காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!
தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்! தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார்? என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாகத் தெரியும்!
அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள். அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்து விட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுய லாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக் கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.
இப்போது கூட பீகாரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கிறதே! பீகார் மாநிலத்தில் இதுவரை பா.ஜ.க. முதலமைச்சர் இருந்ததே கிடையாது. நிதிஷ்குமார் அவர்களை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, இப்போது காரியம் ஆனதும் அவரை ஓரங்கட்டிவிட்டு, பா.ஜ.க. முதலமைச்சரை உள்ளே கொண்டு வரப் போகிறார்கள். இதையேதான் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.
நான் அடித்துச் சொல்வேன்! சேலஞ்ச் செய்து சொல்வேன்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ் நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்பு களை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு Out Of Control–தான்!
நாங்கள் பார்க்காத படையெடுப்பா? தி.மு.க. பார்க்காத மிரட்டலா? நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டு மானாலும், காவி அடித்திருக்கலாம்! ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது! இங்கே எப்போதுமே நாங்கள்தான்! எங்கள் மண்ணில், நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்!
1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம்
இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும், மக்களிடம் போகும் போது சொல்ல வேண்டியது என்ன? நடக்க இருக்கும் தேர்தல், தி.மு.க. vs NDA கிடையாது! தமிழ்நாடு வெர்சஸ் NDA! இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெல்லப் போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதுதான் 2026 தேர்தல்! இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும்! உங்கள் வாக்குகளைத் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் போடுங்கள் என்று கேளுங்கள்! இதுதான் நீங்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடைவிடாமல் மக்களிடம் பரப்ப வேண்டிய மெசேஜ்!
இந்த நேரத்தில், தந்தை பெரியார் 1971 தேர்தலின்போது சொன்னதை, நினைத்துப் பார்க்கிறேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான், தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும்” என்றார். இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்!
இங்கே வந்ததும் என்னுடைய நினைவிற்கு வந்தது. 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில், இதே இடத்தில் ஏழு இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். அதில் முதல் இலக்கு வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு! இரண்டாவது இலக்கு மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! மூன்றாவது இலக்கு – குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! நான்காவது இலக்கு – அனைவருக்கும் உயர்தரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்தாவது இலக்கு – எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! ஆறாவது இலக்கு – உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! ஏழாவது இலக்கு – அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!
கழக அரசை எதிரிகளும் பத்திரிகைகளும் பாராட்டுகிறார்கள்!
நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன்! இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சியின் திட்டங்களால் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்! அதனால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இதையெல்லாம், நம்முடைய எதிரிகளே, இன்றைக்கு மனதிற்குள் ஒப்புக்கொள்வார்கள். யாராலும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை இது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுகூட, “நம்பர் ஒன் மாநிலம் – தமிழ்நாடு’ என்று சொல்கிறார்கள். உலக பத்திரிகைகளே, ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு’ என்று பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு நாம் கெத்தாக முன்னேறி இருக்கிறோம்!
- திருச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை