ஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா: இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தைப் பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ரூபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங் களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழி லாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்தப் புத்தகம் fictionல் என்.எஸ். மாதவன் மற்றும் Nonfiction எம்.பி. பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது)

கணவனின் மரணத்துக்குப் பிறகு தனது மாமியார் ஜமீலாவின் குழந்தைகளை பராமரிக்க தினமும் ஐந்து ரூபாய் கேட்கிறார். அது வரையில் ஜமீலா வேலை பார்த்த தட்டோடு நிறுவனத்தில் பெற்ற தினக்கூலி ரூ.4.50. கணவரின் மரணம் மற்றும் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தும் முதலாளி கைகளை விரித்துவிட்டார். வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாக தனது நண்பர் அறிமுகப் படுத்திய ரோசி சேச்சியை நாடுகிறார். அன்றைய இரவை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால் ஐம்பது ரூபாய் தருவதாக ரோசி சேச்சி கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஜமீலா மனதில் தோன்றியது, அடுத்த பத்து நாட்களுக்கு தனது குழந்தைகள் நிம்மதியாக பசியாறும் என்பது மட்டுமே. உடனடியாக சம்மதித்து ரோசி சேச்சியுடன் திருச்சூரிலுள்ள ராமா நிலையத்துக்குச் சென்றார். ராமா நிலையம் திருச்சூரிலுள்ள அரசாங்கத்தின் தங்கும் விடுதி. அங்குதான் கேரளாவின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கடி தங்குவார்கள்.

அன்று அந்த அறையில் இருந்தது மூத்த காவல்துறை அதிகாரி. பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரிவுபச்சார விழா பரிசாக ஜமீலாவை வரவழைத்திருந்தனர் அவருடைய சக அதிகாரிகள். அந்த நபர் ஆடைகளை களையச் சொன்னதும் ஜமீலா சம்மதிக்க மறுத்தார். எப்படியோ ரோசி சேச்சி தலையிட்டு ஜமீலா தொழிலுக்கு புதுசு என விளக்கி அவரை சமாதானப்படுத்தினார். அந்தத் தகவல் காவல்துறை அதிகாரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்குப் பிறகு அவருடைய ஓட்டுநர் ஜமீலாவை நிர்பந்தித்தார். இரவு பேருந்து வசதிகள் இல்லாததால் ராமா நிலையத்திலேயே இருவரும் தங்கிவிட்டார்கள்.

விடியல் புதிய அனுபவங்களை தந்தது. அன்று இந்தத் தொழிலின் பாலபாடத்தை கற்றுக் கொண்டார் ஜமீலா. ரோசி சேச்சியையும், ஜமீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஜமீலா அடித்துத் துன்புறுத்தப்பட்டார். இந்த செயல் பின்நாட்களில் வாடிக்கையானது. வாடிக்கையாளர் இல்லாமல் இந்தத் தொழில் இயங்காது. உடலுறவு கொள்ள பணத்துடன் வருபவர் அவரே. எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரை பாதுகாக்கும் கடமையை காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டாளரை அரசு பாதுகாப்பது இயல்பாகிப்போனது.

பணத்தை எப்படியோ தன் மாமியாரிடம் சேர்த்துவிட்டார் ஜமீலா. இந்தத் தகவல் வெளியே தெரியவர அவர் குடியிருந்த பகுதியிலிருந்து துரத்தப்பட்டார். தொழிலுக்குப் போன முதல் நாளே தனது வேலையையும் வீட்டையும் இழந்தார் ஜமீலா. குழந்தைகள் நிம்மதியாக மாமியாரிடம் வளர்ந்தனர்.

விஸ்தாரமான வீடுகள். அதை தரவாடு என்று அழைப்பார்கள். பெண்கள், காப்பாளர்கள் மற்றும் தரகர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். தரவாடுகளின் முன் பகுதியில் பல மாடுகள் கட்டிக் கிடக்கும். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அது மாடுகள் வாங்கி விற்கும் இடம் போலவே காட்சியளிக்கும். விஷயம் அறிந்தவர்கள் அங்கு வந்து தரகர்களிடம் விலை பேசுவார்கள், தொகை திகைத்தால் அவர்கள் வீட்டினுள் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.

தன்னை இந்த தொழிலிலிருந்து விடுவித்து நிம்மதியான குடும்ப வாழ்க்கை நோக்கி சென்றிட பலமுறை முயற்சித்தார் ஜமீலா. இருமுறை திருமணம் செய்தார். எந்த வாழ்வும் நிலைக்காமல் மீண்டும் தொழிலுக்கு வந்தார். மூன்றாவது திருமணம் 12 ஆண்டுகள் நீடித்தது. கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள, தனது 17 வயது மகளுடன் நடுத்தெருவில் நின்றார். இந்த முறை தொழிலுக்குச் செல்லும்பொழுது புதிய நிர்பந்தமாக தன் மகளின் அனுமதியைப் பெறுவதில் உணர்ந்தார் ஜமீலா. அனுமதி வாங்கும் வரை அந்த பகுதியிலிருந்த கோவில் மற்றும் மசூதியின் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுத்து குழந்தைகளை பராமரித்தார்.

பாலியல் தொழிலாளர் இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். கேரளாவிலுள்ள பிற சமூக அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் சங்கம் பல பிரச்சளைகளுக்காகப் போராடியுள்ளது. அப்படியான பொதுத் தளங்களில் புறக்கணிப்பும், அவமரியாதையுமே காத்திருந்தது. இந்த இயக்கத்தில் கேரளாவில் மட்டும் 8000 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

தாய்லாந்தில் நடந்த ஆவணப்பட பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஜமீலாவுக்குக் கிட்டியது. அவருக்கு அங்கு பட்டறை முடிவில் வீடியோ காமிரா வழங்கப்பட்டது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் தொழிலாளரின் ஒருநாள் வாழ்வு என்ற ஜமீலாவின் முதல் ஆவணப்படம் 2003ல் வெளியானது. தற்சமயம் சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் பயணித்து பல கருத்தரங்கு களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.

இந்தச் சமூகத்தில் பாலியல் தொழிலாளர் களுக்காகப் பேசும் குரல்களே இல்லை. அந்தத் தொழிலின் அவல நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்கிறார் ஜமீலா.

இந்த மெளனத்தைத் தகர்க்கவே தான் ஒரு பாலியல் தொழிலாளி என உறக்க அறிவிக்கிறார். விஞ்ஞானி தனது மூளையின் சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்கிறார். ஆசிரியர் தனது வார்த்தை ஜாலங்களை, தொழிலாளர் தனது கரங்களை அதுபோலவே பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடம்பை. ஜமீலா தனது உள் உணர்வுகளை மிகத் தெளிந்த மொழியில் சுலபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். திருமணத்தின் போதாமை நிறைந்த வாழ்க்கையில் பெண்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத ஆணுடன் கட்டாயமாக வாழ நிர்பந்திக்கச் செய்கிறது 95% குடும்ப வாழ்க்கை. அங்கே துன்பம், அவமானம், வன்கொடுமை மற்றும் வீட்டு பலாத்காரம் நிரம்பிக் கிடக்கிறது என்கிறார்.

52 வயதாகும் நளினி ஜமீலா மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்றுள்ளார். அவருடைய அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து எழுத்துப் பிரதியை எடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோபிநாத். ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்தப் புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

20 ஆண்டுகள் இந்தத் தொழில் ஜமீலாவை பொறுத்தவரை இயந்திரத்தனமான கலவியாகவே இருந்தது. மிகவும் அபூர்வமாகவே மனதுக்குப் பிடித்த நபர்களை சந்தித்துள்ளார். ஜமீலாவை காதலித்த பலரை மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்பங்கள் நோக்கி அனுப்பி உள்ளார். ஜமீலாவின் மனம் சிலரிடம் அரூபமாக நெகிழ்ந்து கசிந்துள்ளது. பெரும்பகுதியானவர்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று திரும்பவே யில்லை. இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவித கொண்டாட்ட மனநிலையை வந்தடைந்துள்ளார். பல புதுவித அனுபவங்கள், புதிய வாடிக்கையாளர்கள். திருச்சூர், திருவனந்த புரம் மற்றும் கொச்சி கோழிக்கோடிடையே செல்லும் ரயில்களில், குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் சில வாடிக்கையாளர்கள் பயணச் சீட்டுடன் காத்திருக்கிறார்கள். ஜமீலாவுடன் தங்கள் மனச் சுமையை பகிர்ந்துகொள்ள மட்டுமே சிலர் அழைக்கிறார்கள். பலவிதமான ஆண்களை, வெம்பிக் கிடக்கும் மனங்களை, சந்தித்த ஜமீலா இந்தச் சமூகத்தில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை, ஆண்களின் மனங்களில் வெவ்வேறு விதமான பெண்களைச் சந்திக்கும் ஆவல் அடங்காது என்கிறார்.

சந்தைக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்த உலகத்தில் பெண் போகப் பொருளாக ஒவ்வொரு நிமிடமும் நுகரப்படுகிறாள். சோப்புக் கட்டி முதல் விலை உயர்ந்த கார்கள் வரை பெண்ணின் சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியே வியாபாரம் நடக்கிறது. மாறும் கற்பு எனும் புனிதப் போரை நிகழ்த்த கலாச்சார போலிஸ்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிட்நைட் மசாலாவுக்கு விளம்பரதாரர்களை தேட மேலதிகாரிகள் உத்தரவின் பெயரில் எம்.பி.ஏ. படித்த இளைஞர்கள் தெருக்களில் அலை கிறார்கள். சதை விற்பனையில் சினிமாவுக்கும் தொலைகாட்சிக்கும் போட்டா போட்டி.

பாலியல் தொழில் பெண்ணின் ஒழுக்கம் தொடர்புடையதாக சமூக மனதில் பதிந்துள்ளது. இந்த தொழிலுக்கு வரும் ஆண் குற்றவாளியாகவோ, ஒழுக்கக்கேடானவனாகவோ கருதப்படுவதில்லை. விடுதி அறையில் பிடிபடும் பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது. ஆண்களை தப்பித்தோட அனுமதிக்கிறது. நாம் என்றும் அழகன்கள் கைது என்ற செய்தியை பத்திரிகைகளில் பார்த்ததில்லை. இது ஆண்களின் மேலாதிக்கத்தில் இயங்கும் சமூகம். சட்டம், அரசு, காவல்துறை, மதம் என எல்லாம் ஆண் படைத்தவை. ஆணுக்காகவே படைத்தவை. இந்த நிலை நீடிக்கும் வரை ஆணுறை இல்லாமல் ஆண் அலையலாம்.

எல்லா ஊர்களிலும் இருக்கும் கோவில் நிர்வாக விடுதிகள்தான் மலிவு விலையில் கிடைக்குமாம். அதில் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் விடுதி சிறந்தது. செல்போன்களின் வருகை தொழிலை லகுவாக்கி உள்ளது என்கிறார் ஜமீலா. பாலியல் தொழிலாளியாக உருமாறி யிருக்காவிட்டால் சமூக சேவகராக, இயக்குனராக, எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்க முடியாது என்கிறார் சிரித்துக்ய காண்டே. முன்பு என்னை தெருவில் நடக்கும் பொழுது தேவடியா மகள்னுதான் கூப்பிடுவார்கள். இப்ப அப்படி இல்லை, இப்ப நான் நளினி ஜமீலா மகள் என்கிறார் பெருமிதத்துடன் ஜீனா.

பலவித நிறங்களோடு ஒவ்வொரு நாளும் ஜமீலாவுக்கு புதியதாய் விடிகிறது. வழக்கமான வாழ்வில் கசப்புகள், குரோதங்கள், சந்தோஷங்களுடன் பயணிக்கிறார் ஜமீலா. இருப்பினும் அவரது குரல் தெளிந்த நீரோடையைப்போல் சலசலத்து ஓடுகிறது. என்னால் என் குழந்தைக்கு யார் தகப்பன் என தீர்மானிக்க இயலும். அவர் போலீஸ் அதிகாரியா அல்லது மாஜிஸ்ரேட்டா என ஜமீலா கூறிக்கொண்டே செல்லும்பொழுது குடும்பம், சமூகம், மதம் என எல்லா கட்டுமானங்களும் அதிர்வுற்று நிற்கின்றன.

Pin It