ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை எப்படி மதிப்பிடுவது.மனித மனத்தைச் செப்பனிடுவதற்காகவும், மனித குல மேம்பாட்டிற்காகவும் நல்ல விஷயங்களைச் சொல்லமுயன்று அதை உணர்த்துவதில் வெற்றி பெற்ற கதைகள் நல்ல கதைகள். அந்த வகையில் உஷாதீபனின் ‘நான் அதுவல்ல’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள 19 கதைகளும் சிறந்த கதைகளே.

கதையின் சாரத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூகச்செய்தியை, மனித விழுமியங்களை எளிமை யான நேர்த்தியான நடையின் மூலம் வாசகர்களின் ஆன்மாவோடு பொருத்திவிடுகிறார்.நான் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், குடும்பம், அலுவலகம், சமூகம் இவற்றில் நிகழும் நிகழ்வுகள் இவற்றை மையமாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ள இக்கதைகள் வாழ்க் கையின் உன்னதத்தை உயர்த்திப் பிடிப்பவை.வாழ்க்கை நெறியை மையமாக வைத்து எழுதப் பட்டுள்ள இக்கதைகள், இன்றைய பண முதன்மைச் சமூக அமைப்பின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியைச்செய்யும்.

‘நான் அதுவல்ல’ கதை, தவறான படைப்பைக் கொடுத்துவிட்டு அதற்கு சன்மானம் கிடைத்த வுடன் குற்ற உணர்விற்கு ஆட்பட்டுத் தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு எழுத்தாளனின் கதை. தவறான படைப்பு, வேசியிடம் செல்வதற்குச் சமமானது என்ற உவமை படைப்பாளிக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் கன பரிமாணத்தைக் காட்டுகிறது. சமூகத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள் நினைவில் பதிக்கவேண்டிய செய்தி.

‘தன்னில் கரைந்தவர்’ அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள தொழிற்சங்கவாதியின் கதை. 2003-ஆம் ஆண்டின் அரசு ஊழியர் போராட்டத்தை இக்கதை ஞாபகப்படுத்துகிறது. ஒரு அரசு ஊழியர் என்பவர் பொது ஜன ஊழியர். அரசு ஊழியர் என்ற வார்த்தையே சரியானது அல்ல. பொதுஜன ஊழியர் என்பதே சரி. வேலை செய்தோம், சம்பளம் பெற்றோம். நமது ஊதிய உயர்விற்காகப் போராடி னோம். இதில் சமூகத்திற்குச் செய்தது ஒன்று மில்லை. ஓய்வுக்கான பிரிவு உபச்சாரம் இருக்குமா என்று வீட்டில் கேட்கும் கேள்வியும், தவிக்கும் மனமும், இக்கேள்வி எழுவதும் எதிர்பார்ப்பும் சரியா என்ற சுய கேள்வியும் அர்த்த புஷ்டியுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வு கலாச்சாரத்தில் ‘மனமகிழ் மன்றம், போல் ஆகிவரும் சங்கங்களின் நிகழ்வுகளை வருத்தத் துடன் பதிவு செய்கிறார் ஆசிரியர். இக்கதையில் முக்கியமான இருசெய்திகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்தச் சமூகத்திற்காகப் பணியாற்றிய அரசு ஊழியர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரது பொறுப்பை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அதுவே ஓய்வூதியத்தின் தாத்பர்யம். எனவே ஓய்வூதியர் சமூகத்திற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற செய்தியினையும், பெண்மைக்குச் சமத்துவம் என்பது வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்வதி லிருந்து துவங்கவேண்டும் என்பதையும் நுட்பமாகச் சொல்லியுள்ள கதை.

‘மேலிருந்து கீழ், வலமிருந்து இடம்’ இக் கதையில் நிலவும் உலகமயச்சூழலில் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் ‘அமர்த்து துரத்து’ (hire and fire) கொள்கையின் தாக்கம் அலுவலகத்திற்குச் செல்லும் பணியாளரை செக்யூரிட்டி, காரிடாரில் வெயிட் பண்ணச் சொல்லும் நிகழ்வு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணியிழந்த தொழிலாளர் வேணு கார்த்திக் காலம், நேரம், உடல் சோர்வு, மனச்சோர்வு, சொந்தச் சூழல் எதையும் பார்க்காமல் பணியாற்றி யதை எண்ணிச் சுய பச்சாதாபம் கொள்கிறார். பணம் முதன்மைப்படுத்தப்படும் பொழுது, போற்று தல்கள் மதிப்பிழக்கும் என்ற கருத்தைப் பதிவு செய் கிறார் ஆசிரியர். முதலாளித்துவம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கே மனிதன் இயந்திரமாகப் பார்க்கப்படுவான். அங்கே மனித மதிப்புகளுக்கு இடமில்லை. சிறப்புப் பொருளா தார மண்டலங்களில் கதையின் நாயகன் வேணு கார்த்திக் போன்று நித்தம், நித்தம் வேலையிழப் பவர்கள் உண்டு. உலகமயத்தில் இந்தியத் தொழி லாளர் நிலையையும், அமைப்பின் தேவையையும் இக்கதை வலியுறுத்துகிறது.

‘மனக்குப்பை’, குப்பை அள்ளும் தொழிலாளி ஆண்டியைப் பக்கத்து வீட்டுக்காரர் சாதியைச் சொல்லித் திட்டி விடுகிறார். இந்தப் புள்ளியிலிருந்து கணவன் மனைவி உரையாடலாகப் பின்னப்பட்டு உள்ளது இக்கதை. சாதிய அடுக்குகளால் ஆன இந்திய சமூகத்தையும், மனிதனின் மனதில் பதிந் துள்ள சாதி மத அழுக்குகளை மனக்குப்பை என்று சுட்டிக்காட்டியிருப்பது சாலப் பொருத்தம்.

குப்பை அள்ளும் தொழிலாளியாய் இருந் தால் என்ன? அவரும் மனிதன் தானே? அவரை மரியாதையாகத்தானே நடத்த வேண்டும் என்று மனைவி சாரதா சொல்வதாக அமைந்துள்ள உரை யாடல் தனிச்சிறப்பு. தொழிலையும், தொழிலாளி யையும் (dignity of labour) மதிக்கும் சிறப்பு பளிச்சிடு கிறது.

உரையாடலின் ஊடே இன்றைக்கு நாமெல்லாம் எவ்வளவோ திருந்திட்டோம். இந்த மாதிரி நடவடிக்கைகள் இன்னைக்கு பரவலாக தீவிரமா மற்றவங்கள்ட்டத்தான் நிறைஞ்சிருக்கு. அதையும் புரிஞ்சுக்கணும் என்ற பதிவு இடைநிலைச் சாதி யினரின் ஆதிக்கத்தை லேசாக சுட்டிக்காட்டிச் செல்கிறது. ஆதிக்க மனோநிலை எங்கிருந்தாலும் தவறு என்று சுட்டிக்காட்டியிருப்பது காலத்திற்குத் தேவையான நல்ல அம்சம்.

‘கல்லை மட்டும் கண்டால்’ புத்தக வாசிப்பை, வாசிப்பு அனுபவமிக்க ஒரு முதியவர் மூலம் சொல்லும் கதை. பழைய பேப்பர் கடைக்குப் போட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் புத்தக மூட்டையை சுமந்து நூலகத்தில் ஒப்படைக்க வரும் முதியவர் மூலம் புத்தகங்கள் சமுதாய முன்னேற்றத்தின் ஆவணங்கள், அவைகள் பாதுகாக்கப்படவேண்டும். வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வல்லமை புத்தகங் களுக்கு உண்டு என்ற அருமையான கருத்து எளிமை யான நடையில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதை வீசைக்குப் போடறதும், நாதூங்கற போது என் தலைல கல்லைத் தூக்கிப் போடறதும் ரெண்டும் ஒண்ணுதான்னு தூக்கிட்டு வந்துட்டேன் என்று முதியவர் கூறுகிறார். கதையைப் படித்துக் கொண்டிருந்த கணத்தில் துணுக்குற்று நின்று விடுகிறோம். வாசிப்போடு இணைந்த பெரியவரின் வாழ்க்கை, நெஞ்சை நிறைக்கிறது.

‘காவல்’ பாலைத் திருடும் பூனையைச் சுற்றி இக்கதை புனையப்பட்டுள்ளது. பூனை ‘சினை’ என்று பால்காரர் மூலம் தெரிந்ததும் கணவன் மனைவி இருவர் மனமும் பச்சாதாபம் கொள் கிறது, பூனையை விரட்டிய மனது வேதனை அடைகிறது. கண்கள் கலங்க பூனையைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவைக் கண்டு ஒரு கணம் தடுமாறினேன் நான். அது ஏன் அப்படி என்று எனக்குத்தான் தெரியும் என்று கணவன் நினைத்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. குழந்தைப்பேற்றின் ஏக்கத்தை, அது தரும் இன்பத்தை இந்த ஒரு வரி மூலம் உணர்த்தியிருப்பது அற்புதம். காக்கை, குருவி, அணில், இவை, கதைகளில் ஊடும், பாவுமாக வந்து செல்கின்றன. சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்பவன்தான் மேலான வாசகன். இது மறைந்த படைப்பாளி சுந்தர ராமசாமியின் கூற்று என்று என்னுரையில் ஆசிரியர் குறிப்பிடு கிறார். இக்கருத்தையும் வாசகர் மனதில் பதியச் செய்கிறது இக்கதை.

‘பிரகிருதி’ இக்கதைக்கான களம் நூலகம். அங்கு வந்து செல்லும் வாசகர்கள். நூலகம் அமைதிக் கான இடம். படிப்புத்தவம் இயற்றுவதுடன் அங்கே மௌனத்தவமும் இயற்றப்படுகிறது. கட்டுப்பாடின்றி சில புத்தகங்களை மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் பல புத்தகக்காரர் என்ற பாத்திரம் மூலம் நூலக ஒழுங்கை வாசகர்கள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை நயம்படச் சொல்கிறது இக்கதை.

‘காப்புரிமை’ மனிதன் ஒரு ‘mixed bag’ குற்றம் குறை கண்டால் மனித சமூகத்தில் உறவு, நட்பு மிஞ்சாது. இருவரும் பணிபுரியும் மத்தியதர
வர்க்க குடும்பங்களில் வேலைக்காரியும் நம்மில் ஒருவராகி விடுகிறது உண்டு. ஒரு சிறு தவறுக்காக வேலையை விட்டு நீக்கிவிட்டுத் தவிக்கும் மனம், புலம்பல். வாஞ்சையான வார்த்தைகளால் மனித உறவுகளின் மேன்மையைச் சொல்கிறது இக்கதை.

‘மீண்டும் பஞ்சமி’ மனப்பிறழ்வுகளுக் குள்ளானவர்களின் வாழ்க்கை அவலங்களைச் சொல்லும் கதை. காதலித்து கைவிடப்பட்டு ஒரு குழந்தைக்குத் தாயான பஞ்சமி மனப்பிறழ்வுக்கு உள்ளாகி, தெருவில் அலைகிறாள். குடும்பம் சிதைந்து போகிறது. பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தைச் சாடுகிறது இக் கதை. மனப் பிறழ்வுக்கு உள்ளாகும் ஒரு ஆண் அனாதையாய் தெருவில் இறந்து போகிறார். கதை சொல்லப்பட்டுள்ள விதம் நெஞ்சைப் பிழிகிறது.

‘வெள்ளாடு’ அரசு அலுவலகங்களில் புரை யோடிப் போயுள்ள லஞ்சம், ஒழுங்கற்ற தன்மை, பொறுப்பற்ற பேச்சு, நேர்மையானவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, இவற்றிற்கிடையே மாசற்ற சேவை செய்யும் பணியாளர் ரமணன், பியூன் கௌஸ்பாய் இவர்களுக்கிடையே நடக்கும் உரை யாடல், நேர்மைக்குப் பரிசாகக் கிடைக்கும் பிரிவு மாறுதல். இன்றைய அரசு அலுவலகங்களின் நிலையை இக்கதை படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்றைக்குச் சமூகத்தில் முதியவர்களின் நிலையைச் சொல்லும் ‘அசையாச் சொத்து’ கணவன் மனைவி குழந்தைகள் உறவைச் சொல்லும் ‘ஸ்ருதிலயம்’, ‘அப்பா அம்மா நான்’ இம்மாதிரி அனைத்துக்கதைகளும் உள்ளத்தைத்தொட்டு ஒவ்வொரு செய்தியைச் சொல்லிச்செல்கின்றன. நீங்களும் படியுங்கள். இயல்பாகச் சொல்லப் பட்டுள்ள இக்கதைகளிலிருந்து புதிய புதிய சமூகச் செய்திகள் கிடைக்கும்.

Pin It