இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி
உலக அன்பை கணவனிடம்
செலுத்திக்கொண்டிருக்கக் கூடும்
அப்படித்தான் வாழமுடியும் உன்னால்
நமக்கான நாட்களில் கூட
பேரன்பின் உருவாகத்தான் நடமாடினாய்
வகுப்பறையில் நிகழ்த்திய
துண்டுசீட்டு உரையாடல்
அல்லி பறித்த அந்தி
வெல்லமிட்டுத் தின்ற அரிசி
சந்திப்புக்கான சங்கேத மொழி
உனை அலங்கரித்த
என் திருட்டு ரோஜாக்கள்
ஒற்றை கோணியின் கீழ்நடந்த மழைநாள்
தாவணியில் சிக்குண்ட மீன்கள்
ஈச்சம் சோறுதிங்க
காடலைந்த காலங்கள்
போட்டியிட்டு ஆற்றில்
ஊற்றுபறிக்க தெளிந்த நீர்
பெயர்களின் முன் எழுத்தை
இணைத்தெழுதிய பொழுதுகள்
பொய்க் கோபங்களால்
பிணங்கிக் கிடந்த நாட்கள்
உயிர்ப்போடுதான் இன்றும்...

சிறு சலனப்படின் போதுமெனக்கு
யாருக்காகவோ எழுதியதென கடந்து போகாது.

- ந.பெரியசாமி

Pin It