அமெரிக்க வல்லாதிக்க வெறியாட்டத்தின் கொடுங்காயங்கள் ஆறுவதற்கு முன்னாலேயே ஈராக் மீண்டும் குருதி வெள்ளத்தில் சிக்கி விட்டது. சன்னி, ஷியா முஸ்லீம் மதப் பிரிவினர்களிடையே உள்ள பகைமையைப் பயன்படுத்தி ஈராக்கில் காலுன்றுவதற்கு அமெரிக்கா செய்த சூழ்ச்சியின் பின் விளைவுகளை ஈராக் இப்போது சந்தித்துக் கொண்டுள்ளது.

முகமது நபிகள் நாயகம் இறப்பை ஒட்டி பிறந்த ஷியா சன்னி பிரிவும், அவற்றிகிடையேயான இரத்தக் களரியும் வரலாறு நெடுகிலும் தொடர்கிறது. நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தின் தலைமை நபிகளின் குருதி உறவினர்களுக்கே வர வேண்டும் என வலியுறுத்தியர்கள் ஷியா பிரிவாகவும், நபிகள் நாயகத்தின் மெய்யியல் வாரிசுகளே அடுத்து தலைமைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியவர்கள் சன்னி பிரிவாகவும், மாறி மோதிக் கொண்டார்கள்.

வரலாற்று ஓட்டத்தில் சன்னி பிரிவினர் உலகெங்கும் உள்ள முஸ்லீம்களுக்கு இடையே பெரும்பான்மையினராக இருந்தாலும் மத வழிப்பாட்டு முறையில் சில சமரசங்கள் ஏற்கப்பட்டதால் உலகின் ;பெரும்பாண இடங்களில் சன்னி - ஷியா மோதம் நடைபெறவில்லை.

ஆனால் முதலாளியம் முற்றி வளர்ந்த காலத்தில் குறிப்பாக அரபு மண்ணில் பெட்ரோலியம் உள்ளதை அறிந்த பின்பு, ஏகாதிபத்தியங்கள் இந்த சன்னி - ஷியா பிரிவினையை ஊதிப் பெருக்க வைத்து ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கு ஆதரவாக நின்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டன.

இந்த வகையில் ஷியா முஸ்லீம்களில் ஆட்சிப் பகுதியாக ஈரானும், சன்னி சிறுபான்மையினரின் பிடியில் ஈராக் இருக்குமாறும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி எல்லைகளை வகுத்தது. அதே போல் எண்ணெய் வளத்தில் முதல் நிலை நாடாக உள்ள சவுதி அரேபியா சன்னி பிரிவு குறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் உள்ளது.

அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு பயன்பட்ட இந்த பிளவை இன்று அமெரிக்கா தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக எவ்வளவு உயிர்களையும் பலியிட அமெரிக்க வல்லாதிக்கம் தயங்குவதில்லை.

ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் மேலாதிக்கம் நிறுவப்படுவதை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடியப்போது அந்த போராட்டத்தின் ஊடாக பின்லேடனின் அல்; கொய்தா வலுபெறுவதற்கு அமெரிக்க வல்லரசு மறைமுகமாகத் துணை செய்தது. ஆனால் அதே அல்கொய்தா உலகுதழுவிய இஸ்லாமிய பேரரசு உருவாக்கும் கனவில் களம் இறங்கிய போது அமெரிக்க வல்லாத்திக்க நலன்களோடு மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவே அஞ்சி நடுங்கும் அமைப்பாக அல்கொய்தா வளர்ச்சி பெற்றது. அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்பு இயக்கமாக வரலாற்று ஓட்டத்தில் அது உருக்கொண்டது. இஸ்லாமிய மதவாதமும் குறிப்பாக சன்னி பிரிவு முஸ்லீம் மக்களின் பேராதரவும் அதற்குப் பயன்பட்டன.

1970-களின் பிற்பகுதியில் ஈரானில் அமெரிக்க கைப்பாவை அரசான மன்னர் ஷாவுக்கு எதிராக அயத்துல்லா கொமேனி தலைமயில் எழுந்த இஸ்லாமிய புரட்சி சாரத்தில் ஷியா முஸ்லீம்களின் எழுச்சியாகவே அமைந்தது. அச்சூழலில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஈராக் ஆட்சியாளர் சதாம் உசேனை தனது துணைச் சக்தியாக அமெரிக்கா வைத்துக் கொண்டது. ஷியா பிரிவுத் தலைவராக இருந்தாலும் அயத்துல்லா கொமேனி சன்னி பிரிவினர்களுடன் சமரசம் காண கடும் முயற்சிகள் மேற் கொண்டார். ஆனால் அவை எதுவும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்க வல்லரசு கவனமாக இருந்தது.

ஈராக் நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஷியா பிரிவு முஸ்லீம்கள், ஆனால் ஆட்சியாளர்களோ சன்னி பிரிவினர் சதாம் உசேனின் பாத்திஸ்ட் கட்சி கொள்கையளவில் மதசார்பற்ற கட்சிதான் என்றாலும் நடைமுறையில் சதாமின் ஆட்சி சன்னிகளின் ஆட்சியாகவே இருந்தது. இந்த முரண்பாடும், பொருமலும் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. சர்வாதிகாரியாக தன்னை வலுப்படுத்திக் கொண்டதின் மூலம் சதாம் உசேன் தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

சமயம் பார்த்து இந்த முரண்பாட்டை தனது கொடிய வல்லாதிக்க நோக்கத்திற்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. சதாம் உசேனுக்கு எதிரான ஈராக்கியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்;த முடியாத சூழலில் சதாம் உசேன் கொடிய ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பொய்யைப் புனைந்து ஈராக் மீது படையெடுத்தது அமெரிக்கா.

பல்லாயிரக்கணக்கில் ஈராக் தேசத்து மக்களை கொன்று குவித்து அந்நாட்டையே பிணக்காடாக்கி உருத்தெரியாமல் அழித்தது அமெரிக்கா. இக்கொடுங்செயலுக்கு அந்நாட்டில் நிலவிய சன்னி - ஷியா முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. சதாம் உசேனுக்கு மரணதண்டனை அளித்து தனது இராணுவ பிடியில் ஈராக்கை தொடர்ந்து வைத்திருக்க முடியாத சூழலில் தனது கைப்பாவை அரசாக ஷியா பிரிவினர் பெரும்பான்மைக் கொண்ட ஓர் ஆட்சியை உருவாக்கியது. நூரி அல் மாலிக்கி என்ற கடைந்தெடுத்த கை ஆள் ஒருவரை துப்பாக்கி முனை தேர்தல் வழியில் பிரதமராக ஆக்கியது.

ஆனால் வரலாறு அமெரிக்காவின் வல்லாதிக்க கனவு அனைத்திற்கும் துணைச் செய்வதாய் இல்லை. ஈராக்கில் ஷியா முஸ்லீம்களின் ஆட்சி அம்மண்டலத்தில் ஈரானின் செல்வாக்கு வளர்வதற்கு துணைச் செய்தது. ஈரானின் துணை இருக்கிற துணிச்சலில் ஈராக்கின் மாலிக்கி ஆட்சி சன்னி முஸ்லீம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒதுக்கலை செயல்படுத்தியது. சன்னி முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்கள் ஒன்றுக்கூட இல்லாமல் அழிக்கப்பட்டது. படையிலோ, அரசு நிர்வாகத்திலோ பெயருக்கு கூட சன்னி முஸ்லீம்கள் இடம் பெறமுடியாத வகையில் முற்றிலும் வெளியே நிறுத்தப்பட்டனர்.

இன்னொரு புறம் சிரியாவில் நடைபெற்ற அல்சதாத் அரசு நடைமுறையில் ஷியாக்களின் ஆட்சியாகவே இருந்தது. எகிப்தின் முபாரக் போல சிரியாவின் அல்சதாத் கொடும் சர்வாதிகாரியாக இருந்தார்.

அல்சதாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி சனநாயக கிளர்ச்சியாக தொடங்கினாலும் விரைவில் சன்னி முஸ்லீம்களின் போராட்டமாக உருக்கொண்டது.

ஈரான், ஈராக், சிரியா ஆகிய பரந்த ஆராபிய மண்ணில் வலுப்பெற்ற ஷியாக்கள் தனது வல்லாதிக்கத்திற்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் சன்னி பிரிவிலிருந்து “ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு” (Islamic State in Iraq and Syria - ISIS) என்ற கிளர்ச்சி அமைப்பு 2006- ம் ஆண்டு இறுதியில் சிரியாவில் தொடங்கப்பட்டது.

தொடக்க காலத்தில் ஷியா மேலாதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அமெரிக்கா மறைமுகமாகத் துணை செய்தது.

இன்னொரு புறம் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் சன்னி மயமாக இருந்த ஈராக் படையிலிருந்து சுமார் 7 இலட்சம் சன்னிக்கள் முற்றிலுமாக படைபணிகளிருந்து நீக்கி வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் கனிசமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் போராளிகளாக இணைந்தனர்.

சிரியாவிலும், ஈராக்கிலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களாக சன்னி முஸ்லீம்கள் வழங்கியதால் வேகம் கொண்ட சன்னி இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைவது இயல்பாக தீவிரம் பெற்றது.

2011 தொடங்கி ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ஈராக்கின் மாலிக்கி அரசு படைவகையில் பலவீனப்பட்ட அரசாக விளங்கியது.

சிரியா உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். சிரியாவிலும் கனிசமான பகுதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இவ்வியத்தினர் நேர்த்தியான அரசு நிர்வாகத்தை வழங்கினர். இவ்வியக்கத்தின் தலைவர் 48 வயதான அபுபாக்கீர் அல்பாக்தாதி ஒரே நேரத்தில் ஈவு இரக்கமற்ற பயங்கரவாதி என்றும் சிறந்த நிர்வாகி, உணர்ச்சியூட்டும் பேச்சாளர் உளவியல் தெரிந்த பரப்புரையாளர் எனவும் அமெரிக்க ஊடகங்களால் வர்ணிக்கப் படுகிறார்.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்டு உலகில் பலப் பகுதிகளிலிருந்தும் உணர்ச்சி பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இவ்வியக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

அமெரிக்க வல்லரசின் மறைமுக ஆதரவு, ஒடுக்குண்ட சன்னி இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு போராளி அமைப்புகளின் ஒருகிணைப்பு ஆகியவற்றைக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர்.

சிரியாவின் கனிசமான பகுதிகளில் தங்கள் நிர்வாகத்தை நிறுவிக் கொண்ட பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் ஈராக் மீது படையெடுத்தனர். ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் சன்னி முஸ்லீம்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்று அங்குள்ள உள்ளுர் போராளிகளையும் இணைத்துக் கொண்டு விரைந்து முன்னேறினர். சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை கைப்பற்றிய போது அங்கு வாழும் சன்னி முஸ்லீம்கள் சதாம் உசேனின் படத்தை கையில் ஏந்தியவாறு உணர்ச்சிப் பெருக்கோடு வரவேற்பு முழக்கமிட்டனர். பெரும் எண்ணிக்கையிலான சன்னி இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் படையினரோடு இணைந்துக் கொண்டனர்.

முன்னேறும் இடங்களிலெல்லாம் ~pயா இஸ்லாமியர்களை சுட்டுக்கொல்வதும், வெட்டி வீழ்த்துவதும் என்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் இலட்சக் கணக்கான ஷியா முஸ்லீம்கள் பாதுகாப்புத் தேடி தெற்கு ஈராக் நோக்கி ஓடு கின்றனர்.

மறுபுறம் சதாம் உசேன் ஆட்சியில் தொகைக் தொகையாகக் கொல்லப்பட்ட குர்தி~; இனமக்கள் அமெரிக்க படையெடுப்பில் ஈராக் சிக்கியதை பயன்படுத்திக் கொண்டு தங்களது குர்திஸ்தான் விடுதலை போராட்டத்தை விரைவுப் படுத்தினர். போர் நகர்வு உத்தி என்ற வகையில் குர்திஸ்தான் வான் பரப்பில் ஈராக் விமானங்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. விரிவான தன்னாட்சியோடு தனிப்படையோடு குர்திஸ்தான் பிரதேச அரசாங்கம் நிறுவிக் கொள்ள அமெரிக்கா துணை நின்றது. ஆயினும் குர்திஸ்தான் தேசத்தின் சில பகுதிகள் ஈராக்கிற்குள்ளேயே தொடர்ந்து சிக்கியிருந்தன.

இப்போது ஈராக்கிற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் நுழைந்து மாலிக்கியின் ஈராக் அரசு பலவீனப்படுவதை பயன்படுத்திக் கொண்டு குர்திஸ்தான் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

குர்திஷ் பிரதேச அரசின் தலைவர் மசூத் பர்ஜானி ஈராக்கின் புதிய நிலைமை குர்திஸ்தானத்திற்கு வரலாறு வழங்கியிருக்கிற வாய்ப்பு என அறிவித்தார். ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தனி அரசாக சுதந்திர அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் கூடியுள்ளன.

இன்றுள்ள நிலையில் தனது கட்டுப்பாட்டையும் மீறி ஐ.எஸ்.ஐ.எஸ் வளர்ச்சி அடைவது அமெரிக்காவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலை பயன்படுத்திக் கொண்டு ஈரான் பக்கம் பெரிதும் சாய்ந்தும் வரும் நூரி அல் மாலிக்கையும் வரம்புக்குட்படுத்தி வைக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ் வலுப்பெறுவதை தடுக்கவும் ஒரு சேர திட்டமிடுகிறது அமெரிக்கா.

ஷியா, சன்னி, குருதுகள் ஆகிய முத்தரப்பினரும் இணைந்த ஈராக் தேசிய அரசை ஏற்படுத்துவது, அது முடியாது போனால் ஈராக்கை மூன்றாக பிரித்து சன்னி ஈராக், ஷியா ஈராக், குர்திஷ்தான் என்ற மூன்றாக பிரிப்பது எனும் திட்டத்தில் அமெரிக்க வல்லரசு களம் இறங்கியுள்ளது.

அதற்கேற்ப வரம்புக்குட்பட்ட வான் தாக்குதலிலும் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன.

மொத்தத்தில் மீண்டும் ஈராக் கொந்தளிப்பில் உள்ளது. குருதிக்காடாக மாறியுள்ளது.

ஈராக் நெருக்கடி மத்தியக் கிழக்கில்; மட்டுமின்றி உலகெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

குர்திஷ்தான் விடுதலையை ஏற்றுக்கொண்டு மீதமுள்ள ஈராக்கை ஷியா, சன்னி ஆகிய இருபிரிவு இஸ்லாமியர்களும் இணைந்து ஆட்சி நடத்தும் சனநாயக நாடாக மாற்றுவதே இன்று எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

சுமேரிய நாகரிகத்தின் வழித்தோன்றல்களான ஈராக் மக்கள் வல்லரசு ஆதிக்கப் பிடியின் காரணமாக சிதிலம் அடைந்து குருதி கொட்டுவது வரலாற்றில் திணிக்கப்பட்டுள்ள சோகம்.

Pin It