Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

மனவெளியின் 14வது அரங்காடல்
கே.எஸ். பாலச்சந்திரன், கனடா


கனடாவில் ரொரன்ரொவில் மார்க்கம் அரங்கில் 2007 ஜூலை மாதம் 8ந்திகதி (1மணி, 6மணி) இரு காட்சிகளாக நடைபெற்ற மனவெளியின் 14வது அரங்காடல் குறித்த பதிவுகள்.

Drama எல்லைகள் கடந்த தேடலும், அதன் அளிக்கையும், பார்வையாளர்கள்; அதை எதிர்கொள்ளும்; பக்குவம் பெறவைப்பதுமான ஒரு ஆரோக்கியமான நாடகச்சூழலை உருவாக்கும் முனைப்புடன் கனடாவில் ரொரன்ரொவில் 1996ல் ஆர்வமுள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனவெளி கலையாற்றுக்குழு கடந்த ஒரு தசாப்தகாலத்தில் பல பிறமொழி நாடகாசியர்களையும், நமது படைப்பாளிகளையும் அரங்குக்கு கொண்டு வந்ததோடு, திறமையுள்ள கலைஞர்களை இனம் கண்டு அவர்தம் ஆற்றலை வெளிக்கொணர்ந்ததோடு, உற்சாகமளிக்கும் பரந்துபட்ட பார்வையாளர்களையும் சம்பாதித்திருக்கிறது.

இப்பொழுதும் எப்பொழுதும்

அரசியல் ரீதியாக அது அண்மைக்கால அரசியலாக இருந்தாலும் தெளிவான தீர்க்கமான சுய அபிப்பிராயம் கொண்ட பிரித்தானிய நாடக எழுத்தாளரான ஹரோல்ட் பின்ரரின் நாடகத்தை துஷி ஞானப்பிரகாசம் மொழிபெயர்த்து "இப்பொழுதும் எப்பொழுதும்'' என்ற பெயரில் அரங்கேற்றியது.

கண்கள் கட்டப்பட்ட ஒரு பெண். அவளின் இரு மருங்கிலும் இருவர். அதிகாரம் தந்த பலத்தைப் பெற்றவர்கள். என்னவெல்லாமோ அவளுக்கு நடக்க போகின்றது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அது என்னவென்று திட்ட வட்டமாக சொல்லப்படாத போதிலும், அவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி வேறு சொற்களில் சொன்னாலும் அவர்கள் செய்வது ஒன்றைத்தான். துன்புறுத்தல் நிகழ்கிறது. ஆனால் எதிர்ப்பைக் காட்டும் வலுவை அந்தப் பெண் அல்லது அவள் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகம், மக்கள் கூட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

பின்ரரின் படைப்பை இயக்குனரின் பார்வையில் வெளிக்கொணரும் பாத்திரங்களாக கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளையும், சேகர் தம்பிராஜாவும், துவாரகா முனீஸ்வரராஜாவும் இயங்கினார்கள். வழக்கமாகவே துஷியின் நாடகங்களில் காணும் துல்லியமான அரங்க அசைவுகள், கட்டுக்கோப்பு இந்நாடகத்திலும் இருந்தன.

மொழியற்ற, வெறும் இசைக்கோலங்களின் பின்னணியில் நிகழ்த்தப்படும் நடனத்திலிருந்து நாம் பெறுவது என்ன? ஒரு சிலிர்ப்பு. ஒரு அனுபவம். தெரியாப் பொருளை கண்டுபிடிப்பதை விட தெரிந்ததொன்றை இனங்காணும் சந்தோசம். வெட்டி மறையும் மின்னல் கீற்றை பொந்துக்கூளு நுழையும் அணில் குஞ்சின் வால் நுனிக்கு ஒப்பிடும் ஒரு கவிதை கூறும் விந்தை. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

பல நடனவகைகளின், (மேற்கத்தைய நடனங்கள் உட்பட்ட) சாயல்கள் தெரிந்தன, துள்ளல்களும், ஒத்திசைவும் நன்றாகவே இருந்தன. வர்ணங்களின் பேதங்களைக் காட்ட இன்னும் அதிகமான நடன மணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.

சாகாத சத்திரங்கள்

கரைமீது அலை வந்து அடி பதித்த மணற்சுவடு
காற்றடித்து மணல் வீசும்
கடல் இருந்தோர் அலை வந்து
அலை பதித்த அடிச்சுவட்டை
அழித்து அங்கோர் சுவடமைக்கும்

உச்சஸ்தாயியை தொட முயற்சிக்காத திவ்வியராஜனின் குரலில் இந்த அழகான கவிதை வரிகள் மெல்லிய இசைப்பின்னணியில் மிக இனிமையானதோர் பாடலாக விரிந்து பரவியது.

தொடரப் போகும் சுடுசரங்களுக்கு, வானைக் கிழித்து மேவும் ஒளிகொண்ட வாண வேடிக்கைகளுக்கு, சுளீர்..சுளீர் என்ற ஓசையுடன் ஒவ்வொரு முறையும் மடங்கி நிமிரும் சாட்டையின் வீச்சுகளுக்கு, அதாவது சிவசேகரத்தின் ஏனைய கவிதைகளுக்கு முன்னால் வரவேற்பு வாசல் அமைத்தது போல முற்குறித்த இசைப்பாடலாக உருவெடுத்த அவரது கவிதை வந்து பொருந்தியது.

கவிதைகளின் தெரிவும் தொகுத்த முறையும் மிகவும் சிறப்பாகவிருந்தன. அதற்காகவும், ஒரு இளைஞனின் உற்சாகத்துடன். தன் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் கவிஞர் கந்தவனம் அவர்களை மிகவும் பாராட்டலாம்.

சற்றேனும் மிகைத்தன்மை தலைகாட்டாமல் இந்த நீண்ட கவிதையை சிறப்புற வழங்கிய கணபதி ரவீந்திரனும், நிகழ்வில் பங்கு கொண்ட ராஜன், இராஜ்மீரா ராசையா ஆகியோரும் வாழ்த்துக்குரியவர்கள்.

சிவசேகரத்தின் கவிதைகள் எல்லைகளைக் கடந்து, ஒலிக்கும் மனிதாபிமானத்தின் குரலாகவும், தேவையான பொழுதுகளில் தட்டிக்கேட்கும் வல்லமை உடையனவாகவும் இருக்கின்றமையால் உயிருள்ள கவிதைகளாக இயங்குகின்றன.

ஆங்காங்கே தலைகாட்டிய தடுமாற்றங்கள் கவிதா நிகழ்வின் வீச்சை சற்றே தளரச் செய்தன. அவ்வளவே.

இரண்டுக்கும் நடுவே

மண(மன)முறிவினால் பிரிந்து போன ஒரு தம்பதி. அவர்களிடையே தவணை போட்டு பந்தாடப் படும் இரண்டு பிள்ளைகள். அவர்களின் தந்தைவழிப் பாட்டி. எல்லாமே சட்டம் வகுத்த வழியில் சரியாகவே நடக்கின்றதாகத் தோன்றினாலும், சரியாகவே இல்லை என்கின்றனர் பிள்ளைகள். பிழை என்பதாகவே வாதாடும் பாட்டி.

உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துப் போகவில்லையென்றதால் பிரிந்துவிட்டீர்கள்.. எனக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாமல் விட்டால் நான் என்ன செய்வது..?

இந்த நியாயமான கேள்வியின் முன்வைப்போடு நாடகம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். Counselling சம்பந்தமான குறிப்புகள் சற்று அதிகமாகப் படவில்லையா? குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் அவர்களா?

Drama மகனாக நடித்த சிறுவன் சுஜீபன் கலாநாதன் புள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்விட்டான். அபாரம் என்பது போதாது.

காட்சிக்கான பகைப்புலம் எம் கவனத்தை ஈர்க்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். பலம்தான் சிவமணியின் பிரதியில் இருக்கின்றதே!

அரி ஓம் நம

அயனஸ்கோவின் ஆரம்பகால நாடகங்களில் ஒன்றான The Lession மிகுந்த சிக்கலானதும், அரங்கேற்றத்தில் சிரமத்தையளிக்க கூடியது என்றும் நான் கருதியதுண்டு. ஆனால் புது தில்லி யதார்த்தா கி.பென்னேஸ்வரன் இதைத் தழுவி நேரடிநாடகம் என்று நினைக்குமளவிற்கு வெகுசிறப்பான பிரதியை உருவாக்கியிருக்கிறார்.

மிகுந்த உற்சாகத்துடன் புதிய ஆசியரைத் தேடிவரும் ஒரு இளம்பெண், ஏதோ நடக்கப் போவதாக அபாய அறிவித்தல் கொடுத்துக் கொண்டிருக்கும் பணிப்பெண், சித்த சுவாதீனமற்றவரான ஒரு பேராசிரியர்.

ஆரம்பத்தில் புத்திசாலியான மாணவி போலத் தோன்றினாலும், போகப்போக அவள் புத்திக்கூர்மையற்றவள் என்று தெரியவருவதும், கொஞ்சம் கொஞ்சமாக பேராசிரியர் மனம் பிறழ்ந்து போய், பணிப்பெண் எதிர்பார்த்த முடிவை அடைவதுமான இந்நாடகத்தை பார்வையாளர்களும் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக் கொண்டமைக்கு பல காரணிகள் உண்டு.

பென்னேஸ்வரனின் மிகச்சிறப்பான பிரதி. புராந்தகன் இயக்குனராக அப்பிரதியின் வலுக்களை புரிந்து கொண்டு கலைஞர்களை ஆற்றுப்படுத்திய சீர்ச்சிறப்பு. பேராசிரியராக நடித்த குரும்பசிட்டி ராசரத்தினத்தின் நடிப்பு.

சொல்வதையே திருப்பச் சொன்னாலும் அதை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தொனியில் சொல்வதும், சொல்லிக் கொடுப்பதே ஒரு வெறியாக மாறுவதும், இடையிடையே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் - அவரது ஆளுமை முழுமையாகப் தெரியவந்த ஒரு அற்புதமான நடிப்புச் சாதனை.

இவற்றைப் போலவே மாணவியாக வந்த ருட்ளினி சண்முகநாதன் தன் அறிவுக்குறைவை வெளிப்படுத்தியதும், பேராசிரியன் மனப்பிறழ்வினால் பாதிக்கப்பட்டு தன் நோய்களைச் சொல்லும் இடங்களிலும், இறுதியில் வெடித்துச் சிதறுவதிலும் தன்பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.

பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு போதுமானதாக இருந்தது.

அரங்காடலின் வரலாற்றில் அரி ஓம் நம மிக நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய நாடகம்.

அதுமாத்திரமல்ல 14வது அரங்காடலே ஒரு திருப்புமுனைதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com