காலையில் வந்த வியாபாரி
ருசியான நண்டு விலை
ரூபாய் 200 என்றார்
இயலாமையை வெளிக்காட்டாமல்
வெள்ளிக்கிழமையைச் சொல்லி
வியாபாரியை விரட்டி விட்டாள்
என் மனைவி
ஆசையோடு நின்றிருந்த
என் மகளின்
சிவந்த முகம்
கருத்துப்போனது
எனக்கோ மனம்
கனத்துப் போனது
இரவு நண்டு பார்சலோடு
வீடு திரும்பிய நான்
நண்பன் வாங்கிக் கொடுத்ததாக
சொன்னேன்.
ருசியில் கிடைத்த
மகிழ்ச்சி மகளுக்கு
அதில் பங்கு கிடைத்த
மகிழ்ச்சி மனைவிக்கு
எப்படியெல்லாம் பொய் சொல்லி
சமன் செய்ய வேண்டியிருக்கிறது
என்ற உறுத்தல் எனக்கு.
- இரா.ஜோதிராம்