வீர வணக்கம் தோழனே...
குண. ஜெயசீலன்
முத்துக்குமரனே... முத்துக் குமரனே...
எங்கள் உயிரைக் கொன்று
உன்றன் உடல் தின்ற
தீ எங்கே?
தென்திசை தீண்டிய கந்தக நெருப்பால்
கருகிப் போன காவியனே
உன்னுடல் தின்றதீயின் நாக்கு
யாரின் நாக்கு?
ஈராயிரம் ஆண்டு முன்பு
ஆரியம் வைத்த - இனத் தீ
இன்று பாரத மாதா வடிவில்
உன்னைப் பலிகொண்ட பகைத் தீ.
தமிழினம் எழும்போதெல்லாம்
தர்மச் சக்கரத்தின் ஆரங்கள் பிடுங்கி
வேத வேள்வியில் வீசிடும்
விபீடிணக் கொடுங்கரமே
கதரும் - காவியும்.
முன்னைத் தீயின் இன்றைய மிச்சம்
நம் முத்துக் குமரனின் வடிவினைத் - தின்ற
வர்ணத்தின் எச்சம்.
காஷ்மீரத்து ரோஜாக்கள் பொசுக்கி
வடகிழக்கில் தாய்மைகள் கசக்கி
மக்களின் இயக்கங்கள் நசுக்கும்
மேலாண்மை செய்வதே பகவத் கீதம்
இதன் ஆன்மிகக் குரலே ராமன் நாதம்
அவற்றின் ஒற்றைமுகமே
இந்திய தேசம்.
சிங்களவனுக்கு பச்சை ரத்தம் பருகும்
பால பாடம் கற்றுக் கொடுத்த
செவிலித் தாய் திரிசூலம் எனில்
காண்டீபச் சங்கை
புத்த தேசத்துக்கு கைமாற்றியது
பார்ப்பனீயம்.
சாத்வீக முகம்; சத்திரியக் குணம் கலந்த
அர்த்த நாரீஸ்வர அவதாரமே
காங்கிரஸ்; பி.ஜே.பி.
அகண்ட இந்தியத்தின்
சோ - விஷமே
சோஷலிசம்.
பாராளுமன்ற பரமபத விளையாட்டில்
இனமான உணர்வெல்லாம்
சுருங்கிப் போன ராஜபாட்டை
இதில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு
பயணிப்பதே ராஜ தந்திரம்.
சாஸ்த்திரி பவனத்து தர்ப்பைப் புல்
உன்னைத் தானம் கொண்டதால்
சாதியம் மீறட்டும் தமிழ் நெருப்பு.
ஈழத்தாய் பெற்றிட்டாள்
ஒரேயொரு பெருமாவீரன்
தமிழ்த்தாய் பெற்றதிலே
பல நூறு கருணாக்கள்...
என் செய்வோம்... என் செய்வோம்...
முத்துக்குமார் நீ வைத்த ஊழித் தீயில்
வெளிச்சம் பெறுவது
ஈழம் மட்டுமல்ல
தமிழகமும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|