புனைவுகளின் பெயரால்...
பா. அகிலன்
நானொரு ஆசியன்,
கடவுளர்களின் கண்டத்தைச் சேர்ந்தவன்
சமுத்திரங்களின் சொர்க்கத் தீவில்
வடகுடாவின் வெப்பத் தெருக்களில்
காட்டுப்பறவை.
நீங்கள் அறியீர்கள் என்னை
கட்டப்பட்ட புனைகதைச் சுவடிக்குள்
சிறையிடப்பட்டது எனது வரலாறு.
உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான்
உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும்
வேண்டப்படாத அசுத்த விருந்தினன்,
தேசங்களின் எல்லைகளைத் திருட்டுத்தனமாகக் கடக்கும்
கள்ளக் குடியேறி,
சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும்
முரட்டுப் போராளி...
அறியீர்கள் நீங்கள்
வரலாற்றின் மூத்தவேர்களில்
எனக்கொரு வீடு இருந்ததை
கவர்ந்து,
எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை
புனைவுகளின் பெயரால்
முடிவற்றுச் சீவியெடுக்கப்படும் குருதியின் வலியை
இல்லை,
அறிந்துள்ளீர்கள் அனைத்தையும் நீங்கள்,
எனினும்
அற்பமான உங்கள் நன்மைகளுக்கு
அவசியமானது
சதுரங்கப் பலகையில் தோற்க மறுக்கும்
முடிவற்ற எங்களின் குருதி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|