கீற்றில் தேட...

2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் மறைந்துவிட்டது நள்ளிரவு 12 மணிக்கு. உடனே 2026ஆம் ஆண்டின் முதல்நாள் பிறந்துவிட்டது. அனைவருக்கும் நம் உலகப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைதி நிலவ வேண்டும், சநாதனம் ஒழிய வேண்டும், சமூகநீதி பிறக்க வேண்டும், சாதி, மத, சமூகங்கள் மறைந்து சமத்துவம் வரவேண்டும், பகுத்தறிவும், சுயமரியாதையும் மேலோங்க வேண்டும் என்ற பார்வையில் புத்தாண்டைப் பார்க்க வேண்டும் என்பதுதான், திராவிடம்.

இதற்குநேர் எதிராகப் பார்ப்பன ஆதிக்கம், சூத்திர அடிமைத்தனம், சநாதனம், சாதி-மதக் கலவரங்கள், மதவெறித்தனங்கள் என்று மக்களின் அமைதியைக் குலைக்கும் வேலைகளில் காவிகளின் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன, இது அபாயத்தின் அறிகுறி.

அன்று லால்கிஷன் அத்வானியின் ரதயாத்திரை பாபர் மசூதியை இடிப்பதில் வந்து நின்றது, வடநாட்டு அயோத்தியில். இன்று வேல்யாத்திரை வடிவில் அதே நிலையை உருவாக்க முயல்கிறார்கள் காவிகள் தமிழ்நாட்டின், திருப்பரங்குன்றத்தில்.

இரண்டு நாள்களுக்கு முன்னர்,"திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இருக்க முடியாது. அதைத் தடுப்பவர்களை சிவபெருமான் பார்த்துக் கொள்வார். இதை அரசியல் ரீதியாகத் தமிழக அரசு பார்ப்பது கண்டனத்திற்கு உரியது" என்று மதுரையில் பேசியிருக்கிறார் தர்மேந்திரப் பிரதான். இது மதரீதியாக அமைதியைத் தகர்க்கும் பேச்சு.

வன்முறையை, அமைதியற்ற நிலையை, மூடநம்பிக்கையை, பிற்போக்குத் தனங்களை, அடிமைத் தனத்தை, மதவெறியைத் திராவிடச் சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளாது.

ஏற்றத்தாழ்வற்ற சமத்துவத்தை நோக்கி, தடைகளைக் கடந்து ஐயா தந்தை பெரியாரின் வழியில், தமிழ்நாட்டில் சில மாதங்களில் மீண்டும் உதிக்கப்போகும் 'உதயசூரிய'னைக் காணும் வரையும் -

அனைவருக்கும் மீண்டும் உலகப் புத்தாண்டு வாழ்த்துகள்!

- கருஞ்சட்டைத் தமிழர்