நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க மண்ணின் வெள்ளை நிறவெறிக்கு எதிராக அமைதிவழியிலும், ஆயுதப்போராட்டத்தின் வழியும் போராடிய கறுப்பினப் பழங்குடி மக்களின் போராளி. தென்னாப்பிரிக்காவில் எண்பது சதவிகிதம் கறுப்பின மக்களை ஒன்பது சதவிகிதம் மட்டுமே இருந்த சிறுபான்மை வெள்ளை இனத்தவர் ஒடுக்கி வைத்திருந்தனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தினர். கறுப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சொந்த நாட்டிற்குள்ளேயே பயணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுக் கடவுச் சீட்டு முறை பின்பற்றப்பட்டது. நிலம் வைத்திருப்பதற்கு அனுமதி இல்லை.

இன ஒதுக்கலுக்கு எதிரான போர்

1948-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து மண்டேலா இன ஒதுக்கலுக்கு ஆளான இம் மக்களுக்காகப் போராட்டங்களை நடத்தினார். அப் போதைய தென்னாப்பிரிக்க அரசு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. கறுப்பு ஆப்பிரிக்கர் களுக்கு உள்நாட்டிலேயே பயணம் செய்வதற்குக் கடவுச் சீட்டு முறை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஷார்பெவிலி என்னும் இடத்தில் ஊர்வலமும் போராட்டமும் நடைபெற்றபோது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956-இல் அரசுக்கு எதிராகப்புரட்சி செய்ததாக நெல்சன் மண்டேலாவை அரசு கைது செய்தது. தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. மண்டேலாவுடன் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக முதன்மைப் பொறுப்பிலிருந்தார்.

நான்காண்டு விசாரணை, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் விடுதலையான மண்டேலா இன்னும் தீவிரமாகப் போராட்ட வடிவங்களை முறைப்படுத்தினார். அறவழிப் போராட்டத்திலிருந்து ஆயுதவழிப் போராட்ட வழிமுறையை நோக்கி நகர்ந்தார். 1961-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். அரசு மற்றும் இராணுவ நிலையங்கள் மீது ஆயுதப் பாணியிலான கொரில்லா தாக்குதல் முறைகள் துவங்கின. அரசின் அடக்குமுறை அதிகமானதால் மண்டேலா தலைமறைவானார். ஆப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி அடக்குமுறையாளர்கள் மண்டேலாவை கம்யூனிஸ்ட் என்றும், கம்யூனிச நாடுகளின் துணையோடு கலகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினர். விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது ஆப்பிரிக்க இனவெறி அரசு. மண்டேலா மீது மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியது. மட்டுமல்ல அவர்மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஒபாமா அமெரிக்காவின் சார்பில் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது உண்மைதான். ஆனால் இதே அமெரிக்க அரசுதான் மண்டேலாவைப் பயங்கரவாதி என முத்திரை குத்தி ஜுலை 2008 வரை மண்டேலா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதித்திருந்தது.

இருபத்திஏழு ஆண்டுகள் சிறைவாசம்

தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு ஜூன் இல் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. உலகில் அதிக ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்த மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் சாட்சியமாகும். ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்தவெளிச் சிறிய சிறை அறையில் தனது வாழ்நாளைக் கழித்த மண்டேலா, சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. சிறையில் இருந்த காலத்தில் மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் நான்கு, நான்கு கைதிகளாக இரும்புச் சங்கிலியில் பிணைத்து கடினமான சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்வது வழக்கம். அதன்படி, மண்டேலாவையும் சக கைதிகளோடு சங்கிலியில் பிணைத்து நாள்தோறும் சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்தனர். நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மண்டேலா பாறைகளை உடைத்தார். இதனை மாண்டேலாவின் சிறை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் தெரிவித்துள்ளார். எனினும், அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.

இறுதிநாட்கள்...

1988 ஆம் ஆண்டு காச நோய் பீடித்து மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றார். மண்டேலாவின் விடுதலைக்கு உலக அளவில் ஆதரவுக் குரல் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 1990 இல் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். 1990 இல் அவரது விடுதலைக்குப் பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. நுரையீரல் தொற்று காரணமாக நோயுற்றுச் சிகிச்சை பெற்று ஆப்பிரிக்க நிலப் பரப்பிலேயே 6 டிசம்பர்-2013 தனது 95 வது வயதில் மரணமடைந்தார்.

மண்டேலா மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சீனா, மண்டேலா சீன மக்களின் பழம்பெரும் தோழராக விளங்கியதாகத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், சீனா-தென் ஆப்பிரிக்கர் இடையேயான நட்பு வலுப் பெற மண்டேலா வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை ஆற்றியுள்ளார் என்றார்.

அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக் கிறார் என்று கூறியிருந்தார்.

டிசம்பர் 6-ஆந்தேதி காலமான தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் இந்தியா உள்பட 53 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ஜோகன்னஸ்பெர்க் சென்று கலந்து கொண்டனர். டிசம்பர் 15-ஆம் தேதி மாண்டேலாவின் சொந்த கிராமமான குனுவில் குடும்பத்துப் பண்ணையில் பழங்குடிமரபுப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தச் சடங்கியல் நிகழ்வில் மாண்டேலாவின் பழங்குடி மரபுப் படி ஒரு எருது பலியிடப்பட்டது. நெல்சல் மண்டேலா கறுப்பின, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையின் ஒப்பற்ற ஒரு அடையாளம்.

அங்கோலாவும் தென்னாப்பிரிக்காவும்

இந்நிலையில் அங்கோலா உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கலாச்சார சமய மோதல்கள் நம்மைக் கவலைப்பட வைக்கின்றன. இது கிறிஸ்தவம் - இஸ்லாம் முரண்சார்ந்த மோதலாகவும் வெளிப்பட்டுள்ளன. எண்பது சதவிகிதம் கிறிஸ்தவர்கள் வாழும் இங்கு 1.5 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அங்கோலாவில் இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம் நடக்கிறது. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. இஸ்லாத்திற்கு அனுமதியில்லை என்பதான குற்றச்சாட்டிற்கு கிறிஸ்தவ சார்பு அரசும் பதில் சொல்கிறது. எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை... அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளதாக உலகளாவிய வகையில் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கி பகிரங்கப் படுத்தி உள்ளன. முஸ்லிம்களின் வழிபாட்டு இடங்கள் எதுவும் மூடப்படவில்லை என்பதாக அங்கோலாவின் தேசிய சமய கலாச்சார நிறுவன இயக்குநர் மானுவேல் பெர்னாண்டோ கூறுகிறார். 

வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா. எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், புரொட்டஸ்டன்டுகள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என்கிறார்.என்றாலும் கூட இஸ்லாமிக் கம்யூனிட்டி ஆப் அங்கோலா (Islamic Community of Angola) அமைப்பின் தலைவர் டேவிட் ஜாவின் கருத்துப்படி அங்கோலாவில் 78 பள்ளிவாசல்கள் உள்ளன. தலைநகர் லுவண்டாவில் உள்ள இரு பள்ளிவாசல்களைத் தவிர பிற அனைத்துப் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தங்கள் வழிபாடான தொழுகைக்காகவும், வெள்ளிக் கிழமை அன்று எல்லோரும் ஒன்று கூடிச் செய்யும் ஜும்மா தொழுகைக்காகவும்தான் மசூதிகள் கட்டப் பட்டன. இவைகள் இன்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளன என விளக்குகிறார்.

இச்சம்பவங்கள் பெரும்பான்மை மதத்தினர் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மையின மதத்தைப் பின்பற்றுதலுக் கான உரிமைகள் குறித்து நாம் உரையாடுவதற்கான அவசியத்தை உணர்த்துகிறது. இது அங்கோலாவில் மட்டுமல்ல, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது.இந்த பதற்றமான சூழலில் நெல்சன் மண்டேலா நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்

மண்டேலாவும் முஸ்லிம்களும்

தென்னாப்பிரிக்க முஸ்லிம் கம்யூனிட்டி இன ஒதுக்கல், தீண்டாமை நிறவெறிக் கொள்கைக்கு எதிராக மண்டலேயுடன் இணைந்து போராடியுள்ளது. இந் நிறுவனத் தலைவர் பைசல்சுலைமான் முஸ்லிம் சமூக மக்கள் மறைந்த தலைவருக்கு நன்றிக் கடன் மிக்கவர்களாக இருப்பதாகக் கூறுகிறார். இனஒதுக்கல் கொள்கைக்குப் பிறகு தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்த போது அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மதத்தவர்களுக்கான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார் மண்டேலா.

இந்த விடுதலைப்போராட்டம் முஸ்லிம்களுக்கும்

பல வழிகளில் விடுதலையை உருவாக்கி உள்ளது. மண்டேலாவின் இரக்கம்,பெருந்தன்மை. பணிவு போன்ற நற்பண்புகள் நபிமுகமது அவர்களிடம் காணப்பட்ட பண்புகளாகவே இருந்தன. மண்டேலா தலைவராக இருந்தபோது அவர் உருவாக்கிய தேசிய சமய கவுன்சில் மூலமாக மசூதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களோடு உரையாடல்களை நிகழ்த்தினார். ஜனநாயகத்தின் வெளிப்பாடாக முஸ்லிம்களும் அரசின் மந்திரிசபையில் முக்கிய பங்காற்றி இருந்ததும் தென்னாப்பிரிக்க சமூகத்தின் இயல்பான வாழ்விற்கு உறுதுணையாக இருந்தது என்றே கூற வேண்டும் என்பதாக பைசல் சுலைமான் மண்டேலா பற்றிய தன் மதிப்பீட்டை முன்வைக்கிறார்.

கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்விப்புலப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர் தையூப் உலகிற்கிற்கும், தேசத்திற்குமான தலை வராக இருந்தாலும் மண்டேலா தன் நாட்டு மக்களின், பல்தரப்பு சமூகங்கங்களின் இதயங்களைத் தொட்ட வராக இருந்திருக்கிறார். அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை களையும், பயங்களையும்,கனவுகளையும் கவனத்தில் கொண்டவராகவே இருந்திருக்கிறார்.முஸ்லிம்கள் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பை உணர்ந்தவராகவும், உலகளாவிய வகையில் முஸ்லிம்களின் மீது பதிக்கப் பட்ட தீவிரவாத முத்திரையை பயம்சார்ந்து முஸ்லிம்கள் எதிர்கொள்வதையும் புரிந்திருக்கிறார். பிற தலைவர் களிடம் காணமுடியாத ஆழ்ந்த மனமுவந்த உயர் பண்பு நலன்கள் கொண்டவராக, ஒரு ஒப்பற்ற உதாரணத் தலை வராக விளங்கினார் என்பதாகக் கூறுகிறார்.

முன்னாள் முஸ்லிம் ஜுடிசியல் கவுன்சில் தலைவர் ஷேக் இபுராகிம் கப்ரியேல் கூறுகிறார், 1994ஆம் ஆண்டுக்கு முன்பே எங்களது குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் பைபிளை படிக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள். மண்டேலா ஆட்சிக்கு வந்த பிறகே தென்னாப்பிரிக்கா பல சமயங்களையும் மதிக்கும் ஒரு சுதந்திரக் குடியரசு என பிரகடனம் செய்தார். இவ் வேளையில் பாலஸ்தீனம் விடுதலையாகும் வரை தென்னாப்பிரிக்காவின் விடுதலையை உண்மையிலேயே நாம் அனுபவிக்க முடியாது என உலகநாடுகளை நோக்கி மண்டேலா சொன்ன வாசகம் மிக முக்கியமானது என்பதாக கப்ரியேல் விளக்குகிறார்.

Pin It