ஒருவர் இளமையில் கடவுள் மறுப்பாளராக திகழ்வது எளிது இயல்பானது. பகத்சிங்கும் இளமையில் அவ்வாறு திகழ்ந்ததில் வியப்பில்லை. ஆனால், பிரச்சனைகள் குரல் வளையை நெரிக்கும்போது - சோதனைகள் அடுத்தடுத்து வறுக்கும்போது - எதிர்காலம் நிச்சயமற்றதாய் தெரியும்போது - அப்போதும் கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள் மிகவும் சொற்பம். மரண பயம் எல்லாவற்றையும்விடக் கொடுமையானது. அதுவும் மரணத் தேதி ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டப் பிறகு ஒருவர் உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக செயலாற்றுவது என்பது அபூர்வமானது. அது மிக உயர்ந்த ஆளுமையும் ஆகும். பகத்சிங் சிறையிலிருந்த காலத்தில் - அதுவும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டப் பின்பு அவரது சக சிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பல முறை சந்தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திரநாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள் பக்கம் திருப்புவதற்காக பலமுறை விமர்சனம் செய்தார்.

அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுகிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது எழுதிய நூலே நான் ஏன் நாத்திகனானேன். அந்த நூலில் கடைசியில் எழுதினான், இன்னல்கள் அனைத்தையும் அதிகபட்சத் துணிவுடன் எதிர்கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்குமேடையிலும் கூட தலைநிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராக திகழ்ந்தான் என்பது அவனுடைய அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.பகத்சிங் சாகசப் பிரியன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த சாகசங்களைவிட அதிமுக்கியப் பணிகள் உண்டு என்கிற தெளிந்த தொலைநோக்கு அவனிடம் இருந்தது. சாதாரணமாக ஆக்சன்களில் பங்கெடுப்பவர்களையும் தூக்குமேடை ஏறுபவர்களையும்தான் புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒருபெரிய மாளிகையில் தலைவாசலில் பதிக்கப்பட்ட வைரம் போன்றது.

ஆனால், அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரண கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கு இல்லை என்றான். மேலும் அவன் கூறுகிறான், நமது இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர அஸ்திவாரக் கற்களை சேர்த்து வைக்கவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையை கட்டவே ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்குத் தேவை அஸ்திவாரக் கற்களே. இப்படிக் கூறியதோடு இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்தி னான், தியாகமும் உயிர்பலி யும் இரண்டு வித மானவை. ஒன்று குண்டடிபட்டும் தூக்கிலிடப் பட்டும் மரணத்தைத் தழுவுவது இதில் கவர்ச்சி அதிகம் இருந்தாலும் கஷ்டம் குறைவுதான். 2வது வாழ்க்கைப் பூராவும் மாளிகையை சுமந்து கொண்டிருப்பது.

போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மைவிட்டு போய்க்கொண்டிருக்கும்போதும் - நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காக தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டுச் செல்லாதவர்கள் - மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள் - பளுவுக்கு பயந்து தோள்களை கீழே இறக்காதவர்கள் - ஒளி மங்கிவிடக்கூடாது என்பதற்காகத் தம்மைத்தாமே எரித்துக்கொள்பவர்கள் - பாதையில் இருள் சூழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக தம்மை மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக் கொள்பவர்கள் - உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?. ஆம். பகத்சிங் வெறும் உயிர்த் தியாகங்களை நமக்கு போதிக்கவில்லை. அவனும் புரிந்து கொள்ளவில்லை. அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் கொண்ட நெடிய பயணத்தைத்தான் அவன் கனவு கண்டுகொண்டிருந்தான்.

அவனுடைய ஆளுமை நொடியில் மடியும் மின்மினிப் பூச்சி போன்றதல்ல. யுகங்களைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரம் போன்று.பகத்சிங் தேச விடுதலையை மட்டுமே கனவு கண்டவனல்ல. ஒரு மாபெரும் புரட்சிக்கு சமூக மாற்றத்திற்கு விதையானவன். புரட்சி குறித்து அவனுடைய சிந்தனைகள் மிகுந்த நுட்பமானது.புரட்சி என்பது நம்பிக்கை இழந்து நிற்பவர்களின் தத்துவமும் அல்ல: சாவுக்குத் துணிந்தவர்களின் கோட்பாடும் அல்ல. புரட்சி என்பது கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக மனிதனுக்கு எதிரானது அல்ல. புரட்சி என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான - உயிர்த் துடிப்பிற்கும் நடைபிணத்திற்கும் இடையிலான - இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான - தீராத முரண்பாட்டின் அடையாளமாக இருக்கும்.

உயிராதாரமான உயிர் ஆற்றல். புரட்சி இல்லையேல் இசை ஒளிகளில் ஒரு லயம் இருக்காது. கூட்டிசை இருக்காது: சந்த நயம் இருக்காது. இடையறாது நடந்து கொண்டிருக்கும் புரட்சி அண்ட வெளியிலிருந்து அகற்றிவிட்டால் கவிஞர்கள் பாடிய விண்கோளத்தின் இசை ஒரு மாயையாகவே இருக்கும். புரட்சி என்பது இயற்கையின் விதி. புரட்சி என்பது நடைமுறை ஒழுங்கு. புரட்சி என்பது மாறா உண்மைஇப்படி புரட்சியின் மீது மாளாக் காதலும் தத்துவப் பார்வையும் கொண்டிருந்த பகத்சிங் ஒரு புரட்சியாளன் என்பவன் வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் தாங்கியதொரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று கூறியதோடு, ஆயிரக்கணக்கான நமது இளைஞர்கள் இளம் ருஷ்யர்களைப்போல தங்களது மதிப்பு மிக்க வாழ்க்கையை கிராமங்களில் கழிக்க வேண்டும்: இந்திய புரட்சி என்பது உண்மையில் எதைக்குறிக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் படி செய்ய வேண்டும்.

வரப்போகும் புரட்சியானது வெறுமனே எஜமானர்களின் மாற்றத்தைக் காட்டிலும் கூடுதலான மாற்றத்தைக் குறிக்கும் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். அப்புரட்சி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புதிய சமூக ஒழுங்கமைப்பு மற்றும் ஒரு புதிய அரசின் உதயத்தைக் குறிக்கும் என்றும் தெளிவுபடுத்தியதன் மூலம் சமூக மாறுதலையே தனது புரட்சிகர இலக்காகக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.தொழிலாளிகளையும் விவசாயிகளையும் திரட்டுவதுதான் தான்கொண்ட லட்சியத்தை அடைய உறுதியான வழிமுறை என்பதை பகத்சிங் ஒருபோதும் மறக்கவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோதும் கூட அதில் யாரையும் உயிர்பலியாக்க வேண்டும் என்கிற தீய நோக்கம் இருக்கவில்லை. மாறாக இந்த நாட்டு மக்கள் தங்களுடைய தூக்கத்திலிருந்து விழித்தெழ அது வெடியோசையாக இருக்க வேண்டும் என்றே கருதினான். அவ்வாறே செயல்பட்டான்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது லட்சியத்தை பிரகடனம் செய்தான். வெள்ளைக் காரரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள் அமர்வதால் எந்த நன்மையும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படப்போவதில்லை என்பதை பிசிறில்லாமல் எடுத்து வைத்தான். சுரண்டல் ஆதிக்க நுகத்தடியிலிருந்தும் அந்நிய ஆதிக்க நுகத்தடியிலிருந்தும் ஒரு சேர விடுதலைப் பெற வேண்டும் என்பதே பகத்சிங் நோக்கமாகவும் முழக்கமாகவும் இருந்தது.1. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்) 2. தொழிலாளிவர்க்கம் வெல்லட்டும் 3. ஏகாதிபத்தியம் ஒழியட்டும் என்ற மூன்று லட்சிய முழக்கங்களையே மையமாகக் கொண்டு பகத்சிங் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.

எங்களுக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பகைமை இல்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதுமே அன்போடுதான் நேசித்து வந்தோம் என்பதை மீண்டும் மீண்டும் சொன்னது மட்டுமல்ல. சொன்னபடி நடந்தும் வந்தான். தனிநபர் கொலைகளையோ அர்த்தமற்ற வெடிகுண்டு வீச்சுகளையோ பகத்சிங் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவனல்ல. சமூகத்தின் சகலப் பிரச்சனைகளையும் ஆழமாகவும் நுட்பமாகவும் அலசி அதற்குத் தீர்வுகாண வேண்டும் என எப்போதும் துடித்துக் கொண்டிருந்தவன். பயங்கரவாதம் ஒருபோதும் புரட்சியாளர்களின் நோக்கம் அல்ல என்பதை அறிந்தவன் மற்றவர்களுக்கும் உணர்த்தியவன். அதே நேரத்தில் தேசத்திற்காகவும் உழைக்கும் மக்கள் நலனுக்காகவும் மரணத்தை ஆலிங்கனம் செய்யவும் தயாரான ஆயிரக்கணக்கான இளைஞர்களால்தான் உண்மையான விடியலை கொண்டு வரமுடியும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தான்.

ஆயினும், தனி நபர்களால் இவற்றை சாதிக்க முடியாது. லட்சியநோக்குடைய அறிவியல் பூர்வமான தொலைநோக்குத் திட்டம் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி விவசாயிகளின் கட்சித் தேவை என்பதை - சோசலிசமே சமூகத்தின் எதிர்காலம் என்பதனை பகத்சிங் உணர்ந்திருந்தான். அதனை அழுத்தமாக மீண்டும் மீண்டும் அவனுடைய வார்த்தைகளில், பேச்சிலும் எழுத்திலும் கடிதங்களிலும் குறிப்புகளிலும் சிந்தனைகளிலும் பதிவு செய்துகொண்டே இருந்தான்.சிறையிலிருந்தபோது பகத்சிங் எழுதிய சோசலிசத் தத்துவம், சுயசரிதை, இந்தியப் புரட்சி இயக்கத்தின் வரலாறு, மரணத்தின் நுழைவாயில் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகள் கூட கிடைக்கவில்லை அழிக்கப்பட்டுவிட்டன. அவை நம் கையில் கிடைத்திருக்குமாயின் இந்திய புரட்சிக்கு இன்னும் கூர்மையான பாதை புலப்பட்டிருக்கக் கூடும். தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் கூட லெனின் எழுதிய புத்தகங்களை பகத்சிங் வாசித்துக்கொண்டிருந்தான் என்பது போகிறபோக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலல்ல.

மாறாக எதிர்கால இந்தியாவின் பயணப்பாதையை பகத்சிங் எப்படி உள்வாங்கிக் கொண்டிருந்தான் என்பதில் உயிரோட்டமுள்ள சான்றே அது.ஒரு சிறு கட்டுரையில் பகத்சிங்கின் மொத்த ஆளுமையையும் வரைந்து காட்டுவது எளிதானதல்ல. ஆயினும் அவன் ஆரம்பம் முதல் இறுதி வரை அளவற்ற அறிவுத் தேடலுடனும், எல்லையற்ற மன உறுதியுடனும் திகழ்ந்தான். குறுகிய சாதி, மத, இன எல்லை களைத் தாண்டியவனாக - புதிய உலகக் கண்ணோட்டம் கொண்டவனாக - சோசலிச சமூகத்தின் தூதுவனாக சமூக மாறுதலின் சாரதியாக - ஒட்டுமொத்தத்தில் இந்திய இளைஞர்களின் நம்பிக்கையின் குறியீடாக திகழ்ந் தான். மகாத்மாக்கள் அவனது பாதையை ஏற்கவில்லை. எதிர்த்தனர், விமர்சித்தனர், கைகொடுக்கத் தயங்கினர், கைவிட்டனர், ஆனால், இளைஞர்கள் அவனை கொண்டாடினர். மக்கள் தங்கள் நெஞ்சில் அவனை வரைந்து கொண்டனர். இந்திய சமூகத்தின் - குறிப்பாக இளைஞர் சமூகத்தின் மனசாட்சியாய் இன்றும் அவன் விளங்குகிறான். நாளையும் அவ்வாறே விளங்குவான்.

Pin It