கல்வியை வசப்படுத்தி
அறிவும் ஆதாயமும் பெற்று
எங்களை ஒடுக்கும் ஆயுதமாக்கினீர்.

ஆசை தாளாமல் படித்த எங்கள்
நாக்குகள் அறுக்கப்பட்டன.
கேட்டக் காதுக்குள்
ஈயம் அக்னி பிழம்பாகி
ஆழம் பார்த்தது.
கனவு கண்டதற்காக
இமைகள் பறிக்கப்பட்டோம்
உரிமைகள் இழந்தோம்.

சாணிப்பாலும் சவுக்கடியும் பழைய கதை
வாயில் மூத்திரமும் மலமும்
இன்றைய புதிய கண்டுபிடிப்புகள்.

எங்கள் ரணங்களையும்
வலிகளையும் சொல்ல ஆரம்பித்தால்
தீரமும் தியாகமும் நிறைந்த
ஆயிரக்கணக்கான புதிய இதிகாசங்களை
நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.

உங்கள் இதிகாசங்களில்
ஓர் ஏகலைவன் ஒரு துரோணாச்சாரி.
எங்கள் இதிகாசங்களில்
துரோணாச்சரிகளுக்கு இடமில்லை
ஆனால் ஏராளமான ஏகலைவன்கள்
அத்தனைப் பேரும் அசல்.

Pin It