 |
கவிதை
மூன்றாம் பெயர்... த.அகிலன்
அவனது பெயரில் அழகிருந்தது..
அன்பும் கூட
அவனோடு எப்போதுமிருக்கும்
அவனது மென்புன்னகையைப் போலவும்
அவனது புன்னகை ஒரு வண்டு.
மற்றவர்களின் இதயத்தை
மொய்த்துவிடுகிற வண்டு.
அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன..
செல்லமாய் ஒன்றும்
காகிதங்களில் ஒன்றுமாய்
எதைக்கொண்டு அழைத்தாலும்
அவனது புன்னகை
ஒரே மாதிரியானதுதான்..
மாற்றமுடியாதபடி…
அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.
அம்மா மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றுவிடுமெனப்
புலம்பியபடியிருந்தாள்.
அவனது முதலிரண்டு பெயர்களையும்
திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருந்தாள்..
மந்திரங்களின் உச்சாடனம்போல..
இறுதியில் அந்த மூன்றாம் பெயர்
அவனைக் கொன்றது.
அம்மா பேச்சை நிறுத்தினாள்..
யாருமற்ற வெளியில்
அலைந்துகொண்டிருக்கிறார்கள்
முதலிரண்டு பெயர்களும்
மரணத்தால் எடுத்துச்செல்லமுடியாத
அவனது புன்னகையும்.. அம்மாவும்...
(தம்பி அன்பழகனுக்கு..)
- த.அகிலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|