இருபதாம் நூற்றாண்டு இறுதியில் கேரள வாழ்க்கை பற்றிய தேடல், இயல்பாகவே புதிய பொருளாதாரக் கொள்கைபற்றியதாக அமைந்துவிடும். 1991 ஜூன் இறுதியில் ஆட்சிக்குவந்த பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவை புதிய பொருளாதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தியது. சமாளிக்க முடியாத பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிப்பதற்காக அந்த அரசு சர்வதேச நிதிநிறுவனம், உலக வங்கி இவற்றிடமிருந்து மிகப்பெருந்தொகையைக் கடன்பெற்று, அந்த நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு பொருளாதாரத் தாராளமயமாக்கம், உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்த துணிந்தது. அன்று நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் புதியபொருளாதாரச் சீர்திருத்தங்கள் எனப்படு கின்றன. பொருளாதாரத் தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், சந்தைப் பங்கீட்டுமுறை, தகவல் தொடர்புக் கல்விப் பயன்பாடு முதலியன இப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் அடிப்படைக் கூறுகள்.

முதலீடு, இறக்குமதி, உற்பத்தித் துறைகளில் இருந்துவந்த சில கட்டுப்பாடுகளைக் கைவிடுதலே பொருளாதாரத் தாராளமயமாக்கம். இது சுதந்திரமான சந்தைக்கு வழியமைத்தது. இத் தாராளமயமாக்கக் கொள்கை காரணமாகவே நாட்டின் அரணமைப்புக்கு அவசியமான, ராஜதந்திர முக்கியத்தும் வாய்ந்த தொழில்கள்தவிர ஏனையவற்றுக் கான தொழில் உரிமம் 1991இல் கைவிடப்பட்டது. இந்தியாவில் தொழில்முனைவில் 51%வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டது.பல பொதுத்துறை நிறுவனங்களில் பெருமளவிலான தனியார் முதலீடுகள் குவிந்தன.

உலகப் பொருளாதாரமுறையுடன் இந்தியப்பொருளாதாரத்தின் இணைவாதலே உலகமயமாக்கம். வணிகம்,தனியார் தொழில் முனைவைத் தாராளமயமாக்கி இந்தியப் பொருளாதாரமுறை உலகமயமாக்கப்பட்டது. இந்தியத் தொழில்கள் உலகளாவிய மையநீரோட்டத்தில் தீவிர வளர்ச்சியடைந்து உற்பத்தி வளர்ச்சியும் போட்டியும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை உலகமயமாதல் முன் வைத்தது.அதற்காக ரூபாயின் மதிப்பைக் குறைத்தும் இறக்குமதிக் கான சுங்கவரியைக் குறைத்தும் அந்நிய முதலீடுகளுக்கு எந்தக் கட்டுப்பாடுமின்றி வாசல் திறந்தளிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தொழில்நுட்பக்கல்வி முன்னுரிமை பெற்றது. இப்படியாகப் பன்னாட்டுக் குத்தகைக் கம்பனிகள் இந்தியாவில் காலூன்றும் வாய்ப்பைப் பெற்றன.

அவர்கள் வளர்ச்சிபெற்ற நாடுகளின் திறன்மிகு தொழிற்கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். உலகமயமாதல் காரணமாக நமது உற்பத்திமுறையின் முன்னுரிமை ஒழுங்கு சரிந்தது. செல்வந்தர்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களும் ஆடம்பரப்பொருட்களும் உற்பத்தியில் முன்னுரிமை பெற்றன.அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட் களால் சந்தை நிறைந்தது. பெரும்பான்மையினரான ஏழைபாளை களின் வாழ்க்கைக்கு அவசியமான உணவுப்பொருள் மற்றும் பண்டங்களின் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை இல்லாமல் போனது. வேளாண்மையும் உலகமயமாக்கப்பட்டது. இன்றியமை யாததாகிய அரிசி உட்பட்ட உணவுப்பொருட்கள் கூட ஏற்றுமதி செய்யப்பட்டு அவசியமற்ற பொருட்கள் (உதா:பாமாயில் போன் றன) இறக்குமதி செய்யப்பபட்டது. மிகுநிலை வளர்ச்சியடைந் திருந்த தொழில்நுட்பம் உற்பத்தியைப் பெருமளவு குவித்தது. இந்தியச் சந்தையில் பன்னாட்டுக் குத்தகையின் இருப்பு வலுப்பெற்றது.

உலகமயமாதலின் விளைவாக உலகம் முழுக்க தனியார்மய மாக்கம் விரைவடைந்தது.பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாயின. வங்கி, காப்பீடு, தகவல்தொடர்பு முதலிய துறைகளில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள் நாட்டின் பொதுநலனைவிடத் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்குவதாக அமைந்தன.

நாட்டு வளர்ச்சியை முன்னிறுத்தித் தீட்டப்பட்ட திட்டங்கள் தவிர்த்துக் கட்டுப்பாடற்ற புதிய சந்தைமுறையே சந்தைப்பங்கீட்டு முறை. இம்முறையை நடைமுறைப்படுத்தவே சர்வதேச நிதி நிறுவனமும் உலகவங்கியும் பரிந்துரைத்த மாற்றங்கள் நடை முறைப்படுத்தப்பட்டது. இம்மாற்றங்களை ‘அமைப்பு சார் ஒழுங்குகள்’ என்றனர். நுகர்வோரின் வாங்கும்திறனை மையமிட்ட உற்பத்திப் பொருட்களைப் பெரும்நிறுவனங்கள் சந்தையில் குவித்தன. சொகுசுக் கார்கள்,அலைபேசிகள்,மதுவகைகள் எனச் செல்வந்தர்களால் வாங்கப்படுகிற பொருட்கள் பெருமளவில் உற்பத்தியானது. விளம்பர,நேரடி ஆர்வப்படுத்தல்கள், தற்காலிக கடனுதவிகள் மூலமாக நடுத்தரமக்களும் இச்சந்தையின் நுகர்வோராக மாற்றப்பட்டனர். பொதுமக்களுக்குத் தேவையான விவசாயக் கருவிகள் உற்பத்தி, சுத்தமான குடிநீர் வினியோக வாய்ப்புக்களைப் பெருக்குதல் போன்ற அடிப்படைத் திட்டங்கள் அரசு கைவிட்டதால் பொதுமக்கள் வாழ்வு பெரும் சிக்கலுக் குள்ளானது.

கடந்த இருபது ஆண்டுகளில் அறிவியல்தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்த வியப்புக்குரிய கண்டுபிடிப்புகள் மாபெரும் தகவல் வெடிப்பை ஏற்படுத்தியது. கணினி,செயற்கைக்கோள் பயன்பாடு தகவல்தொடர்பியலில் புரட்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலிருந்தே தகவல்தொடர்பியல் கல்வியின் கட்டுப்பாட்டை முதலாளித்துவ நாடுகள் கையகப்படுத்தியிருந்தன. அவர்கள் வெளியிடும் செய்திகளும் தகவல்களும் உலகின் மூலைமுடுக்குகள் வரைப் பரவின. உலகையே ஒரு கிராமமாக மாற்றிட தகவல்தொழில் நுட்பத்தால் இயன்றது. விளம்பரங்களின் வழி உற்பத்திப்பொருட் களை உலகின் அனைத்து சந்தைகளுக்கும் கொண்டு சென்று எளிதில் விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்களால் இயன்றது. அறிவை யும் உண்மையையும் தம் தேவைக்கேற்ப வளைக்கவும் இருட்டடிப்பு செய்யவும் முதலாளிய நாடுகள் தகவல்தொழில் நுட்பத்தை எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் பயன்படுத்துகின்றன. தகவல்தொடர் பியலின் வாய்ப்புக்கள் நமது நாட்டிலும் பலதுறைகளில் பயன் கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்து வதற்கான நெருக்கடி 1991இல் ஏற்பட்டதெனினும் அந்நிலை திடீரென உருவானதொன்றுமல்ல. பலகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாகத்தான் அப்படியரு நெருக்கடி ஏற்பட்டது. உலக அரசியல் மாற்றங்கள் அதற்கு வலுவூட்டின.அம்மாறுதல்களின் பின்னணியில்தான் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை மதிப்பிடமுடியும்.

1980களில் உலக அரசியல், பொருளாதார உறவுகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. எண்பதுகளின் இறுதிக்குள் சோவியத் ருஷியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சி அமெரிக் காவைத் தன்னிகரற்ற வல்லரசாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் படிப்படியாக உயர்ந்துவந்த அந்நாடு 1990களில் உலகத்தைத் தனது ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கும் வல்லரசானது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நலிவடைந் திருந்த ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆசிய, ஆப்பிரிக்க காலனிகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்தன. காலனி ஆதிக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்ட அந்நாடுகள் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தன்னாட்சியைத் தன்னிறைவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தன. அம்முயற்சிகளுக்கு ருசியாவும் பிறகம்யூனிஸ்ட் நாடுகளும் தயங்காமல் உதவிவந்தன.

சோவியத் யூனியனின் திட்ட மாதிரி களைப் பின்பற்றியே இந்தியாவும் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டது. தொடக்ககாலத்தில் இந்தியாவின் தொழில் முயற்சிகளுக்கு சோவியத் யூனியன் பொருளாதார, தொழில்நுட்ப உதவிகள் வழங்கியது. ருஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் மாற்றம் இந்தியா போன்ற நாடுகளின் அரசியல், பொருளாதாரத் துறைகளில் எதிர்மறையான பாதிப்பைச் செலுத்தியது. சேரிசேராக் கொள்கை பலமிழந்தது. ஐக்கிய நாட்டுச் சபை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகப் பொருளாதார ஒழுங்கை அமெரிக்கா கட்டுப்படுத்த தொடங்கியது இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் வளர்ச்சியை மிக மோசமாகப் பாதித்தது.

வளர்ச்சிப்பணிகளில் தொலைநோக்குப் பார்வையின்மையும் திட்டமிடுதலின் குறைபாடுகளும் ஆரம்பத்திலிருந்தே இந்தியப் பொருளாதார அமைப்பில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அச்சிக்கல்களைக் களையும் பொருட்டு இந்தியா சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து 1981இல் கடன் வாங்கியது. சர்வதேச நிதிநிறுவனத்திடமிருந்து பெறும்கடன் நாட்டின் தன்னாட்சி, தன்னிறைவுக்குக் குந்தகம் விளைக்கும் ஒப்பந்தங்களில் சிக்கவைத்து விடும் என்ற புரிதலுடன் இந்திராகாந்தி அரசு கடன் பெறுவதைக் கைவிட்டது. ஆனால் 1985இல் ராஜீவ்காந்தி அரசாங்கம் சர்வதேச நிதிநிறுவனத்திடமிருந்து குறுகியகாலக் கடன்பெற்றது. 1991ற்குள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் குறைவை எதிர்கொள்ளவிய லாத நிலை உருவானது. வி.பி.சிங், சந்திரசேகர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவணாட்சிகளின் பின் 1991இல் ஆட்சிக்குவந்த பி.வி. நரசிம்மராவ் அரசு நாட்டில் நிலவிவருகின்ற பொருளாதார நெருக்கடியை நேரடியாக அறிவித்தது. இரண்டு வாரங்களுக்கு போதுமான அந்நியச்செலாவணி மட்டுமே அன்று அரசாங்கத்தின் கையிருப்பாக இருந்தது.

உலகச்சந்தையில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருந்தது. அனைத்து நாடுகளும் இந்தியாவுக்குக் கடன் மறுக்கும் அவலநிலை உருவானது. 1990 நவம்பரில் உலகவங்கி இந்தியா அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ரூபாயின் மதிப்பை 20%மேனும் குறைத்துக்கொள்ள வேண்டுமென அறிவித்தது. இவ்வறிப்பின் பின்னர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தமது முதலீடு, வைப்பு நிதிகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர். இதனால் அந்நியக் கடன் தவணைகளை, வட்டியை அடைக்கமுடியாத நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை எதிர்கொள்ளவியலாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து பி.வி. நரசிம்மராவ் அரசு சர்வதேச நிதி நிறுவனம், உலகவங்கியிடமிருந்து பெருந்தொகையைக் கடன்வாங்கியது.

அந் நிறுவனங்களின் பரிந்துரைகளுக்கு உடன்பட்டு தாரளமயமாக்கமும், உலகமயமாக்க மும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தன்னாட்சி, வளர்ச்சித்திட்ட இயக்கங்களைச் சீர்குலைக்கின்ற புதுப்பொருளா தாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டிற்குள் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பெரும் விபத்து களை விதைத்த அந்நிகழ்வுக்கும் புதுப்பொருளாதாரக் கொள்கைக் கும் நேரடித் தொடர்பேதுமில்லை என்றாலும் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் நமது சமூக,பொருளாதார நிகழ்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மும்பை பங்குச்சந்தை நிறுவனக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்திய பிரிவினைக்காலத்தை நினை வூட்டும்படியான கலவரங்கள் ஏற்பட்டன. பாபரிமஸ்ஜித் நிகழ்வின் தொடர்ச்சியாகவே இக்கலவரம் கருதப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததுடன் மதச்சார்பின்மை குறித்த ஆட்சியாளர்களின் அறிக்கைகள் வெறும்வார்த்தைகளாகவே இருந்தன. மதரீதியான பிரிவினையைத் தூண்டிவளர்த்திட இந்நிகழ்வுகள் காரணமாயின.

உலகமயமாதலுக்கு முன்னரே ருஷ்யா,கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்து விட்டிருந்தன. மானுட விடுதலைக்கான தத்துவ அடிப்படையாகவும் நடைமுறைத் திட்டமாகவும் கருதப்பட்ட மார்க்சியத்தின் தோல்வி யாகவே இதை ஊடகங்கள் வருணித்தன. மூன்றாம் உலகநாடுகளின் சமூகக் கண்ணோட்டத்தை கம்யூனிஸத்தின் வீழ்ச்சி பெரிதும் பாதித்தது. தேசிய அளவிலான பேரியக்கங்களுக்கு மாறாக இன/வர்க்க,சமுதாய/சாதீய அளவிலான குழுக்களாக மனிதர்கள் பிரிவுபட மேற்கூறிய ஊடகச் சித்தரிப்பு உதவி செய்தது.

1991க்குப்பின் கேரளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய கேரளத்தின் நவீனமாக்கத்தின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்வை யிட வேண்டும். அடிப்படையாக ஒரு வேளாண் சமூகமான கேரளத் தின் நவீனமாக்கம் சில தனிப்பண்புடையது. காலனியாதிக்கம் நிலவுடைமைச் சமூகத்தின் வாழ்க்கை ஒழுங்கையும் அதன் சமூக நிறுவனங்களையும் ஓரளவுவரை மாற்றியமைத்தது என்றாலும் அதன் சாதி, மத, சமுதாய எண்ணங்கள் முழுமையாக மாறவில்லை. மறுமலர்ச்சியின், விழிப்புணர்வின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டபோதும் ஓரளவு நிலவுடைமை மதிப்பீடுகளையும் தக்கவைத்துக் கொண்டுதான் நவீன கேரளம் உருவானது.

 நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்கள் நவீன கேரளச் சமூகத்திலிருந்து களையப்பெறவில்லை. முற்போக்குச் சிந்தனைகளையும் இயக்கங் கங்களையும் இந்த நிலவுடைமை எச்சங்கள் எதிர்த்தன. அதை வன்மையாகக் கண்டித்துக் கொண்டே முற்போக்கு இயக்கங்கள் செயல்பட்டன. 1959இல் கேரளத்தில் நடைபெற்ற மீட்சிப் போராட் டம் நிலவுடைமைச் சக்திகளுக்கு எதிராகவே நடைபெற்றது என்பதிலிருந்து நவீனமாக்கத்தால் கேரள மன உருவாக்கத்தின் அடிப்படைகளை முழுமையாகப் புரட்டிப்போட இயலவில்லை என்பதை அறியலாம். பல நிலைகளில் இன்றும் கூட மலையாளி நிலவுடைமைக்கால வாழ்க்கைப்பார்வையையே கொண்டிருக்கின்றான்.

விடுதலைக்குப் பின் கேரளத்தில் ஏற்பட்ட கல்வி வசதிகளும் சமூக அமைப்பும் மலையாளி வாழ்வில் சாதகமான பல மாற்றங் களைத் தந்தது. இக்காலத்தில், கல்வியறிவு பெற்ற புதிய தலை முறையினர் இந்தியப் பெருநகரங்களில் பெருமளவு குடியேறினர். கல்விபெற்ற இளைஞர்கள் விவசாயம்,உற்பத்தித்துறைத் தொழில் களைவிட அலுவலக ஊழியங்களுக்கே முதன்மையளித்தனர். கேரளத்திலேயே கிடைக்கின்ற இத்தொழில்கள் வாழ்க்கைக்கு ஒரு தனிப் பாதுகாப்பளிப்பதால் அப்படிப்பட்ட தொழில்கள் பெரிதும் விரும்பப்பட்டன. அடிப்படைத்தொழில்கள், உற்பத்தித்தொழில் துறைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததுடன் சேவைத்துறைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது.

இவை இரண்டும் விடுதலைக்குப் பிற்பட்ட கேரளத் தின் தொழில்துறையில் ஏற்பட்ட கவனிப்புக்குரிய மாற்றங்களாகும். இந்த அலுவலக ஊழியத்தில் நாட்டமிக்க பிரிவினரே கேரளத்தில் நடுத்தர வர்க்க உணர்வுகளை உற்பத்தி செய்தனர். எழுபதுகளில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணம் கேரளத்தில் பெரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணம் உற்பத்தித்துறை சாராத கட்டுமானப்பணிகளுக்கே அதிகமாக முதலீடு செய்யப்பட்டதெனினும் அது சமூக பொருளாதார மாற்றங்களுக்குப் பெரிதும் காரண மானது.தனிநபர் வருமானம் அதிகரிக்காமலேயே கேரளத்தில் பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்தது.

வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணப் பரவல் கேரளத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் படைத்தது. நடுத்தர மக்கள் புதுப்பணக்காரர்களான வளைகுடா வருமானக்காரர்களுடன் போட்டி போட்டு வாழத் தொடங்கினர். அத்துடன் நடுத்தரசமூகத்தின் தற்பெருமையும் பேராசையும் அதிகரித்தது. பெரிய கனவுகளும் உன்னத லட்சியங்களுமற்ற பலர் எதிர்மறையான கருத்துக்களைப் பின்பற்றத் தொடங்கினர். கேரளத்தில் சாதீய/ மத அமைப்புகள் ஆற்றல்பெற்று வேரோட, பின்னர் புதுப்பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ற சூழல் உருவாவதற்கும் வளைகுடா நாடுகளின் பணம் உதவியது.

1970களின் இறுதியடையும் முன்னரே கேரளத்தில் குடியானவ முறை ஒழிந்திருந்தது. நிலஉரிமை அடைந்த கீழ்த்தட்டினர் திடீரென சமூகஉயர்வு பெற்றனர். இப்புதிய இனத்தின் தோற்றம் கேரளத்தின் பிற்காலச் சமூக அரசியல் மாற்றங்களைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றியது. நிலவுடைமை முறையின் சீர்குலைவு வேளாண்மைத் துறையைப் பாதித்தது. வேளாண்மைத்தொழில் லாபகரமற்ற, கவர்ச்சியற்றதாகத் தொழிலாக இளந்தலைமுறையினரால் புறக் கணிக்கப்பட்டது. சமூக அடித்தட்டிலிருந்து எழுந்த இவர்களுக்கும் நடுத்தர வர்க்கமே முன்மாதிரியாகத் திகழ்ந்தது.இந்த நடுத்தரவர்க்கம் ஏற்கனவே அவர்களின் வாழ்க்கைச் சூழலால் உருக்குலையத் தொடங்கி நிலவுடைமை மதிப்பீடுகளை மெல்லமெல்ல உள்ளேற்று வந்தது.

எண்பதுகளின் இறுதிக்குள் நடுத்தரவர்க்கத்தின் வீழ்ச்சி பரவலானது. புறவாழ்க்கைச் சூழல் நவீனமாக்கத்திற்குத் பணிந்து கொண்டிருந்தாலும் நவீனமாக்கத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பிச்செல்வதற்கான மன அடிப்படைகளே வெற்றிபெற்றன. கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் இந்தியாவின் அரசியல் நிரந்தரமின்மை யும் இதற்கு வேகமளித்தன. இப்படியரு சூழலில்தான் உலக மயமாதல், தாராளமயமாக்க மாற்றங்கள் நுழைந்தன. இவற்றுடன் நுகர்வுக்கலாச்சாரத்திற்குச் சாதகமான நடுத்தர உணர்வுகளும் நிறைந்தன.

உலகமயமாக்கமும் தாராளமயமாக்கமும் கேரளவாழ்வை முற்றிலும் மாற்றியமைத்தன. தாராளமயமாக்கத்தின் தொடக்க ஆண்டுகளில் பணத்தின் மீதான கட்டுப்பாடுகள் முற்றிலுமாகக் கைவிடப்பட்டதால் நாட்டில் ஒரு செயற்கையான செழிப்பு ஏற்பட்டது. உலகமயமாதல் வழி வந்த வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியப் பொருட்களும் சந்தையை நிறைத்தன. உலகமயமாதல் இந்தியாவின் முப்பதுகோடி நடுத்தட்டு மக்களைக் குறிவைத்தது. கேரள நடுத்தரமக்கள் ஏற்கனவே நுகர்வு நாட்டம் கொண்டிருந்தனர்.

விளம்பரங்களில் உற்பத்திப்பொருட்களின் மீதான இச்சையைத் தீவிரப்படுத்த தயாரிப்பாளர்கள் இக்காலத்தில் தீவிரமாக முயன்றனர். நுகர்வுப் பொருட்களைத் தொட்டுப்பார்த்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கருத்து விளம்பரங்களின் வழி நுழைக்கப்பட்டது. விளம்பரக் கலை தனதாகிய இருப்பை அடைந்ததுடன் இதர கலைகளைவிட புதிய தலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றது. நுகர்வு வேட்கை வலையில் ஏராளமானோர் சிக்க்குண்டனர். வாகனங்கள், அழகு சாதனப் பொருட்கள், பேட்டண்ட் முத்திரைகள் உடைய ஆயத்த ஆடைகள், இயந்திரங்கள், கருவிகள் இவற்றை வாங்கிக் குவிப்பதற்கான பதட்டத்தைத் தாராளமயமாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காணமுடிந்தது.

தேவையானதையும் தேவையற்றதையும் வாங்குவது எனும் மனநிலை திடீரென மக்களிடம் உருவானது. கேரளத்தனித்துவத்தைத் தீர்மானித்த அடிப்படைக்கூறுகள் கூட மாறுதலடைந்தன. உணவு, உடை, உறையுள், தொழில், குடும்பம், ஒழுக்கம், அரசியல், வாழ்க்கைப்பார்வை, சமூக/சாதீய வழக்கங்கள், தலைமுறைகளுக்கிடையிலான உறவு, கல்வி, கலை, இலக்கியம், ஃபாஷன் என வாழ்வின் அனைத்து நிலைகளையும் இது பாதித்தது. உற்பத்திகளின் தயாரிப்பு வேகம் அதிகரிக்கும்வேளை சந்தை அவற்றால் நிறைகின்றது. மீண்டும்மீண்டும் புதிய வடிவங்களில் பொருட்கள் வரும்வேளை இச்சை அதன்மீது படிகிறது. பொருட் களின் மீதான இச்சையைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்தல் இக்காலத்தின் முக்கிய வியாபாரத் தந்திரமாக இருந்தது.இச் சந்தை செயல்பாடுகள் மனிதனின் நோக்கு மற்றும் காலம் குறித்த கற்பனைகளை மாற்றியமைத்தது.

உற்பத்திப் பொருட்களின் வரவும் மறைவும் காலத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்தது. ஊடகத் தயாரிப்புக்கள் இளைஞர்களிடையே வாழ்க்கை நிகழ்காலத்தின் கொண்டாட்டம் மட்டுமே என்ற உணர்வைத் தோற்றுவித்தது. அவர்களே நுகர்வுக் கலாச்சாரத்தில் முற்றிலுமாக மூழ்கிப்போயினர். உண்மைச் சூழ்நிலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாமலேயே நாட்டில் உடனடியாக வளம் பெற்றுவிட்டதான ஒரு பிரமை உருவானது. வைப்புநிதி வட்டியைக் குறைத்து பணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன் வியக்கத்தக்க நிலையில் பணப்புழக்கம் ஏற்பட்டது. வரவு செலவுகளுக்கு இடையேயான விகிதாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் பணம் செலவழிக்கின்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கேரளத்தில் காணமுடிந்தது.

பொருளீட்டலல்ல, செலவழித்தலே பின்முதலாளிய சமூகத்தில் பொதுமக்களின் பொருளாதாரப் பழக்கம் என ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். அது இக்காலத்தில் கேரளத்தைப் பொறுத்தவரை ஓரளவு வரை மெய்யானது. சொத்து, வருமானம் கொடுக்கல் வாங்கல் களால் வாழ்கிற ஒரு வர்க்கம் சமூகத்தின் மேற்தட்டாக உருவானது. பணச்சங்கிலி, தேக்கு, மாஞ்சியம் வளர்ப்பு, ஆட்டுப் பண்ணைத் திட்டங்கள், பல்வேறு ஊக வியாபாரங்கள், பங்கு வணிகம், முதலிய துறைகளில் பணம் பெருக்கெடுத்தது. பட்டணங்கள், சிறு அங்காடிகள், ஊர்ப்புறச் சந்தைகளில் இடைத்தரகர்கள் நிறைந்தனர். நிலத்தின் விலைமதிப்பு எந்த விகிதத்துடனும் பொருந்தாமல் அதிகரித்துப் பெருகியது. நில உரிமையாளர்கள் தங்கள் கைவசம் இருக்கும் இடத்தின் சந்தைமதிப்பைக் கணக்கிட்டு மகிழ்ந்தனர்.

புதிய பொருளாதாரமுறை கல்வி மற்றும் தொழில் குறித்த எண்ணங்களை மாற்றியமைத்தது. பட்டப்படிப்புடன் நிறைவடை கின்ற வழக்கமான கல்வி எவருக்கும் வேண்டாமல் போனது. உலகமயமாக்கலின் மூலம் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட தொழில்களைப்பெற முறைசார் கல்வியோ,பட்டங்களோ தேவை யில்லை என்ற நிலை உருவானது. கணினி, தொலைத்தொடர்பு, தகவல் துறை,கேபிள் டி.வி,போன்ற புதிய உற்பத்திகளின் விற்பனை முகமை போன்ற முன்பு இல்லாமலிருந்த தொழில் வாய்ப்புக்கள் இளைஞர்களைக் கவர்ந்தன.

இரு சக்கர வண்டிகளில் சாலைகளில் பாய்ந்துகொண்டிருந்த இளைஞர்களில் பெரும்பான்மையும் இத்துறையில் பணியாற்றினர். இவர்களின் வாழ்க்கைமுறை, அழகியல் கண்ணோட்டங்கள், மனிதாய நோக்குகள் புதிய தலைமுறைக்கு முன்மாதிரியானது. ஆக, மேலோட்டமான செழிப்பு, வியாபார மனநிலை,அவசர வாழ்க்கை, பாசமான, உறுதியான மனித உறவுகளைப் புறக்கணித்தல் போன்ற இயல்புகள் இவர்களின் மூலமாகச் சமூகத்துள் நுழைந்தது. தொழில்கல்விக்கு தேர்ச்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வுப் பதட்டக்காய்ச்சல் இவ்வேளை யில் கேரளத்தில் பரவியது. வேறுவழியின்றித் தங்களுக்குக் கிடைக்காத பொருளாதாரப் பாதுகாப்பு தமது பிள்ளைகளுக்கேனும் கிடைக்கட்டும் என எண்ணிப் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நுழைவுத்தேர்வுப் பயிற்சிப் பள்ளிகள்/ முகாம்களுக்குப் படை யெடுத்தனர். ஆங்கிலக்கல்வியின் மவுசு திடீரென அதிகரித்தது.

கேரளத்தில் தொலைக்காட்சி பரவலானது இக்காலத்தில்தான். கேபிள் டி.வி. இணைப்புகளும் பெருகின. இரவுபகல் வேறு பாடின்றி மக்கள் தொலைக்காட்சியின் முன்பு அமரத்தொடங்கினர். வெளிநாட்டுத் தொலைக்காட்சி சானல்கள் ஒளிபரப்புகின்ற ஆபாசக்காட்சிகளும், குற்றச் செயல்களும் நிறைந்த நிகழ்ச்சிகள் குமரப் பருவத்தினரைப் பெரிதும் பாதித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக வீட்டுவேலைகளும் உணவுவேளை களும் முன்திட்டமிடப்பட்டன. காணொலி ஊடகங்கள் உலகமய மாதலுக்கு மிகவும் உதவின. நாட்டு எல்லைக் கெடுபிடிகளைப் உதாசீனப்படுத்தி மேற்பரப்பினூடாக உற்பத்திப் பொருட்கள் வந்திறங்கின. வெளியினூடாகச் செய்திகளும் தகவல்களும் அறிவும் அறிவிப்புக்களும் வந்தடைந்தன. ஊர்களும் கூட ‘உலக கிராம’த்தின் நிலையை அடைந்தன. எப்பொருளும் எல்லா இடத்திலும் இருக்கின்ற அனுபவம் மனிதனின் தன்னிருப்பையும் கடந்தகால அறிவையும் தகர்த்தது. புதிய தலைமுறையினரிடையே இது பெரிதும் வெளிப்பட்டது. கேரளவாழ்வின் அடையாளங்களாகக் கருதப்பட்டுவந்த கூறுகளில் பல மறைந்துபோயின. தனது வரலாறு, பண்பாட்டுடன் நாட்டம் குறைந்தது. நமதல்லாத அனுபவங்களின் மீதான இச்சை வலுத்தது. பாஷன், ஒழுக்கவுணர்வு இவற்றில் காணொலி ஊடகங்கள் மிகையான பாதிப்பைச் செலுத்தின.

தொலைக்காட்சியுடன் இணைந்து கிரிக்கெட் பரவலான பிரச்சாரத்தை அடைந்தது. நாட்டின் மிக முக்கியமான நிகழ்வு களைக்கூட ஒத்திவைத்து அரசாங்கமும் செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் விளையாட்டைக் காலத்தின் ஆவேசமாக வருணித்தன. கிரிக்கெட் நாட்களில் இழக்கப்படுகின்ற மனித உழைப்பு மணிநேரம் உற்பத்தியைப் பாதிக்குமளவு பெருகியது. புதிய தலைமுறையை வாழ்வின் தனித்துவமான அனுபவங்களில் இருந்து அகற்றி ஒரு கற்பனையுலகில் வாழ்ந்திட தொலைகாட்சியும் கிரிக்கெட்டும் காரணமானது. ஒட்டியவயிற்றுடன் கொதிக்கும் வெயிலில் கிரிக்கெட் ஆடுகிற ஏழைச் சிறுவர்களைக் கேரளத்தின் எந்தக் கிராமத்திலும் காணலாம். உறக்கத்தைத் துறந்து நள்ளிரவுவரை டி.வி.யில் கிரிக்கெட் பார்க்கிற பாட்டிகளும் குறைவல்ல. தொலைக்காட்சி, கிரிக்கெட் மூலமாக நம் மீதான பண்பாட்டு ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. கேரளப் பண்பாடு குறித்த நினைவுகள் ஏதுமற்ற ஒரு பெரிய மக்கள்திரள் மட்டுமாகக் கேரளியர் மெதுவாகப் பரிணமித்து வருகின்றனர்.

உலகமயமாதலின் சூழலில் கேரளீயச் சமூக வாழ்வும் குடும்ப மும் கணிசமான மாற்றங்களை அடைந்துள்ளது. தொலைகாட்சியில் இரவுபகலின்றி நழுவிமறையும் காட்சிகள் நடுத்தரவர்க்கத்தை வீட்டினுள் சிறைசெய்துள்ளது. வீட்டுக்குள் உறுப்பினர்களிடையே பேச்சும் தொடர்பும் அருகியுள்ளது. சமூகத்திலிருந்து வீடு , வீட்டிலிருந்து தன்நபர் எனும் நிலைக்கு மனிதன் சுருங்கி விட்டான். தொலைக்காட்சி வழி ஒளிபரப்பப்படும் காட்சிகள் சிறார்களிடம் மயக்கத்தையூட்டி வேற்றுலகத்தை அளித்து அவர்களைச் சமூக வாழ்வினின்று தடுத்தது. முதியோர் இல்லங்கள் பெருகின. குழந்தைகளிடம் செலவிட நேரமற்ற பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்கள் வழியில் செல்லவிடுகின்றனர். பல காரணங்களால் குழந்தைகள் அவர்களின் சிறார்பருவத்தை இழந்துவருகின்றனர். இன்று குழந்தைகள் எல்லாம் அறிந்த முதியவர்களின் மனம்படைத்த வயதடையாத மனிதர்களாகியுள்ளனர். சைபர் ஸ்பெயிஸ் முதல் ஆணுறை வரை அவர்கள் அறிவர். குமரப்பருவம் நுழைவுத் தேர்வுக்கனவுகள் நிறைந்தது. சமூகவாழ்வின் சலனங்கள் ஏதும் பாதிப்புசெய்ய அனுமதிக்காத நிலையில் பெற்றோர்கள் அவர்களை வளர்க்கின்றனர். ஏதேனும் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவியல்கிற விலை உயர்ந்த பொருளாகத்தான் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சார்ந்த திறமையான பிள்ளைகள் தயாரிக்கப்படுகின்றனர்.

குடும்பம் உறவுகளின் அன்பால் அரவணைப்பாலான நிறுவனம் என்ற நிலை மாறியுள்ளது. கேரளத்தில் அதிகரித்துவருகிற மது/போதைப் பழக்கம், தற்கொலைகளை இதனுடன் தொடர்புபடுத்தி மனநல மருத்துவர்கள், சமூகவியலாளார்கள் காண்கின்றனர். இந்தியவிலேயே அதிகமான தற்கொலைகள் கேரளத்தில்தான் நடக்கின்றது. முழுக்குடும்பத் தற்கொலைகளும் அதிகம்தான்.96-97 ஆண்டுக்காலத்தில் மட்டும் 15,200 நபர்கள் தற்கொலை செய்துள் ளனர். தீடீரென ஏற்பட்ட பொருளதார நெருக்கடிகளே பல முழுக் குடும்பத் தற்கொலைகளுக்குக் காரணமாகியுள்ளது. இதர மாநிலங் களுடன் ஒப்பிட மனநல சிகிட்சை மருந்துகளின் பெருஞ்சந்தையும் கேரளம்தான். அலுவலகக் கணக்குகளில் உட்படாத மதுபானங்களின் அளவையும் எடுத்துக்கொண்டால் கேரளத்தில் தனிநபர் மதுப்பயன் பாட்டுப் பங்கு வியப்பூட்டுவதாக இருக்கும்.

மேற்கத்திய வாழ்க்கை முறைகள் மலையாளியின் புற வாழ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. பாலியலில் சமூகத்தின் கட்டுப்பாடு மிகவும் நெகிழ்ந்துள்ளது. உபயோகி வீசியெறி எனும் நுகர்வுமுறை ஆண்-பெண் உறவுகளிலும் கடந்துவந்துள்ளது. மனித உறவுகளுக்கு நீண்ட ஆயுள் அவசியமற்றதாகியது. வாழ்க்கையை ஒரு ‘டிஸ்போஸபிள்’ எதார்த்தமாகப் புதியதலைமுறை பார்வையிட்டது. சமூகவாழ்வின் அசைவியக்கம் பற்றி அவர்கள் அறியாதவர்கள். அவர்களைச் சமூக வாழ்வுடன் நெருங்கச் செய்திடப் பெற்றோர்களால் இயல்வதில்லை. அதற்கான ஈடுபாடும் புதிய தலைமுறையிடம் இல்லை. சகமனித வாழ்வுடன் பற்றற்ற வாழ்க்கை அவர்களுடையது. இறந்தோர் நினைவின் அடையாளங்கள் விரைவிலேயே வாழ்வினின்று நீக்கம்பெறுகின்றது. யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எண்ணிக் கவலையில் மூழ்கிடக் காலத்தின் விரைவு எவரையும் அனுமதிப்ப தில்லை.

பணக்கார மற்றும் நடுத்தரவர்க்க மகளிர் இக்காலத்தில் சற்றே சுதந்திரம் அடையமுடிந்தது. நிறுவனங்கள், கல்விகூடங்களில் ஆண்பெண் உறவு மக்களாட்சித்தன்மை பெற்றது. கார், இருசக்கர வண்டிகள் ஓட்டிச்செல்லும் மகளிர் எண்ணிக்கை பெருகியது. வணிகத்துறை சார் பணிகளில் மகளிர் பங்கேற்பு மிகுந்தது. பெண் விடுதலை,பெண்ணியச் சிந்தனைகள் பிரச்சாரமடைந்தன. பெண்ணின் கடமைகள்/பொறுப்புகள் குறித்த மரபான கண்ணோட் டங்கள் பல கருத்தளவிலேனும் விசாரணை செய்யப்பட்டன. இருப்பினும் பெண்கள் மீதான வன்முறைகள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. வரதட்சணை வன்முறைகள், பாலியல் வன்முறைகள், குழுப் பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

சமூக அமைப்பியக்கத்தின் தோல்வி ஆன்மீகவாழ்வைப் பலவிதமாகப் பாதித்துள்ளது. சமயப் பரப்பு திருப்பணிகள் ஆபத்தான நிலையை அடைந்துள்ளன. பாசிசநிலை சமயச்செயல்பாடுகள், அடிப்படைவாத கருத்துகளின் பிரச்சாரமும் கேரளத்தில் பரவி யுள்ளது. சமயப்பொறை மிகமிக அருகிவருகின்றது. மதத்துடன் தொடர்பற்ற புனிதர்களும், மனிததெய்வங்களும் நாடெங்கும் உருவாகியுள்ளனர். மக்களின் பக்தி, ஆன்மீக உணர்வுகளைச் சுரண்டும் அமைப்புகள் கேரளத்தில் படர்ந்துவருகின்றன. பெரிய வியாபார நிறுவனத்தின் பணி ஒழுங்கை இவை கடைப்பிடிக் கின்றன. கேரளத்திற்கு அறிமுகமற்ற புதுப்புது ஆன்மீகத்தலை வர்களின் பலவண்ண உருவப்படங்கள் சினிமாச் சுவரொட்டி களுடன் போட்டியிட்டுக் கொண்டு சாலையோரங்களில் இடம்பிடிக் கின்றன. பலவிதமான இயற்கை,யோகா, மூச்சுப்பயிற்சி (பிராணிக் ஹீலிங்) சிகிச்சைமுறைகள் அண்மைக்காலமாகக் கேரளத்தில் பிரபலமடைந்துள்ளது. ஆன்மீகத்தின் லேபிலோடுதான் இவை விலைபோகின்றன. உடல், மன அமைதி நாடி இத்தகு சிகிச்சைகளில் அபயம் தேடும் ஆட்களின் எண்ணிக்கையிலும் குறைவேதுமில்லை.
 
உலகமயமாதலின் விளைவாகச் சுற்றுலாத் துறைத் தொழில்கள் வளர்ச்சியடைந்தன.புதிய வாழ்க்கைமுறை பணம் செலவழிப்பதற் கான மானசீகக் கட்டுப்பாட்டை முற்றிலும் தளர்த்துவிட்டிருந்தது. எதிர்காலத்திற்காகச் சம்பாத்தியத்தையும் மகிழ்ச்சியையும் சேமித்துத் தள்ளிப்போடுகிற நிலவுடைமை மனநிலை நுகர்வு மற்றும் வாழ்க்கைக் கொண்டாட்டத்திற்காக வழிவிட்டுக் கொடுத்தது. இன்பச் சுற்றுலாக்கள் வாழ்வின் ஒருபகுதியாக மாறிவிட்டன. உள்நாட்டுச் சுற்றுலாக்களும் பெருகியுள்ளது. சொகுசு வண்டிகள் பயணங்களுக்கு ஆர்வமூட்டின. வருமானமற்ற வாலிபர்கள்கூடக் குழுச்சேர்ந்து பாடியாடிச் சுற்றுலாச் செல்வதைக் காணமுடிகிறது. நமது சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளைவிட உள்ளூர்ப் பயணிகளே குவிகின்றனர். பன்னாட்டுநிறுவன முதலீடு களில் நடத்தப்படுகிற பெருமட்ட ஹோட்டல்கள் கேரளத்தில் உருவானதும் ஹோட்டல் மானேஜ்மென்ட் ஒரு தொழிலாகவும் கல்வியாகவும் வளர்ச்சியடைந்ததும் இந்தத் தாராளமயமாக்கக் காலத்தில்தான். கேரளத்தில் பல இடங்களில் தனியார் பூங்கா, நீர்விளையாட்டு பூங்காக்கள் தோன்றின. இன்பச்சுற்றுலாக்களால் ஒரு புதிய ஒழுக்க உணர்வும் உருவாகியுள்ளது.

உலகமயமாதலின் ஆரம்பத்திலிருந்தே நகர-கிராம வேற்றுமை கள் மறையத்தொடங்கின. தொலைக்காட்சி வழியாக நுழைந்த அழகு பற்றிய கற்பிதங்கள்,வாழ்க்கைப் பார்வை எல்லா இடங் களிலும் ஒரே சமயத்தில் பிரசாரம் அடைந்தது. கிராமங்கள் நாகரீக உலகின் நிகர்நிலை அடைந்ததுடன் கிராமீயத்தனம் ஒரு கற்பனை மட்டுமாகியது. அனுபவங்களின் உயர்வு தாழ்வுகள் எவ்விடத்தும் இல்லாமல் போனது. அனைத்திடங்களிலும் பியூட்டி பார்லர்கள், பியூட்டி கிளினிக்குகள் தோன்றின. பெருநகர வாழ்க்கைத் தரத்திற்கு நிகரானதாகக் கேரள வாழ்க்கை உயர்ந்தது. ஃபாஸ்ட் ஃபுட், மினரல்வாட்டர் இன்று எங்கும் கிடைக்கிறது. கிராமவிருந்துகள் கூட டிஸ்போஸபிள் டம்ளர், தட்டுக்களே பயன்படுத்தப்படுகின்றன. மலையாளி இன்று தனது கிராமத்திலல்ல ‘உலக கிராம’த்தில் வாழ்ந்துவருகிறான்.

உடல்நலம் பேணுவதில் மிகையான கவனமும் ஆடம்பரமான சிகிட்சை வசதிகளுக்குத் தயங்காத ஒரு வர்க்கம் இன்று கேரளத்தில் உண்டு. அவர்களைச் சுரண்டுவதற்காகச் சுகவாச மையங்கள் போன்ற மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் உள்ளன. அதி நவீன தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நோய் நிர்ணயம் செய்கிற மருத்துவமனைச் சிகிட்சைச் செலவுகள் சாதாரணமானவர்களால் தாங்கவியலாமல் போனது. ஆனால் சிறுசிறு நோய்நொடிகளுக்குக் கூட சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நாடுகிற ஒரு வர்க்கமும் கேரளத்தில் உண்டு. உலகிலுள்ள அனைத்து சிகிட்சை முறைகளும் இன்று கேரளத்தில் கிடைக்கிறது. மருந்தகங்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. அழகைப் பெருக்க, இளமை நிலைநிறுத்த என நூற்றுக்கணக்கான மருந்துகள் கேரளக் கடைகளில் விற்பனைக்குண்டு. மனித வாழ்நாட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும் நோய்நொடிகளும் பெருகியுள்ளன.

கலை இலக்கியத்தில் இன்று புதிய பல போக்குகள் தோன்றி யுள்ளன. உலகமயமாதலின் பண்பாட்டுப் பாதிப்புகளை ஆழ்ந்து ஆராயும் இலக்கியப் படைப்புகள் ஏராளமாகவே எழுதப்பட்டுள்ளன. சிறுகதையே இத்துறைக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. உலகமயமாதலுடன் நிகழ்ந்த வரலாற்றுப் புறக்கணிப்பைக் கண்டித்து விமர்சிக்கும் பலநாவல்கள் மலையாளத்தில் எழுதப் பட்டன. இலக்கியத் திறனாய்வுத்துறையில் பின்நவீனத்துவம் குறித்து ஏராளமான விவாதங்கள் நிகழ்ந்தன. இலக்கியத்தைத் தேசீய அடிப்படைவாத மனநிலையுடன் அணுகியவர்கள் மலையாளத்தில் பின்நவீனத்துவத்தை ஆதரிக்கவில்லை. இருப்பினும் தொண்ணூறு களில் மிகமுதன்மையான விமர்சனப்போக்கு பின்நவீனத்துவம்தான்.

புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப திரைப்படங்கள் மாறின. பொருளாதார லாபமீட்ட ஏற்ற கலவைகள் கண்டடைவதில் வணிக நோக்கிகள் வெற்றியடைந்தனர். மிக மேலோட்டமான வாழ் வனுபவங்களைச் சித்தரித்து பார்வையாளர்களை ரசிக்கவைக்கவே பல படங்களும் முயன்றன. வாழ்வின் அனைத்து நிலைகளும் நகைச்சுவை, மிமிக்ரியாகக் கட்டுடைவு பெற்றன. குடும்பம், காதல், சமூகவாழ்வு, அரசியல் போன்ற துறைகளில் இருந்துவருகிற சிக்கல்களை மிகமேலோட்டமாகப் பரிகாசித்துடன் அலசும் அப்படங்கள் தீர்வுகள் எதையும் பரிந்துரைப்பதில்லை. நிலவுடைமை வீழ்ச்சி,அதன் மீட்டுருவாக்கப் பணிகளைப் பிரச்சாரம் செய்யும் திரைப்படங்களும் ஒரு பிரிவின.

 யதார்த்தமற்ற அனுபவங்களை ஆடிப்பாடி அரங்கேற்றும் புதுத்திரைப்படங்கள் வாலிபப் பருவத்தைப் பெரிதும் வசீகரித்தது. இந்திப் படங்களுடன் போட்டிபோடுகின்ற பாடல்காட்சிகள் படத்தின் வெற்றிக்கு அவசியமானது. இப்பாடல்கள் தொலைக்காட்சி வழியாகச் சுதந்திர இருப்பைப் பெறுகின்றன. இதற்கிடையே வாழ்வின் யதார்த்தங் களை நேர்மையுடன் உரையாடும் திரைப்படங்களும் வெளியாகி யுள்ளன. நடுத்தர வர்க்க குடும்பப் பிரச்சினைகள், கேரளச் சமூகத்தில் பெண்ணின் யதார்த்த நிலை, கபட ஆன்மீகம் உருவாக்கும் சமூகப் பிரச்சினைகள் இவற்றைச் சித்தரிக்கும் சில படங்களும் இக்காலத் தில் தோன்றின. கலைப்படங்கள் என்ற நீரோட்டம் முற்றிலும் மறைந்து போன ஆண்டுகள் இப்பத்தாண்டுகள். தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கப் பெண்களையே முன்னிறுத்தின. பெரும்பாலும் கேரளத்தில் இல்லாமலாகிவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்வின் போராட்டங்களை அவை சித்தரித்தன. ஒளிபரப்புக் கால அதிகரிப்பும் தனியார் சானல்களின் பெருக்கமும் ஏற்பட்டதுடன் இவை பல வடிவங்களில் சித்தரிப்புப் பெறுகின்றன.

நாடகக் கலையும் வணிக நோக்கிற்கு அடிமைப்பட்டுப் போனது. பொருளாதார லாபத்தை அடைவதற்கு அவசியமான கலவைகளை புரொபஷணல் நாடகங்கள் உள்வாங்கியுள்ளன. சமகாலவாழ்வுடன் தொடர்பற்ற கதைப்பொருண்மைகள் நகைச்சுவை,பாலியல் வாடையுடன் அளித்துப் பார்வையாளரை வரவேற்கின்றன நாடகங்கள். இன்று நாடகத் தயாரிப்புக்குப் பெரும்தொகை முதலீடு தேவை. ஆகவே அம்முதலீட்டைத் திரும்பப்பெறச் சினிமாக்களை பலநிலைகளில் பின்பற்ற வேண்ய கட்டாயத்தில் உள்ளன புரொபஷணல் நாடகங்கள். சந்தைமயமாக்கம் வாழ்வில் உருவாக்கி விட்ட மாற்றங்கள், நடுத்தரவர்க்க மனநிலைகளைச் சித்தரிக்கும் நாடகங்களும் சில இக்காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. சாஸ்திர சாகித்ய பரிஷத், பிற நற்பணி மன்றங்கள்,அமெச்சூர் நாடகக் குழுக்கள் தயாரித்து அரங்கேற்றிய நாடகங்கள் வழியாக உலகமய மாதலுக்கு எதிரான பண்பாட்டுப் போராட்டக்குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டதை இங்கு நினைவு கூரலாம்.

கேரளத்தில் இன்று கட்டிடத்தொழில் துறை வேகமாக முன்னேறி வரும் மிகப்பெரும் தொழில்துறையாகும். வளைகுடா நாடுகளின் பணவரவுடன் ஆரம்பித்த வீடுகட்டும் ஆசை உலகமயமாதல் காலத்திலும் வலுத்தது. அணுக்குடும்ப அமைப்பில் தனிவீடு ஒரு இன்றியமையாத தேவையாகியுள்ளது. வீடுகட்டலில் வளைகுடாப் பணக்காரர்கள், செல்வந்தர்களோடு நடுத்தர வர்க்கம் போட்டி போட்டு வருகிறது. விலை உயர்ந்த கட்டிடப்பொருட்கள், ஃபிட்டிங் பொருட்கள், மார்பிள், கிரானைட் போன்றவைக் கேரளச் சந்தைகளில் பெரும் புழக்கமடைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கட்டியமைக்காத வீடுகள் மிகமிக அபூர்வம். தொலைக்காட்சியுக ஆரம்பத்திலிருந்து மனிதன் அதிக நேரத்தை வீட்டினுள்தான் செலவிடுகின்றான்.

உலகின் அனைத்துப் பொருட்களும் வீட்டினுள் ளேயே கிடைக்கவேண்டும் என்பதால் பல வீடுகளும் பொருட் காட்சிசாலை போலாகியுள்ளன. உள்ளறை அலங்கார அழகியலின் வரவுடன் வீட்டின் உள்பகுதிகள் அசைவற்ற நிலைக்காட்சிகள் போல அழகூட்டம் பெற்றுள்ளன. கேரளத்தில் சிறு,பெரு பேதமின்றி அனைத்து நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் வந்து விட்டன. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு தளத்தில் ஒரு வீட்டையேனும் சொந்தமாக்குதல் என்பது கேரள நகரவாசிகளில் சிறுபிரிவின் கனவாக மாறியுள்ளது. ஒரு நுகர்வோர் யுகத்தில் கேரள மக்களின் வீடுகட்டும் ஆசை வியப்பளிக்கிறது. புற உலகம் போட்டிபொறாமைகளும் யந்திரத்தனமாகவும் இருப்பதால் வீடு மிக இதமான, பாதுகாப்பான இடமாக உணரும் அனுபவ நிலை இன்று கேரளத்தில் உண்டு. வீட்டைவிட்டுப் போதல் எழுபதுகளின் நவீனத்துவப் பிரக்ஞையின் அடையாளமாக இருந்தது. இன்றையப் புதுத் தலைமுறை இதை ஒரு கருத்தாகவே மதிக்கவில்லை.

தொண்ணூறுகளில் ஓவியக்கலை மிகுந்த அசைவுகளைப் பெற்றது. உலகமயமாதலை கேரள ஓவியக்கலை உள்ளூர்மய மாதலை முன்னிலைப்படுத்தி எதிர்கொண்டது.
 
உலகளாவிய ஓவியமொழி, குறியீடுகளைப் புறக்கணித்து கேரள வழமைகளை வடிவமைத்தெடுக்கும் முயற்சி ஓவியத்துறையில் பரவலாக இடம்பெற்றது. ஆசிரியத்துவச் சிக்கல், சந்தைமயமாக்கம், சூழலியல் சீர்கேடுகள், பெண்களின் மீதான கொடுமைகள் என்பன இக்கால ஓவியங்களின் மையப்பொருண்மையாக இருந்தன. எக்ஸ்பிரசனிச பாணி, எடுத்துரைப்புப் பாணியும் ஓவியங்களில் இடம்பெற்றன. பல்வேறு காட்சிகளை ஒரே பிரேமில் சித்தரிக்கும் முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. வணிகக்கலையே ஓவியக்கலையின் வாய்ப்புக்களை அதிகமாகப் பயனாக்கம் கொண்டது. கணினியின் வாய்ப்புக்களுடன் இணைய கலை-தொழில்நுட்பம்-சந்தை இவற்றின் இணைவு அபாரமான வணிகவெற்றியை ஓவியத்திற்கு அளித்தது. சந்தைமயமாக்கத்தால் அதிகப் பயனை ஈட்டியவை வணிக ஓவியங்கள்தான்.

உலகமயமாதலின் பின் ஏற்பட்ட புதுப்புது தேவைகளும் வாழ்க்கைப் பார்வைகளும் கேரளத்தின் நிலவியற்கை, உயிர்வாழ் சூழலை மிகவும் மாற்றி அமைத்தது.செயற்கையான அழகின் மீதான நாட்டம் இயற்கை அழிவுக்குக் கொண்டுசென்றது. கட்டிடங்கள் கட்டுவதற்காகப் பள்ளமான நிலப்பகுதிகள் சமதளப்படுத்துவதற் காகக் கனரக வண்டிகளில் மேல்மண் தோண்டி எடுத்துச் செல்லப்படும் காட்சி கேரளத்தில் சர்வசாதாரணமாகி விட்டது. நிலத்தைக் குடைந்து மண்ணைத் தோண்டி எடுக்க ராட்சச இயந்திரங்கள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குன்றுகள் நமது நிலவியற்கையின்றும் மறைந்து வருகின்றன. மேல்மண்ணின் அவசியம் பற்றியோ அதை நாசமாக்குவதன் அதர்மம் குறித்தோ எண்ணிப்பார்க்க மலையாளிக்கு நேரமில்லை.

நெல் விவசாயம் பெருலாபம் அளிக்காகாததால் நெல்வயல்கள் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்மயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கை உணர்வற்ற அழகியல் கற்பிதங்களால் கேரளத்தின் இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், நகரக் கழிவுகள் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. புது அழகுணர்வு இறந்த காலத்தின் சுவடுகளை, வரலாற்று நிகழிடங்களைத் தயவின்றி நாசப்படுத்தி வருகின்றது. பண்பாடு, வரலாறு குறித்து மார்தட்டிக் கொள்கிற மலையாளி சுயலாபங்களுகாக இவற்றை கண்ணைமூடிக் கொண்டு அழித்துவருகிறான். காங்க்ரீட் தொழில்நுட்பம் கட்டிடத் துறையில் செலுத்திவரும் தாக்கம் இதற்குக் காரணம். காங்க்ரீட் தொழில்நுட்பம் குறுகிய கால ஆயுள்கொண்டது என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. பெரிய பெரிய கட்டிடங்கள் மேம்பாலங்களின்றிப் பொருளாதார வளத்தைக் காட்டமுடியாதுதான். முற்றங்களும் நடைபாதைகளும் காங்க்ரீட் செய்யப்பட்ட வீடுகளில் வசிக்கும் சிறார்கள் பூமியின் ஸ்பரிசமின்றி வாழ்ந்துவருகின்றனர்.

உலகமயமாதல் பணக்காரர்களைப் பெரும்பணக்காரர்களாக் கியது. மக்கட்தொகையில் 30% வருகிற நடுத்தரவர்க்கத்தின் நுகர்வுவேட்கையைத் தூண்டி உச்சப்படுத்தியது. இந்திய மக்களில் சுமார் 20% பேர் அனைத்து உபயோகப் பொருட்களையும் வாங்கும்திறன் படைத்தவர்கள். இப்பிரிவினரை மையமிட்டே ஆடம்பரப் பொருட்கள், பிற தொழில்களும் இருந்துவருகின்றன. உபயோகப் பொருட்களின் பெருக்கம், வாழ்க்கைக் கொண்டாட் டங்களுக்கு இடையில் மிகுபெரும்பான்மையினரின் யதார்த்த வாழ்க்கைத் துயரங்கல் மூடிவைக்கப்படுகின்றது.

புதுப்பொரு ளாதாரக் கொள்கையால் இம்மிகு பெரும்பான்மை வர்க்கம் மேறும் வறுமைக்குள் உழன்றுவருகின்றனர். மறுகாலனியாக்கத்தின் விளைவுகள் பரவலாகக் காணமுடிகின்றது. இன்று உணவுப் பொருட்கள், அன்றாடப் பயன்படு பொருட்கள், மருந்துவகைகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தாராளமயமாதலின் பகுதியாக உணவு எண்ணை மற்றும் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டது கேரளத்தின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. இதனால் ஏற்பட்ட தேங்காய், ரப்பரின் விலைச்சரிவு விவசாயம் மற்றும் சார்தொழில்களைப் பாதித்தது. வெளிநாடுகளில் இருந்து காய்கறிகள், பழவகைகள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்தேறி விட்டன. இயல்பாகவே அப்பொருட்களின் விலை அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களுக்கு இவை கைக்கெட்டாமல் போகிற நாள் அதிதொலைவில் இல்லை. இப்போதே ஏழ்மையும் நோய்மையும் வாட்டும் சாதாரண மக்களை மேன்மேலும் ஏழையராக வும் நோயாளிகளாக்கவும் இது பயன்படும்.

உலகமயமாதல் செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கத்தின் கருத் துலகை, கொள்கையை மாற்றியமைத்துள்ளது. மறுமலர்ச்சி, நவீனமாக்கத்தால் கேரளச் சமூகத்தில் ஏற்பட்ட பிரக்ஞைவிகாசம் உறைபட்டோ திசைமாறியோ போய்விட்டது. மறுமலர்ச்சியின் பலனாகக் கேரள வாழ்வில் ஏற்பட்ட பலன்கள் புதிய சமூகமாறுதல்களின் முன் ஒளிமங்கிப் போனது. சிந்தனைத் தளத்தில் ஒரு பெரும் நெருக்கடி இங்கு ஏற்பட்டது. தனிநபர் வாழ்வின் திட்டமிடல், வாழ்க்கை குறித்த சிந்தனைகளும் மாறிப்போயின. உலக நிகழ்வுகளை எதிர்கொள்ள அறிவை மறுஅமைப்பு செய்யவோ பண்பாட்டு ஆக்கிரமிப்பை மறுத்துப் போராடவோ இயலாமல் போனது. உலகமயமாதலின் பெரும் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகிறது மலையாளியின் வாழ்வு. இச்சூழ்நிலையிலிருந்து விடுதலை பெறப் பலரும் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட நிலவுடமைக் கருத்தியல் அதன் பண்பாட்டில் புகலிடம் தேடுகின்றனர்.

புதுப்பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பலனாக ஏற்பட்ட ஏழ்மை யாக்கம் இதர மாநிலங்கள் போலக் கேரளத்தைப் பாதிக்கவில்லை. அதன் காரணங்கள் இரண்டு. வளைகுடா நாடுகளில் இருந்து வந்துகொண்டிருந்த பணம் இக்காலத்திலும் வழக்கம்போலவே இருந்தது. அதனால் தேசியப் பொருளாதார நெருக்கடியை ஓரளவேனும் எதிர்கொள்ள இயன்றது. தாராளமயமாக்கத்தின் ஆரம்பநாட்களில் தேசியபொருளாதார நிலையில் சற்று முன்னேற்றம் இருந்தது எனினும் 1995ற்குள் நிலைமை மோசமடைந்தது. நாடு கடனில் சிக்குண்டது. இந்த இரண்டாம் கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் கேரளத்தை அவ்வளவாக நெருக்காமல் போகக் காரணம் 1996ல் ஆரம்பிக்கப்பட்ட வெகுசன மேம்ப்பாட்டுத் திட்டம்(ஜனகீய ஆசூத்ரண பத்ததி) இத்திட்டம் சாமானிய மக்கள் வாழ்வுக்குக் குறைந்த அளவிலாவது பொருளாதாரப் பாதுகாப் பளித்தது.

கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றன. வளர்ச்சிப் பணிகளைத் தாமே நடைமுறைப்படுத்தியது கேரள வாழ்வில், வாழ்க்கைப் பார்வையில் ஓரளவுவரை மாற்றத்தைக் கொணர்ந்தது. இந்தியா முழுமையும் உலகமயமாதலுக்கு அடிபணிந்தபோது கேரளம் இத்திட்டத்தின் மூலமாகக் கிராமத் தன்னிறைவு, தன்னாட்சிக்கு வழியமைத்துக் கொண்டது. உலகமயமாதலுக்கு ஆளான எந்த நாட்டிலும் இக்காலத்தில் இது போன்றதொரு திட்டம் சோதனை செய்யப்படவில்லை. “கோலா-கொக்கெய்ன் - கால்கேர்ள்” பண்பாட்டு திணிப்பைத் தடுத்து சமூகவாழ்வுக்கு புதிய தலைமுறையை அழைத்துவர இத்திட்டம் சிறிதளவேனும் உதவியுள்ளது.

1998 க்குப் பிறகான பொருளாதாரச் சிக்கல்களின் உலகமயமாதலுக்காளான நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிகள் கேரள நடுத்தரவர்க்கத்தின் கண்களைத் திறந்துள்ளது. பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் சிறிதளவேனும் எதிர்வினை யாற்ற மலையாளி ஆயத்தமாகியுள்ளான். பொருளாதாரத் தன்னிறைவு அடைவதற்கான திட்டப்பணிகளோடு பண்பாட்டுத் தன்னிறைவு பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் கேரளத்தில் பரவலாக நடைபெற்று வருகின்றது.

Pin It