மா.காளிதாஸ் கவிதைகள்
.
ஒரு மண்டலம்
1.
உங்களுக்கென எடுத்துவந்த பாத்திரம்
சற்றுமுன் காலியாகிவிட்டது
பாத்திரத்தின் வடிவம் அல்லது
கொண்டுவரப்பட்ட சூழல்
உங்களை மிகவும் பாதித்துவிட்டது.
காலிப் பாத்திரத்தை ஏற்பதா
நிரப்புவதா என்ற குழப்பத்தில்
இடப்பெயர்ச்சி அடைகிறது
உங்கள் சொந்த பாத்திரம்
பாத்திரத்தில் அச்சேறியிருக்கும் பெயர்
என்னவோ செய்கிறது உங்களை.
பாத்திரத்திலிருந்து கிளம்பும்
சன்னமான நெடியின் ஒவ்வாமை குறித்து
கவலை கொள்கிறீர்கள் மிகவும்.
வேண்டாமென்றால் விட்டுவிடுங்கள்
உங்களுக்குப் பிடித்த மாதிரி
உங்களுக்குப் பிடித்தமான சூழலில்
மாற்றுருவில் உங்களிடம் கையளிக்கப்படும்
அப்பாத்திரம்.
2.
யாரும் இல்லாத வீட்டில்
யாரோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்
யாரோ அழுது கொண்டிருக்கிறார்கள்
யாரோ சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ புணர்ந்து கொண்டிருக்கிறார்கள்
யாரோ காற்று வாங்க
வெளியே வருகிறார்கள்
யாருமற்ற வீட்டிலிருந்து
வெளிக் கிளம்பிச் செல்கிறது ஒரு புரவி.
காற்றில் கரைகின்றன
உடல் போன்ற உடல்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|