 |
கவிதை
வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...! எம்.ரிஷான் ஷெரீப்
மழை
பிடித்திருந்தது !
வேர்த்துப் புழுங்கிச் செத்து,
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து,
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது!
நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு,
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் - நான்
என்னை மறந்ததுமுண்டு!
வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு!
முகாம் கூரை விரிந்து
மழைத்துளி
முக்காடு நனைத்த கதைகளை,
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை,
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ - மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது !
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|