அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரம் கெளகாத்ததியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரி தலைமை உரை நிகழ்த்தி இருக்கிறார். செயற்குழுக் கூட்டத்தில் கட்காரி பேசியது என்ன என்பதை பா.ஜ.க.வின் பத்திரிகைத் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்கள் மத்தியில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி,

“2ஜி அலைக்கற்றை ஊழலை இதுவரை நடந்த அனைத்து ஊழல்களுக்கும் அன்னை என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது, தீவிரமானது.

பிரதமர் மன்மோகன் சிங் யோக்கியமானவர். பொதுக் கணக்குக் குழு, கூட்டுக்குழு முன்னால்ஆஜராகத் தயாராக இருப்பவர் என்றால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்னால் ஆஜராகத் தயங்குவது ஏன்? ” என்று கேட்டிருக்கிறார் அவர்.

1. ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூபாய் 1, 76,000 கோடி இழப்பு என்ற தணிக்கைக் குழு அதிகாரியின் இமாலயக் கற்பனையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.

2. தணிக்கைக் குழு அதிகாரியே ‡ இந்தக் கணக்கிற்கு என்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. இது துல்லியமான கணக்கும் ஆகாது.

3. அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததால் எவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று நான் 3 வகையான முறைகளில் கணக்குப் போட்டுப் பார்த்தேன்.

4. அதிலே ஒரு முறையின் அடிப்படையில் இழப்பு 500 கோடி அளவுக்குத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

5. இன்னொறு முறையில் நான் அனுமானிக்க முயன்றபோது இழப்புத் தொகை 1,76,000 கோடி என்பதாக வந்தது.

6. எனினும் இந்த இழப்பீடு பற்றிய தொகைகள் எல்லாமே துல்லியமானவை அல்ல. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வெறும் அனுமானமே ஆகும் என்று ‡ விசாரணைக்குழுவினர் முன்பே நேரில் ஆஜராகி அந்தத் தணிக்கை அதிகாரி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இவற்றையயல்லாம் அனுமானம்தான், யூகத்தின் அடிப்படையிலான கணக்குகள்தான் என்பதை நான் மத்திய அரசிடம் சமர்ப்பித்த 76 பக்க அறிக்கையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

எனினும், பா.ஜ.க.வினர் இந்தப் பிரச்சினையை தேர்தல் வரையில் எப்படியாவது இழுத்தடித்துக் கொண்டே போனால் மத்திய காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதனடிப்படை யிலேயே கெளகாத்தியில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் பா.ஜ.க.தலைவர் நிதின் கட்காரி,

“ இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி அலைக்கற்றை ஏல ஊழல்தான். இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாமலேயே காங்கிரஸ் தலைமை பிடிவாதம் காட்டுகிறது. இதனால் ஆட்சியையே அது இழக்கப் போகிறது” என்று எச்சரிக்கை என்ற பெயரால் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

இப்படி எந்தவிட அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கணக்குத் தணிக்கை அதிகாரியின் கற்பனை, யூகம், அனுமானம் அடிப்படையிலான ‡ அஸ்திவாரம் எதுவும் இல்லாத ‡ மணலால் கட்டப்பட்ட வீட்டை கான்கிரீட் வீடு போல பூதாகரமாக்கி காங்கிரஸ் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அந்த ஆட்சியையே கவிழ்த்து விட வேண்டும் என்கிற சுயநல அரசியல் ஆதாயம் அடிப்படையிலான ஒரு பொய்யை பா.ஜ.க.வினர் திரும்பத் திரும்ப, கீறல் விழுந்த ரெக்கார்டு போல கூறியபடியே இருக்கிறார்கள்.

‡ இவர்களை பலமாக ஆதரித்து நிற்கும் சுப்ரமணிய சுவாமியே இழப்புத் தொகை அவ்வளவு இருக்காது. 50,000 கோடி ரூபாய்தான்  இருக்கும் என்று ஒரு புதுக்கணக்கைச் சொல்லி வருகிறார்.

‡ பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத்துறையில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி இழப்பு என்பது இவ்வளவு கோடியாக இருக்காது, 30,000 கோடி ரூபாயாகத்தான் இருக்கும் என்று வேறொரு கணக்கைச் சொல்லி வருகிறார்.

‡ ஆனால் சி.பி.ஐ.யின் மேலிடத் தரப்பினரோ இழப்பு 22,000 கோடி அளவுக்குத்தான் இருக்கும் என்று மற்றுமொரு அனுமானத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? எங்கள் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியே சொன்னால்தான் என்ன? நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் கணக்குகளில் மிக அதிக யூகமும், அனுமானமும், இமாலயக் கற்பனையுமான 1,76,000 கோடி இழப்பு என்பதைத் தான் நாங்கள் நம்புவோம். அதுதான் எங்களது பித்தலாட்ட அரசியலுக்கு உதவும்படியாக இருக்கிறது என்பதுபோல திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறார்கள் அவர்கள்.

kapil_sibalநிதின் கட்காரி, கெளகாத்தி செயற்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு முதல் நாள், பா.ஜ.க.வினரின் இந்த ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யின் தோலை உரித்துத் தொங்கப்போட்டிருக்கிறார், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல்.

அவர் டெல்லியில் பா.ஜ.க வினரின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் சாராம்சம் வருமாறு :‡

1) 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பைக் கணக்கிடுவதற்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிப்பதாக இருக்கிறது.

2) அவர் குறிப்பிட்டது போல ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்பதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.

3) அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ள 1,76,000 கோடி இழப்பு என்கிற புள்ளி விவரம் முழுக்க முழுக்க தவறான புள்ளி விவரம் ஆகும்.

4) இந்த விவகாரத்தில் அரசின் கஜானாவுக்கு எந்தவித இழப்பும் பைசா அளவுக்குக் கூட இல்லை.

5) இழப்பு தொடர்பாக தனது யூகத்தின் அடிப்படையில் புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக் கூடாது.

6) இதன் மூலம் அரசுக்கும் இந்த நாட்டுக்கும் அவர் பெரிய அளவில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

7) கணக்குத் தணிக்கை அதிகாரி தனது மனசாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார்.

8) எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர்.

தொலைத் தொடர்புத் துறையில் லைசன்ஸ் வழங்கிட முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்ளை பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில்தான் முதன் முதலில் அமலுக்கு வந்தது.

கடந்த 1999 ஆம் ஆண்டில் அவர்களுடைய ஆட்சியின் போது ‡ நிலையான லைசென்ஸ் கட்டண முறை  வருவாயில் பங்கு என்கிற அடிப்படையிலான கட்டண முறை அரசின் கொள்கையாக மாற்றப்பட்டதால், அப்போது ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூபாய் ஒன்றரை இலட்சம் கோடியாகும்.

கடந்த 2002ஆம் ஆண்டின் 10ஆவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் நாங்களும் பின்பற்றி அமல் படுத்தி வருகிறோம்.

என்று பதிலளித்ததின் மூலம் கபில்சிபல் பா.ஜ.க.வின் பொய்களுக்கான வி­மப் பிரச்சாரத்திற்கான அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கித் தகர்த்து விட்டார்.

அதே சமயம் அவர், “ இருந்தபோதிலும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சில தவறுகள் நடந்திருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு நபர் கமிசன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள கிரிமினல் குற்றம் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ.விசாரணையும் நடந்து வருகிறது ” என்றும் உறுதிபட கூறியிருக்கிறார்.

இத்தகைய நிலையில்தான் பா.ஜ.க.வினர்,

‡ தனி நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிசன் விசாரணை, அமலாக்கப்பிரிவின் விசாரணை

‡ சி.பி.ஐ. விசாரணை

‡ பொதுக்கணக்குக் குழு விசாரணை

ஆகிய எந்த விசாரணையையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை. கூட்டுக்குழு விசாரணையை நாங்கள் நம்புவோம் என்று, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பது போல, பா.ஜ.க.வினர் அடம்பிடித்து வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான கூக்குரல் கிளப்பப்பட்ட உடனேயே மன்மோகன் அரசிடமிருந்து தமிழக முதல்வர் கலைஞர், ஆ.ராசாவை பதவி விலகச் சொன்னார். ஆனால், அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா நில ஒதுக்கீடு செய்ததன் மூலம் ஏராளமான ஊழல்களை நடத்தியிருக்கிறார். அவர் தனது மகன்கள், மருமகள் போன்ற நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு எல்லாம் அரசு நிலங்களைத் தாரை வார்த்துத் தந்துவிட்டார் என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டி, இந்த ஊழல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பா.ஜ.க.மேலிடம் தலையிட்டு முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது ஸ்பெக்ட்ரம் பிரச்சனை போல் யாரோ ஓர் அதிகாரியின் கற்பனையில் எழுப்பப்பட்ட இமாலயப் புழுகு அல்ல. இது நூற்றுக்கு நூறு நிஜமாகவே நடந்த அப்பட்டமான ஊழல்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உடனடியாக முதல்வர் எடியூரப்பாவின் மகன்மகளும், மருமகள்களும் தாங்கள் அதிகாரத் துஷ்பிரயோம் மூலம் அபகரித்துக் கொண்ட நிலங்களை அரசுக்கே திருப்பி அளித்திட முன்வந்தார்கள்.

அப்போது, பா.ஜ.க. மேலிடம் பலமுறை எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரால் அவரது கால்களில் விழுந்து மன்றாடியதே தவிர, அவர் மீது நடவடிக்கை எதையும் எடுக்க பா.ஜ.க.தலைமையால் முடியவில்லை. இன்று வரை ‡ இந்த விநாடி வரை முடியவில்லை.

இப்படிப்பட்ட யோக்கிய சிகாமணிகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காட்டுக் கூச்சலிட்டு வருகிறார்கள். அது மட்டுமா?

பிரதமர் மன்மோகன்சிங்கின் யோக்கியத்தன்மை, நாணயம், நேர்மை, அரசியல் தூய்மை பற்றியும் சந்தேகம்எழுப்பி பழிபோட்டு தலை வாங்க முயற்சித்தபடியே இருக்கிறார்கள்.

இப்போது பா.ஜ.க. செயற்குழுவில் ஊழல் பற்றி வீர முழக்கம் செய்திருக்கிற நிதின் கட்காரி பற்றி கூட,  “ கட்காரி, நீரா ராடியாவுடன் நெருங்கிய கூட்டாளி. அவரது வியாபாரக் கூட்டாளி ” என்று குற்றச்சாட்டு வந்தது.

தன் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது என்பதற்காகவே நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாரா? செய்யவில்லையே !

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?

Pin It