நீண்ட வெயிலும் வேம்புமரங்களும் நிறைந்த வேம்பலைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு நெடுங்குருதி நாவல் எழுதப் பட்டுள்ளது. மிக நீண்ட வெயிலாலும் மழையாலும் பனியாலும் பொழியப்படுகின்ற வேம்பலைக் கிராமம் பருவக் காலங்களுக்கு ஏற்ப இடைவெளி கொள்கிறது. ஆனால், வேம்பர்களின் வாழ்வில் கண்ணீருக்கும் குருதிக்கும் இடைவெளியோ ஓய்வோ இல்லை. இந்தச் துர்பாக்கியம் அந்தக் கிராமத்துக்கு வருபவர்களையும் (பக்கீரின் மனைவி) பிடித்துக்கொள்கிறது. அந்த ஊரிலிருந்து வெளியேறியவர்களையும் (நாகுவின் குடும்பம்) எங்குச் சென்றாலும் விடாமல் தொடர்கிறது.

நெடுங்குருதி நாவல் பற்றி ராமகிருஷ்ணன் தீராநதி நேர்காணலில் பின்வருமாறு பேசுகிறார். ‘என்னைப் பொறுத்தமட்டில் இந்த நாவல் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போல் தன் விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலைக் குடித்துறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களைப் போல் நடமாடுகிறார்கள். வாழ்வைப் பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை சாவைக் குறித்த புலம்புதல்களும் இல்லை. அந்த நிலவியல் வாழ்வென்பதே ஒரு மாயம்தான்’என்று கூறுகிறார்.

நாவல் நாகு என்னும் பதினொரு வயது சிறுவனின் கதையாகத் தொடங்குகிறது. நாகுவின் தந்தை வேலை செய்ய மனமின்றி ஊர் சுற்றுகிறார். அம்மா, அக்காவின் உழைப்பில்தான் குடும்பம் நடக்கிறது. நாகுவின் அக்கா நீலா இறந்த பிறகு மற்றொரு அக்காவான வேணிக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னர் நாகுவின் குடும்பம் அவனது அம்மாவின் ஊருக்குச் சென்று குடியேறுகிறது. இவர்கள் வேம்பலையின் கசப்பைத் தன்னோடு கொண்டு சென்றபடி இருக்கின்றனர். நாகு வளரும் போதே அவனது அம்மா இறந்துவிடுகிறாள். நாகு தனது தாத்தா வீட்டிலேயே வளர்கிறான்.

நாகு பெரியவனாகித் தரகுத் தொழிலில் ஊர் சுற்றும்போது பாலியல் தொழில் செய்யும் இரத்னாவதியைச் சந்திக்கிறான். நாகுவின் மூலம் இரத்னாவதி திருமாலைப் பெற்றெடுக்கிறாள். தன் மகனைப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆசை ரத்னாவதிக்கு இருக்கிறது. வேதக்காரர்கள் பள்ளியில் அவனைச் சேர்த்த பிறகும் அவள் தொழிலை விடமுடிவதில்லை. வயதாகி, அனாதையாக ஒரு விடுதியின் அறையிலேயே தூக்கு போட்டுக்கொண்டு இறக்கிறாள். திருமால் வளர்ந்த பிறகு கிறித்துவப் பாதிரியார் பயிற்சிக்குச் சென்று, மார்க்சிய உந்துதலால் மனம் பிடிக்காமல் திரும்பி விடுகிறான்.

நாகு முறையாகத் திருமணம் செய்துகொள்ளும் மல்லிகாவுக்கு வசந்தா பிறக்கிறாள். அப்பொழுது குற்றப் பரம்பரைச் சட்டத்தின் பேரில் காவல்துறை வேம்பர்களை (பிரான்மலை கள்ளர்களை) முடக்குகிறது. இதனால் காவலர்களுக்கும் வேம்பர்களுக்கும் இடையில் நடைபெறும் மோதலில் நாகு இறக்கிறான். மல்லிகா நாகுவின் அப்பாவுடன் வேம்பலைக் கிராமத்திலேயே வசிக்கிறாள். நாகுவின் அப்பா இறந்தபிறகு தன் ஊர் போகும் மல்லிகா வசந்தாவை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்கிறாள். வசந்தாவும் அவளது நெருங்கிய தோழியும் ஒருவனைக் காதலிக்கின்றனர். இதனால் வீடு திரும்பும் வசந்தாவுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். கணவனோடு சண்டை போட்டுத் தாய் வீட்டுக்கு வரும் வசந்தா பின் சமாதானமடைகிறாள். தனது அய்யாவின் கிராமமான வேம்பலைக்குச் சென்று கணவனோடு வாழ்வதாகக் கூறுகிறாள். இறையியல் படிப்பை வெறுக்கும் திருமால் பிரான்சிஸ் பெல்காமிற்குச் செல்வதோடு நாவல் முடிகிறது.

தாங்களாகச் செய்யும் கொலை, ஆத்திரத்தால் செய்யும் அறிவற்ற செயல்கள் இவற்றால் அவஸ்தைப்படும் வேம்பர்களின் கதையை வேம்பலைக் கிராமத்தையும் வெயிலையும் மைய மிட்டுச் சொல்கிறது இந்நாவல். வேம்பர்களின் வாழ்க்கையும் களவுத் தொழிலின் நுட் பங்களும் சாகசமாக மட்டுமல்லாமல் சாபமாகவும் சொல்லப் படுகின்றன.

நாவலில் வரும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறபோது அம்மனிதர்களுடன் பிணைப்பு கொண்ட இயற்கைக் காரணி களையும் சொல்கிறார். வெயில், மழை, பனி, இருட்டு, வெளிச்சம் என எல்லாமே மனிதர்களை விடவும் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ளன. ‘சுனையில் நீர் சுரப்பது போன்ற சத்தத்தோடு வேம்பின் காற்று கசிந்து கொண்டிருக்கிறது’ என்பது இதற்குச் சான்று. நாவலில் மாயாவாதத் தன்மையும் யதார்த்தமும் கலந்து நாவலை முன்னகர்த்துகின்றன. ஆதிலட்சுமி ஆள்காட்டி விரலின் ரேகைகளில் ஒளி யேற்றுகின்றன. கற்களைத் தேய்த்து மாம்பழ வாசனை வரச்செய்வது, சென்னா கிழவியின் ஆவி தாகம் கொண்டு மக்கள் பாத்திரங்களில் வைக்கும் நீரையருந்துவது, நாயக்கர் வீட்டுப் பசு ஆகாயத்தில் பறப்பது என நாவல் முழுதுமே அமானுஷ்ய சம்பவங்கள் பல நிறைந்துள்ளன.

வேம்பர்களின் வாழ்வை வேம்பலைக் கிராமத்தோடு பதிவு செய்யும் நாவல் வேம்பர்களின் பேச்சுமொழியில் உரையாடல்களைப் பதிவுசெய்யவில்லை. தனது விவரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மொழியையே நாவலாசிரியர் பாத்திரங்களின் உரை யாடலுக்கும் பெரும்பாலும் பயன்படுத்துகிறார். வேம்பர்களின் வாழ்வை மொத்த சமூகத்திற்குமான வாழ்வியலாகப் பொதுமைப்படுத்துவதற்கான எத்தனிப்பாக இம்மொழி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Pin It