 |
கட்டுரை
எனக்கொன்றும் பிடிக்கவில்லை புகாரி
எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஆமாம் ஆமாம் எனக்கொன்றும்
பிடிக்கவில்லை
தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின் இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை
தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம் சொல்பவற்றுள்
உப்புமில்லை
எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை
அறிவுமனம் மயங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ
படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும் ஊற்றுகளும்
எழுவதுண்டோ
பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மை மட்டும்தான்
பிறக்கிறது
குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும் கோணலாகிச்
சிறுக்கிறது
அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம் ஐந்தெனக்குக்
கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
கவலை தாண்டி பொய்யற்று
வாழ்ந்திருப்பேன்
யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து எனக்குள்ளே
திணிக்கும் இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை
வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில் எல்லாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று புண்ணாவது
பிடிக்கவில்லை
தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த மூளைமரம்
வளர்த்துவிட்ட
மனம்செத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்
- புகாரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|