவு, உணவு அமைச்சராக நியமித்தார். இவை பற்றி எதுவும் தெரியாத சி.சுப்பிரமணியம் விவசாய விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் சம்பளம் போதவில்லை என்று அழுதார்கள். விவசாய விஞ்ஞானிகள் மூன்றாம் தர விஞ்ஞானிகளாக நடத்தப்படுவதாக முறையிட்டார்கள். அவர்கள் சமூகத்தின் மூன்றாம் தர மக்கள் மத்தியில் இருந்து வந்த முதல் தரமானவர்கள் என்ற முடிவுக்கு வந்தார் அமைச்சர்.

இவையெல்லாம் நான் சொல்லவில்லை. சுப்பிரமணியம் பச்சைப் புரட்சி என்று தலைப்பிட்ட தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். சுப்பிரமணியம் அமெரிக்க மந்திரி ஃபிரிமன் என்பவருடன் ரோமாபுரியில் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்தத் திட்டத்திற்கே பின்னர், பச்சைப் புரட்சி என்று பெயர் சூட்டப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்காக சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபர்தான் இன்னொரு அப்பா, சுவாமிநாதன்.
சுப்பிரமணியத்தின் இரகசிய ஒப்பந்தப்படி அமெரிக்கர்கள் இந்திய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் இவர்களில் 2000 பேர்களை அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நம்மூர் பொருட்காட்சி சாலையில் பெற்றோர் குழந்தைகளைச் சுற்றிக் காட்டுவது போல சுற்றிக் காட்டித் திருப்பியனுப்பினார்கள். திரும்பி வந்தவர்கள் அமெரிக்கா பற்றித் துதி பாடினார்கள். அப்படிப் போய் வந்தவர் நால்வரை எனக்குத் தெரியும். அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் வந்தார்கள்.

சுப்பிரமணியம் ஒப்பந்தப்படி இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்களையும் 200 ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவினார்கள். எல்லா ஆராய்ச்சிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்க¼ளாடு இணைத்தார்கள். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் வாங்குகிறோம் என்ற நினைப்பே இவர்களுக்கு இருப்பது இல்லை, இவர்களின் இருப்பிடம் முட்டாள்களின் சொர்க்கம்.

பி.டீ. என்றால் என்ன? கத்தரிக்காய் வெண்டைக் காயிலும் பீ.டீ. இருக்கிறதா?

அது என்ன பீ.டீ. கத்தரிக்காய்? டீ.பீ கேட்டிருக்கிறீர்களா? எண்புருக்கி நோய். அதை உண்டு பண்ணுகிறது. பேசில்லஸ் டியூபர்குளோசிஸ் என்று ஒரு கிருமி, அது போல இதுவும் ஒரு பேசில்லஸ் கிருமிதான். இதற்குப் பெயர் பேசில்லஸ் துரிஞ்சி பென்சிஸ். இது கத்தரிக்காயுடன் ஒட்டிக் கொண்டது எப்படி? கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உணவு உற்பத்தியில் வணிகம் இறக்கை கட்டிக் கொண்டது. ஒட்டு விதைகள், இரசாயண உரம், பூச்சிகொல்லி, களைக்கொல்லி என்று பலவற்றையும் விற்று பன்னாட்டுக் கம்பெனிகளும் லாபம் குவித்தன. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பூச்சிகொல்லி நஞ்சுகள் எண்ணிக்கை 147. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பூச்சிகொல்லி நஞ்சைக் குடிக்கும் உழவர் இறந்து போகிறார். பூச்சி சாக மறுக்கிறது.

கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் பறிப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் தெளிக்கப்படும் பூச்சி கொல்லியின் அளவு எழுபத்தைந்தாயிரத்து நானூற்றிப் பதினேழாயிரம் ஆயிரம் கிலோ. இதனால், பூச்சி கொல்லிக்குப் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டன. நஞ்சானது காய்கறி, பால், பழம், தாய்ப்பால் எங்கும் எதிலும் காணப்படும் பொருளாயிற்று. உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். கனடாவில் உள்ள அனைத்துலக வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கணித்த படி ஆண்டுதோறும் உலகில், 10,000 பேர் பூச்சிகொல்லியால் மடிகிறார்கள். இன்னுமொரு நான்கு லட்சம் பேர் பலவகை நோய்க்கு ஆட்பட்டு அல்லற்படுகிறார்கள்.

இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரசாயண பூச்சிகொல்லிகள் தெளித்தனாலேயே பூச்சிகள் பெருகுகின்றன. பறவைகளும் பூச்சி உண்ணும் பூச்சிகளும் மடிந்து போயின. எதிர்ப்பு இல்லாமற் போனதால் செடியுண்ணும் பூச்சிகள் மலிந்து போயின.

இதன் விளைவாக உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு புழக்கத்திற்கு வந்தது. நம்மைப் போன்றவர்கள் மூலிகைச் சாற்றைத் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த மக்களுக்குச் சொல்லித் தருகிறோம்.

கோடீசுவரக் கம்பெனிகள் மரபணுமாற்று விதை உற்பத்தியில் கால்வைத்தார்கள்.ஆமா! மரபணு மாற்று, அது என்ன? கேட்கத் தோன்றுகிறதா?

முன்பெல்லாம் கலப்பினங்களைத் தோற்றுவிக்கப் பெற்றோர்களை மாற்றினார்கள். இப்போது மரபணுக்களை இடம் மாற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, சீமைக் காளையை நாட்டுப் பசுவுடன் இணை சேர்த்தார்கள். கொஞ்சம் மடி பெரிசாக ஒரு பெண் கன்றோ ஏர் அல்லது வண்டிக்கு உதவாத ஒரு ஆண் கன்றோ பிறந்தது. காளையையும் எருமையையும் இணை சேர்த்தால் கன்று பிறக்கவில்லை.

ஆனால் ஜீன் மாற்றம் மிகவும் நுட்பமானது. செடி, கொடியின் (ஜீன்) மரபணுவை விலங்கில் பொருத்தலாம். ஒரு விலங்கின ஜுனை ஒரு செடியில் பொருத்த முடியும். கோடி கோடியாகச் செலவழித்து கட்டப் பெற்ற ஆய்வுக்கூடம் கோடி கோடியாய் சம்பளம் பெறும் நிபுணர்கள் தேவை. அதற்குரிய சாதக பாத சூழலில் தான் பீ.டீ. கத்தரி ஏவப்படுகிறது.

மதுரை உழவியல் கல்லூரி முதல்வர் சொன்னார். நான் கத்தரிக்காயை வாங்கும்போது பூச்சி துளைத்ததாகப் பார்த்து வாங்கி வருகிறேன். ஏனென்றால் அதுதான் பூச்சி கொல்லும் விசம் இல்லாதது, அரியும் போது புழுவை அப்புறப்படுத்தலாம். விசத்தை அப்புறப்படுத்த முடியாது - அதுபோலத்தான் பேசில்லஸ் துரிஞ்சென் சில ஜீனும், அரிந்து அப்புறம் போட முடியாது.

இன்னொரு ஆபத்தும் உள்ளது. வேலூர் முள்ளுக் கத்தரிக்காய், திருச்சி ஐயம்பாளையம் கத்தரிக்காய், தஞ்சை தூக்கனாம் பாளையம் கத்தரிக்காய் என்று ஊருக்கு ஒரு கத்தரிக்காய் வைத்திருக்கிறீர்களே, அவை காணாமற் போகும். அப்படித்தான் பசுமைப்புரட்சி வந்தபின்பு நமது நெல் வகைகள் காணாமற் போயின.

மேலும் ஒரு ஆபத்தும் உண்டு. ஜீன் தாவும் என்று சொன்னோம். கம்பெனிகள், வெறும் 50 மீட்டர் தூரம் தான் இந்த மரபணுக்கள் பரவும் அபாயம் உள்ளது என்று சொல்லுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்கக் கோல்ப் பிளப் மைதானத்துச் செடியின் மகரந்தத் தூள் 21 கிலோ மீட்டர்தூரம் தள்ளிப் பயணம் செய்திருப்பது கண்டு நீடிக்கப்பட்டுள்ளது. நமது தோட்டத்துச் செடியில் ஜுன் மாசு வந்தால் மான்சேன்ட்டோ நமக்கு இழப்பீடு நாம் கம்பெனிக்கு ராயல்ட்டி கொடுக்க வேண்டும். இப்படி கம்பெனி வயல் பார்த்து வழக்காடி சம்பாதிப்பதற்காக ஒதுக்கப்பட்டது ஒரு கோடி டாலர்கள். பணிபுரியும் ஆட்கள் 75 பேர். சர்வதேச விஞ்ஞானிகள் ஊதும் எச்சரிக்கைச் சங்கு இதுதான்.

மரபணு மாற்று உணவு நஞ்சுள்ளதாக இருக்கக்கூடும்.

மரபணு மாற்று மனித உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணும்.

மரபணு மாற்று மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைச் சிதைக்கும்

மரபணு மாற்று உயிரினப் பன்மயத்தை அழிக்கும்.

பீ.டீ மரபணு கத்தரிக்காயுடன் அடங்கிப் போகும் ஒன்றல்ல. அடுத்து, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழைப்பழம் என்று உண்ணும் பொருள் அத்தனையையும் மாசுபடுத்தும் ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. இந்தியப் பல்கலைக் கழகங்கள் இது போன்ற ஆராய்ச்சிக்குள் இறங்குவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

மான்சேன்ட்டோ பீ.டீ. கத்தரிக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியதால்தான் தடைபட்டு நிற்கிறது. மரபணு மாற்று விதை, உணவு போன்றவற்றை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு ஒரு கமிட்டி உள்ளது. மக்கள் எதிர்ப்பு கண்டு இந்தக் கமிட்டி ஒப்புதல் தருவதைத் தள்ளிப் போட்டு வருகிறது.

பீ.டி. மரபணு புகுந்துவிட்டால் எதையுமே இயற்கையில் விளைந்தது என்று சான்று பெறமுடியாது. ஏற்றுமதி செய்ய இயலாது.

உத்தராஞ்சல் முதல்வர் எனது மாநிலத்தில் பீ.டிக்களை நுழைய விடமாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார். ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பீ.டீ உணவைப் புறக்கணித்துள்ளன. பட்டினி கிடக்கும் ஆப்பிரிக்கா, எங்கள் விதைகள் அழிந்து போகும் பீ.டீ, சோளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டது.
பீ.டீ. கத்தரிக்காய் முதல் முதலாகத் தமிழ் மக்களுக்குத்தான் ஊட்டி விடப்படவுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? கை கட்டி வாங்கிக் கொள்ளப் போகிறோமா? நிலாக் காட்டி ஊட்டிவிடவும் இங்கு ஆட்கள் உண்டு.

கத்தரிக்காய் தின்னும் மனிதர் உறுப்புக்களில் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும்?

முன்பே அளவுக்கதிகமான பூச்சிகொல்லி தெளிப்பால் சர்க்கரை நோய்; புற்றுநோய், கிட்னி ப்ராப்ளம், நரம்புக் கோளாறு, ஆண் மலடு என்று மனிதரைத் தொற்றும் நோய்கள் நூறு விதம்.

ஜீன் உயிர் விட்டு உயிர் தொற்றும் போக்கு ஜீன் மாசுபாடு (---) என்று அழைக்கப்படுகிறது. இதை நியூஸிலாந்து விஞ்ஞானி ஒருவர் கேலிச் சித்திரமாக்கிக் காட்டினார். ஒரு வெள்ளாட்டிற்கு வாய் கீழ்நோக்கி உள்ளது. அது மனிதனுக்கு உள்ளதுபோல் முன்பக்கம் அமைந்து சிரிக்கவும் செய்தால்.... கற்பனை செய்து பாருங்கள். வெட்ட மனம் வராது.

தலை பெருச்சாளி போலவும், உடல் பன்றி போலவும், கால்கள் மனித கால்களாகவும், பாதம் ஆட்டுக்கு உள்ளது போலவும் அமைந்தால் அந்த விலங்கை என்ன பெயரிட்டு அழைப்போம்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினார்கள் உலக மரபணு தொழில் நுட்ப வல்லுநர்கள்.

கம்பெனிகளுக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையில்லை. அவர்கள் விதை விற்று லாபம் பார்க்க வேண்டும். ஆந்திர மாநிலம் வாராங்கல் வட்டாரத்தில் 2006 முதல் 3 மாதங்களில் பீ.டீ. பருத்தி இலைகளை மேய்ந்து 1500 ஆடுகள் செத்துப் போயின. மைய அரசு கால்நடைத் துறை விஞ்ஞானிகள் நஞ்சு உட்கொண்ட சாவுதான் என்று உறுதி செய்துள்ளார்கள். 21.5.2006 இந்து நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டது. பெரம்பலூர் மாவட்ட உழவர்கள் ஆடுகளை பீ.டீ. பருத்திக் காட்டில் ஓட்டி விட்டார்கள். ஆடுகள் அவற்றை தின்ன மறுத்து வெளியேறிவிட்டன.

ஆந்திரா மாநிலத்தில் பருத்தியை எடுத்த பிறகு செடியை மேய்ந்த 1500 ஆடுகள் செத்துப் போயின. லால்குடி வட்டத்தில் உள்ள சிறு களம்பூர் உழவர்கள் கம்பெனி விதையை விதைத்து ஏக்கருக்கு 5 கிலோ பஞ்சு கூட எடுக்கவில்லை. ஏக்கருக்கு 16,000 ரூபாய் செலவு. இழப்பை சரிசெய்ய அரசும் முன்வரவில்லை. விதை விற்ற தரகன் போன இடம் தெரியவில்லை. அருப்புக் கோட்டை உழவர்கள், காய்பிடிக்காத பருத்திச் செடியை பிடுங்கி வந்து மாவட்ட ஆட்சியர் முன்பு போட்டார்கள். சேலம் பகுதி உழவர்கள் காய்பிடிக்காத பருத்திச் செடிகளை பிடுங்கி எறிந்தார்கள்; அவர்கள் சிறுநீரகத்தை விற்று கடன் அடைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் 33,000 ரூபாய்க்கு விதை வாங்கி முளைக்காமல் போனதைச் சொல்லி உழவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மரபணு மாற்றுப் பயிர்களால் ஏற்படும் இழப்பிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஒரு பெரு நிதி சேமிப்பு வேண்டும் என்று தேசிய உழவர் கமிசன் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதுகிறார்.

இது இன்றைய நிலவரம். தண்டனைக்குரியவர்கள் கம்பெனியார்கள். அப்படியிருக்க உழவர் வீட்டுக் கதவை உடைப்பது எதற்காக? என்று கேட்டுச் சமூக விஞ்ஞானிகளும், உழவர்களும் குமுறுகிறார்கள். இவர்கள் மாநிலம் தோறும் மாநாடுகள் நடத்திக் கொண்ட மராட்டிய உழவர் குடும்பங்களைத்தான் அண்மையில் பிரதம அமைச்சர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவந்தார். பீ.டீ மரபணு உழவரைத் தற்கொலைக்குத் தள்ளுவதோடு கதை முடியவில்லை.

கத்தரிக் காயைப் புழுதின்னவில்லை என்றால் என்ன பொருள்? கத்தரிக்காய் நஞ்சாகி விட்டதுதானே.
மனித உடலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சிதைக்க வல்லதாக இருக்கிறது.

மரபணு உயிரினம் கடந்து செயல்பட முடியும்.

விதை முளைத்து வளரும் போது கூடவே பீ.டீ மரபணுவும் வளர்ச்சி அடைந்து மகரந்தத்தை மலடாக்குகிறது. அதனால் பீ.டீ. பயிரில் இருந்து மறு உற்பத்திக்கான விதை கிடைக்காது. வண்டு, தேனீ வழியாக மற்ற உழவர் பயிருள்ளும் புகுந்து அந்தச் செடிகளையும் மலடாக்கும் அபாயம் உள்ளது. பருத்தி விதைகளை உண்ணும் பசுவும் மலடாகும் அபாயம் உள்ளது.

கத்தரிக் காயை உண்ணும் மனிதன் மலடாகும் அபாயம் உள்ளது.

மேலும், பீ.டீ. கிருமிகளும் காய்ப்புழு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு விட்டால் பருத்தி, கத்தரி, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழை என அத்தனைப் பயிர்களின் சாகுபடியும் அற்றுப் போகும் வாய்ப்புள்ளது.
Pin It